Wednesday, May 9, 2012

நித்தி-யிஸம்-பவர்


முடி துறந்து சாமியார் ஆனவர்களை பற்றி படித்து படித்து போரடித்திருந்த வேளையில் மாடர்ன் டே சாமியார்கள் துறவை மறந்து லெளதீக வாழ்க்கைக்கு திரும்பி வருவதற்காக ஏகத்துக்கும் மெனக்கெடுவதை பார்ப்பது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது. மதுரை ஆதீனமாக “நித்தியை” நியமித்த ஒலி-ஒளியைப் பார்த்த போது சிறுவயதில் இராமாயணத் தொலைக்காட்சித் தொடரில் பார்த்த ராமர் பட்டாபிஷேக வைபவம் நினைவில் நுழைந்து சடாரென விலகியது. இப்பொழுது ஆதீனமாக இருப்பவரும் நித்தியும் ஒருவருக்கொருவர் கிரீடத்தை தங்கள் தலைகளில் மாற்றி மாற்றி வைத்து புளங்காகிதம் அடைவதை எல்லா தொலைக்காட்சியும் ஐபிஎல் கிரிக்கெட் மேட்சுக்கு இணையாக கவர் செய்தது காணக் கிடைக்காதது. கூடிய விரைவில் மக்கள் காதில் இவர்கள் வைக்கபோகும் பூவையும் அப்படியே படம் பிடிக்க நம்மூர் மீடியாக்காரர்கள் இதே போல தயாராக இருப்பார்கள் என நம்புகிறேன்.

மக்கள் மத்தியில் சாமியார்கள் சர்வலோக வலி நிவாரணி மாதிரி மாறிவிட்டார்கள், இல்லாவிட்டால் சர்வ சாதரணமாக ஒரு கோடி ரூபாயை ஆதீனத்திற்கு அள்ளித் தெளித்துவிட்டு இன்னும் பல கோடியை பிறகு தருவேன் என நித்தி பேசுவதை எல்லாம் மக்கள் கேட்டுக்கொண்டிருக்கும் நிலைக்கு நாடு சென்றிருக்காது. ஐந்துக்கும் பத்துக்கும் இப்படி கீ-போர்டை தட்டிக்கொண்டிருப்பதற்கு பதிலாக சுவாமி ஜில்பானாந்தா மாதிரி ஏதாவது செய்து பார்க்கலாமா என்பதைப் போன்ற விபரீத கேள்விகளையெல்லாம் சில நண்பர்கள் விளையாட்டாக கேட்பதைப் பார்த்தால் விரக்தியின் உச்சியின் இருப்பவன் எவனாவது நிஜமாலுமே காவியை கையில் எடுத்து களங்கப்படுத்திவிடுவானோ என அடிவயிற்றில் கிலி பிடிக்கிறது.

கடவுள் பெயரை சொல்லி எவன் எவ்வளவு கறுப்பு பணத்தை சேர்த்தாலும் வருமானத்துறை அதிகாரிகள் கண்ணை கட்டிக்கொள்வார்கள் போலத் தெரிகிறது. முற்றும் துறந்தவனுக்கு எதற்கு தங்கத்தில் கிரீடமும் கேளிக்கை விடுதியை மிஞ்சும் செட்டப்பில் மடங்களும் என்பது மண்டையை குடைந்து கொண்டிருக்கும் கேள்வி. மூன்று வருடங்களுக்கு முன்பு திருவண்ணாமலை கிரிவல பாதையில் மூன்றாம் ஜாமத்தில் கஞ்சாவை உறிஞ்சியபடி அமாவாசை கரும் இருளில் நண்பர்களுடன் பேசியபடியே வந்த பேர் தெரியாத சித்தர் பாடிய பட்டினத்தார் பாடல் இன்றைய சாமியார்களுக்கு சாலப் பொருத்தம்.

“பொல்லாதவன், நெறி நில்லாதவன், ஐம்புலன்கள்தமை
வெல்லாதவன், கல்வி கல்லாதவன், மெய்யடியவர்பால்
செல்லாதவன், உண்மை சொல்லாதவன், நின் திருவடிக்கண்பு
இல்லாதவன், மண்ணிலேன்பிறந்தேன் கச்சியேகம்பனே”
=============================================================================================
ஆட்களை கடத்துவது நிச்சயமாக மாவோயிஸமும் இல்லை ஹீரோயிஸமும்  இல்லை என்பதை யாரவது ஒரு பக்கா கம்யூனிஸ்ட் தோழர், மாவோயிஸ்ட்டுகள் என்று தங்களைத் தாங்களே அழைத்துக்கொள்ளும் கூட்டத்திடம் சொல்லிவிடுவது நல்லது. எம்.எல்.ஏ, கலெக்டர் என இவர்கள் தொடர்ந்து மனிதர்களை கடத்துவதால் மார்க்ஸியம் மீதான தவறான இமேஜை தொடந்து உருவாக்கி கொண்டேயிருக்கிறார்கள். புரட்சி செய்பவனாக தங்களை காட்டிக்கொள்பவர்கள் சேகுவாரே-வின் டி-சர்ட்டை அணிந்து கொள்வதால் மட்டுமே பெரிய ஹீரோவாக மாறிவிடமுடியாது என்பதை யாராவது இவர்களுக்கு ஒதி விடுவது நலம்.

மாவோ-வும், இன்ன பிற கம்யூனிஸ்ட் பெருந்தலைகளும் தலைமறைவு வாழ்க்கையை வாழ்ந்தாலும் அவர்கள் போராட்டம் உழைக்கும் வர்க்கத்தை முன்னிறுத்தி மட்டுமே இருந்தது. ஆனால் இன்றைய அதிரி புதிரிகள் வெறும் கப்பம் வசூலிப்பதற்காக அந்த கொள்கைகளை பயன்படுத்திக் கொள்வது சகிக்கவில்லை. இதற்கு பேசாமல் முதலாளித்துவத்தை தழுவிவிடலாம் அட்லீஸ்ட் பொதுமக்கள் கொஞ்சம் நிம்மதியாக இருப்பார்கள். நாடோடி மன்னனில் எம்ஜியார் செய்த சாகஸகங்களையெல்லாம் கி.பி.2012 இல் செய்வேன் என இவர்கள் அடம்பிடிப்பது கொஞ்சம் ஓவராக இருக்கிறது அதுவும் நிஜத்தில். அப்படியே எதையாவது செய்தே தீருவேன் என அடம்பிடிப்பவர்கள் மக்களை நிஜமாகவே கொள்ளையடிப்பவர்களை கவனித்துக்கொண்டால் இந்தியாவின் 99.9% மக்கள் ஏன் என்று கூட கேட்கமாட்டார்கள். அதை விட்டுவிட்டு அமைதியாக தங்கள் பணியை செய்பவர்களையெல்லாம் சீண்டிக்கொண்டிருப்பதும் ஒன்றும் அறியாத கடைநிலை ஊழியர்களை சுட்டுக்கொல்வதும் மன்னிக்கவேமுடியாத குற்றம்.  

========================================================================================
காற்றாலை மூலமாக கிடைத்த/கிடைக்கும் அளவிற்கு அதிகமான மின்சாரத்தை சேமித்து வைக்க போதிய வசதிகள் இல்லை என்ற மின்சார வாரிய அறிக்கையினை சமீபத்தில் படித்தவுடன் தமிழ்நாட்டில் வெய்யிலில் அலையாமலே புத்தி பேதலித்தவனை போன்ற நிலையை உணர்ந்தேன். எப்பேர்ப்பட்ட அபாரமான புத்திசாலிகள்…நினைத்தாலே புல்லரிக்கிறது. மின்சாரத்துறை அமைச்சர் எதுக்கும் அம்மா கண்களில் படாமல் இருந்துகொள்வது நலம் இல்லையென்றால் ஒரு நல்ல சுபயோக சுபதினத்தில்  அம்மா ராஜ்பவனுக்கு கடிதம் அனுப்பிவிடுவார்கள். அப்புறம் ஹை-வோல்டேஜை தொடாமலே ஷாக் அடித்தது போன்ற ஒரு அனுபவம் கிட்டிவிடும்.

ஒரு பக்கம் பற்றாக்குறை இன்னொரு பக்கம், அள்ளி அள்ளி கொடுத்தாலும் அதை ஒழுங்காக உபயோக படுத்திக் கொள்ளத் தெரியாத கூட்டம். தமிழ்நாட்டு மக்களை சனி பகவான் ஒரு கை பார்க்காமல் போகமாட்டர் போலத் தெரிகிறது. ஒட்டுமொத்த ஜனங்களும் திருநள்ளாறு போய் வணங்கி நின்றாலும் கருணையே காட்டமாட்டார் என நம்புவோமாக. மழை பெய்தால் அதை வீணாக கடலில் கலக்கவிட்டு விட்டு மறுநாளே தண்ணீர் பஞ்சம் என தலையில் கைவைத்துக் கொள்வது, உபரியாக மின்சாரத்தை உற்பத்தி செய்தால் Capacitor Capacity தீர்ந்து போச்சு என பொறுப்பில்லாமல் பேசுவது…என்னப்பா நடக்குது…கத்திரி வெயில் காய்ச்சி எடுக்குது அது போதாதா இன்னும் நீங்க வேற இப்படி தனியா போட்டு வறுத்தெடுக்கனுமா…...ஓட்டு போட்ட மக்களுக்கு இப்படியெல்லாம் வேட்டு வைக்கனுமா..கொஞ்சம் யோசிச்சு செய்யுங்கப்பு.

Pre-Planning, Proactive Measure போன்ற வார்த்தைகள் எல்லாம் கெட்ட வார்த்தைகள் இல்லை என்பதை நம்மூர் மின்சாரத்துறை ஊழியர்களிடமும் அவர்களின் அமைச்சரிடமும் எடுத்து புரியும்படியாக சொல்பவர்கள் அடுத்த ஜென்மத்தில் 24X7 மின்சாரவசதி கொண்ட ஏதாவது ஒரு மேற்கத்திய தேசத்தில் பிறப்பதற்கான சாத்தியங்கள் மிக மிக அதிகம். மனிதனாக பிறக்காவிட்டாலும் அவர்கள் வீட்டு பூனைக்குட்டியாகவோ அல்லது நாய்க்குட்டியாகவோ பிறப்பது சர்வ நிச்சயம்.

காற்றாலைகளில் இருந்து வரும் சிறிய அளவிலான மின்சாரத்தையே சேமித்து வைக்க வழிக்க தெரியாமல் திணறுபவர்கள் கூடங்குளம் மின்சாரம் முழுவதையும் வழங்கவேண்டும் என கேட்பது புரியாத லாஜிக்காக இருக்கிறது. அப்படியே முழுதாக வழங்கினாலும் இதே டயலாக்கை மீண்டும் சொல்லிவிடுவார்களோ என நினைத்தால் இப்போதே இருட்டிக்கொண்டு வருகிறது.


Sunday, April 15, 2012

கொம்பு முளைத்த மனிதர்கள்

இந்திய வெளியுறவுத்துறையைச் சேர்ந்தவர்கள் அவ்வப்போது நாங்களும் ரவுடிதான் என குரல்விட்டு தங்கள் இருப்பை வெளிப்படுத்திக் கொள்வதில் ஒருவித அர்ப்ப சுகம் காண்கிறார்கள் போலத் தெரிகிறது. சமீபத்தில் ஷாருக்கானை அமெரிக்காவில் தடுத்து வைத்த விவகாரத்தில் இவர்கள் அடித்த ஜிங்சங்க்கா சத்தத்தில் காது ஜவ்வு கிழிந்து தொங்கிவிடும் போல இருக்கிறது. அமெரிக்காவிற்கு பணி நிமித்தமாக வந்து செல்பவர்களை முடிந்தால் கேட்டுப்பாருங்கள், இந்த மாதிரியான ஏர்போர்ட் விசாரணைகள் வழக்கமான ஒன்றுதான் என்பது தெளிவாக தெரியும். எல்லாவற்றிற்கும் மேலாக அது அவர்கள் நாட்டின் நடைமுறை. மும்பை ஏர்போர்ட்டில் இவருக்கு சலாம் அடித்து வழிவிடுவது போலவே உலகத்தின் எல்லா இடத்திலும் இதே போல நடத்தவேண்டும் என எதிர்ப்பார்ப்பது கேவலமான மனோநிலை. இதற்காக வரிந்து கட்டிக்கொண்டு கத்திக்கொண்டிருக்கும் தூதரக அடிபொடிகளையும் வெளியுறவுத்துறையையும் நினைத்தால் நீ வாங்குற அஞ்சுக்கும் பத்துக்கும் இது உனக்கு தேவையா அப்படின்னு கேட்கத் தோன்றுகிறது.

நாட்டின் எல்லா குடிமகன்களுக்காகவும் குரல் கொடுப்பதாக இருந்தால் இதேபோன்ற சூழ்நிலையை தினந்தோறும் உலகின் பல்வேறு நாடுகளில் சந்திக்கும் சாமான்ய மனிதனுக்காகவும் வரிந்து கட்டிக்கொண்டு பேசவேண்டும். அதைவிட்டு விட்டு சும்மா அரிதாரம் பூசிவிட்டார் என்பதற்காக ஒரு சாதாரண நடிகருக்காக பெரிய பந்தா காட்டுவது சகிக்கவில்லை. அமெரிக்காவில் ஏதோ இவரை மட்டும்தான் இப்படி செய்கிறார்கள் என்பதைப்போன்ற தோற்றத்தை உருவாக்க முயல்வது அதை பயன்படுத்தி கொஞ்சம் விளம்பரம் தேடிக்கொள்ள முயல்வது போன்ற செயல்களை விட்டு விட்டு வேறு ஏதாவது உருப்படியாக செய்யலாம். இந்த டிராமா எல்லாம் தியேட்டரில் விசிலடிக்கும் குஞ்சுககளுக்கு ஒ.கே. ஆனால் படித்த விஷயம் தெரிந்த ஆட்கள் சீண்டவே மாட்டார்கள். ஜார்ஜ் பெர்னாண்டஸ், அப்துல்கலாம், கமல்ஹாசன் போன்றவர்களுக்கும் இதே போன்ற சோதனைகளும் விசாரணைகளும் நடந்துள்ளன. அப்போதெல்லாம் இதே போல தேசபக்தி இவர்களுக்கு பீச்சி அடிக்கவில்லை….அதற்கான காரணமும் இன்றுவரை பிடிபடவில்லை. அப்துல்கலாமை விட நாட்டிற்காக அதிகமாக தன்னை அர்பணித்துக்கொண்டவர் ஷாருக்கான் என்பது இப்போதுதான் என்னைப் போன்றவர்களுக்கு புரிய ஆரம்பித்திருக்கிறது.

ஒட்டு மொத்த நிலைமை இப்படி இருக்கும்போது ஒரு சாதாரண நடிகர் என்ன வித்தியாசமாக எதிர்பார்க்கிறார் எனத் தெரியவில்லை. இதெல்லாம் பிடிக்கவில்லை என்றால் அமைதியாக இருக்கும் இடத்தில் இருந்துவிடலாம் அதைவிட்டு விட்டு இவ்வளவு தூரம் வருவானேன், வந்த பின் அவர்கள் நடைமுறையை குறைசொல்வது நியாயமாக படவில்லை. சட்டத்தின் முன் அனைவரும் சமம் அது அதிபராகவே இருந்தாலும் சரி…இதெல்லாம் தெரிந்தும் தெரியாதுது போல பாவ்லா காட்டுவது சரியாக படவில்லை.

உள்ளூர் ஏர்போர்ட்களில் அதிகாலை வேளைகளில் குழந்தையும் குட்டியுமாக வந்திறங்கும் ஒரு சாமன்ய மனிதனை கடுமையாக நடத்தி வெறுப்பின் உச்சத்திற்கே அழைத்துச் செல்லும் நம்மூர் கஸ்டம்ஸ் ஆட்களைவிட அமெரிக்காவில் பிற தேசத்தவர்களை நடத்துவிதம் எவ்வளவோ மேல். குழந்தையுடன் நிற்கும் பெண்களையும், வயதானவர்களையும் முன்னுரிமை அளித்து வழிவிடுவதில் தொடங்கி, எந்த தேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் அவர்களை மரியாதையுடன் விளிப்பது வரை ஒரு சக மனிதனை எந்தவிதத்திலும் மரியாதை குறைவாக நடத்துவது என்பது அரிதான ஒன்று. இதே நடத்தையை மீனம்பாக்கத்திலும், பெங்களூர் சர்வதேச விமான நிலையத்திலும், மும்பை விமான நிலையத்திலும் எத்தனை அதிகாரிகள் கடைப்பிடிக்கிறார்கள் என்பதை அவர்களின் மனசாட்சிக்கே விட்டுவிடுவது நல்லது. துபாயிலும் கத்தாரிலும் இருந்து ஊருக்கு திரும்பும் கூலித் தொழிலாளர்களை தெரு நாயை விட கேவலமாக நடத்தும் ஆயிரம் பேரை நம்மூர் ஏர்போர்ட்களில் காட்ட முடியும். உள்ளூரில் ஆயிரம் ஓட்டையை வைத்துக்கொண்டு வெறுமனே பிரபலமானவர் என்ற ஒரு காரணத்திற்காக ஷாருக்கானுக்காக வரிந்து கட்டிக்கொண்டு குரல் கொடுப்பது ஏறக்குறைய -------------- சமம்.

தனது தனிப்பட்ட பயணமாக யேல் பல்கலைகழகத்தில் குத்து ஆட்டம் போட வந்தவரை எல்லோரையும் போல சோதனைக்கு உட்படுத்துவதை ஏதோ மகாத்மா காந்தியை ரயிலில் இருந்து தள்ளி விட்டதற்கு சமமாக பாவித்து குரலை உயர்த்துவது முட்டாள்தனமானது. அவர்கள் நாட்டிற்கு வரும்போது அவர்களின் நடைமுறைக்கு இணங்குவதில் உடன்பாடில்லை என்றால் வராமல் இருந்துவிட வேண்டும். மீறி வருவதாக இருந்தால் அந்த நாட்டு சட்டத்திற்கு உட்படுவதற்கு எந்த தயக்கத்தையும் காட்டக்கூடாது. அதைவிட்டு விட்டு ஒவ்வொரு முறை வரும்போதும் நிறுத்தி வைத்து சோதனை செய்கிறார்கள் என குறை கூறி அதில் சுய விளம்பரம் தேடிக்கொள்வது கேவலமான செயல். இதில் ஆச்சரியமான விஷயம் அமெரிக்காவில் உள்ள எந்த ஒரு Desi அமைப்பும் இதை பெரிய விஷயமாகவே கருதவில்லை. காரணம் அதிபராகவே இருந்தாலும் சில சட்ட நடைமுறைகள் எல்லோருக்கும் சமம் எல்லோரும் அதை மதித்தே ஆக வேண்டும். இது எல்லாம் தெரிந்தும் சும்மானாச்சும் தெரியாதது போல இந்திய தூதரக அடிபொடிகள் அலட்டிக்கொள்வது பார்க்க சகிக்கவில்லை.

இவர் புகழ்பெற்ற நடிகர் என்பதற்காக இவருக்கு சட்ட நடைமுறைகள் பொருந்தாது என சொல்ல வருகிறார்களா என தெரியவில்லை. இதே நடைமுறையைதான் இந்தியாவில் எல்லா ஏர்போர்ட்டிலும் இவருக்கு தருவார்களா எனத் தெரியவில்லை. வேலை விஷயமாக வெளிநாடு செல்பவர்களும், திரும்பி வருபவர்களும் தினசரி கடந்து செல்லும் ஒரு இயல்பான தேவையான நிகழ்வை ஏதோ மாபெரும் தவறு என்பது போல சித்தரிக்க முயல்வது அபத்தமாக இருக்கிறது. ஷாருக்கானைப் போலவே எல்லா சாப்ட்வேர் என்ஜினியர்களும் ஒழுங்காக தங்கள் வரியை அரசுக்கு செலுத்துகிறார்கள், இன்னும் சொல்லப்போனால் அவர்களிடம் நடிகர்களிடம் இருப்பது போல கறுப்பு பணம் போன்ற வஸ்துக்கள் எல்லாம் குறைவு அல்லது இல்லவே இல்லை. ஷாருக்கானுக்கு கொடுக்கும் அதே சலுகையை/ மரியாதையை முதலில் இந்திய விமான நிலையங்களில் ஒழுங்காக வரி செலுத்தும் எல்லோருக்கும் கொடுப்பார்களா எனத் தெரியவில்லை. நடிப்பு அவரது தொழில் மற்றபடி இந்தியாவின் சராசரி அரசு ஊழியருக்கும் அவருக்கும் எந்த ஒரு பெரிய வித்தியாசமும் இல்லை. சும்மா மும்பையில் உட்கார்ந்து கொண்டு உலகமே தங்கள் காலடியில் போன்ற கனவில் மிதப்பதால் வரும் வினை இதெல்லாம். எல்லாவற்றிற்கும் மேலாக இந்த கூத்தெல்லாம் முடிந்தபின் யேல் பல்கலைக்கழகத்தில் அவர் விட்ட உதாரை கேட்டபோது அடுத்த முறை வரும்போது இவரை கூடுதலாக மேலும் பல மணிநேரம் நிற்க வைத்தாலும் தப்பே இல்லை எனத் தோன்றுகிறது. தவளை தன் வாயால் கெடும் என்பதற்கு சரியான உதாரணம். எஸ்.எம்.கிருஷ்ணாக்களும் நிருபமா ராவ்களும் தங்கள் போலி தேச பக்தியை ஒரு நடிகருக்காக வரிந்து கட்டிக்கொண்டு காட்டுவதை நிறுத்தாதவரை இம்மாதிரியான நிகழ்வுகளை இந்திய மீடியாக்களும் சாதாரணமாக கடந்து போகப் போவதில்லை.

கொசுறு: முடிந்தால் மும்பைக்குள் நுழைந்து பார் என ஒரு மாநில முதல்வரை நோக்கி சவால் விடும் ராஜ் தாக்கரே போன்ற கொசுக்களை கண்டிப்பதற்கு எந்த மத்திய அமைச்சருக்காவது துணிவு இருக்கிறதா என இதுவரை தெரியவில்லை. எஸ்.எம்.கிருஷ்ணா, ப.சி. போன்றவர்கள் எல்லாம் எங்கிருக்கிறார்கள் என்றேத் தெரியவில்லை. ஷாருக்கானுக்காக வரிந்து கட்டிக்கொண்டு மூச்சுவிடாமல் கதறிக்கொண்டிருக்கும் மீடியா ஆட்களை நோக்கி இப்படி கேட்க வேண்டும் போலத் தோன்றுகிறது…Do you guys have balls to stand up and speak the truth?

Friday, March 23, 2012

மின்சார கனவு

இந்திய அரசியல்வாதிகள் இப்போதெல்லாம் அறிவியல் பேசுகிறார்கள். சந்தோஷமான விஷயம். இன்னும் எத்தனை நாளைக்குதான் படிக்காத மேதை என சொல்லிக்கொண்டே இருப்பது என யோசித்திருப்பார்கள் போலத் தெரிகிறது. மத்திய அமைச்சர் திரு.நாராயணசாமி சில நாட்களுக்கு முன்பாக ஒரு கருத்தை சொல்லியிருந்தார். விமானம் மோதினால் கூட கூடங்குளம் அணுமின்நிலையத்துக்கு எந்த ஆபத்தும் நிகழாது என்பதுதான் அது. விமானம் என பொதுவில் சொல்லிவிட்டார், நல்ல வேளையாக இன்னும் ஒரு படி மேலே போய் சிங்கிள் என்ஜின் செஸ்னா-172 அல்லது போயிங்-747 என எதையாவது சொல்லியிருந்தால் கேட்ட மக்களுக்கு காது குளிர்ந்து போயிருக்கும். அட நம்ம அமைச்சர் இவ்வளவு பெரிய தகவல் களஞ்சியமா என மெய் மறந்து போயிருப்பார்கள். பொய் சொல்பவர்களை விட தவறான தகவல்களை அள்ளித் தெளிப்பவர்கள் ஆபத்தானவர்கள். அறிவியலை அரசியலுக்கு பயன்படுத்துவது ஏறக்குறைய மார்கரீட்டாவில் காபியை கலப்பதற்கு சமம். உள்ளே போனவுடனே வெளியே வந்துவிடும், போன வழியிலேயே.

வைகைப்புயல் வடிவேல் ஒரு படத்தில் தன்னோட அஸிஸ்டெண்ட்டிடம் சொல்வார். “நான் எடுத்துக் குடுக்குறேன் அடிச்சு விட்றா ஆளக்கான்னு”. நம்ம மத்திய அமைச்சரின் சமீபத்திய அறிக்கைகளைப் பார்த்தால் அப்படிதான் அடிச்சு விடுகிறாரோ என யோசிக்கவேண்டி இருக்கிறது. பார்லிமெண்ட் எலக்ஷன் சீக்கிரமா வரும்போல தெரியுது கொஞ்சம் பார்த்துபேசுவது நல்லது. மக்கள் ஓட்ட மாத்திப் போட்டுட்டா அப்புறம் நாம என்னதான் பேசினாலும் ஒரு பயலும் பத்திரிகையில அதை பப்ளிஷ் பண்ணமாட்டாங்க. .

அரசியல்வாதிகள் தான் தங்கள் அறிவு திறனை இப்படி போட்டு உடைக்கிறாங்கன்னு பார்த்தா, தமிழ்நாட்டுல இருக்குற இன்னொரு கூட்டம் கூடங்குளம் மின்நிலையத்துல ஆப்ரேஷன் தொடங்கினா அடுத்த நாளே தமிழ்நாட்டோட மின் தட்டுப்பாடு குறைஞ்சுடும்ன்னு கூச்சமே இல்லாம ஒரு பொய்யை சொல்லிக்கிட்டு இருக்கு. இதை பொய்யுன்னு கூட சொல்ல முடியாது, முட்டாள்தனம்னு வேணும்னா சொல்லலாம். அப்பா சாமிகளா நெய்வேலி, கல்பாக்கம், ராமகுண்டம், தாராப்பூர் என இப்படி எந்த இடத்துல மின்சாரத்தை உற்பத்தி பண்ணாலும் எல்லா அவுட்புட்டும் நேரா சென்ட்ரல் கிரிட்ல (central grid) போய் சங்கமம் ஆயிடும். அதுக்கப்புறம் அதை ஸ்டோர் பண்ணி வச்சுகிட்டு ஒவ்வொரு மாநிலத்துக்கும் கொஞ்சம் கொஞ்சமா பங்கு பிரிச்சு குடுப்பாங்க நம்ம டெல்லி கில்லிகள். இது கூடங்குளத்துக்கும் பொருந்தும்.

நிலைமை இப்படி இருக்கும்போது ஏதோ கூடங்குளத்துல இருந்து 11KV லைனை நேரா வூட்டு சந்துல இருக்குற 440/230V ட்ரான்ஸ்பார்மருக்கு (“மின் மாற்றி” ன்னு அழகான தமிழ்ல சொல்லலாம்) அனுப்பிடுவாங்க அங்க இருந்து நம்ம வூட்டுக்கு 3-பேஸ் லைன் போட்டு 24X7 கரண்ட் எடுத்துக்கலாம்னுற ரேஞ்சுல பேசிக்கிட்டு இருக்காதீங்க. வர வர ஊர்ல எல்லாருமே EB office JE மாதிரி பேச ஆரம்பிச்சுடாங்கப்பா கூடங்குளத்துல இருக்குற இரண்டு ரியாக்டரும் முழுசா உற்பத்தி தொடங்கி, அதை அப்படியே முழுசா தமிழ்நாட்டுக்கே திருப்பிவிட்டாலும் அந்த அவுட்புட் தமிழ்நாட்டோட தேவையில எத்தனை சதவீதத்தை ஈடுகட்டும்னு யாரும் ஒழுங்கா எந்த டேட்டாவையும் இதுவரைக்கும் சொல்லல. ஒவ்வொரு வருஷமும் அதிகரிச்சிக்கிட்டே போகும் டிமாண்ட்டுக்கு இன்னும் பத்து உலைகளை கட்டுனா கூட சமாளிக்கமுடியுமான்னு தெரியல.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, அணு மின் உலை வேணுமா வேண்டாமா அப்படிங்கற விஷயத்தை இப்ப பேசுறதுக்கு பதிலா இந்த ப்ராஜெக்ட் ஆரம்பிக்கும்போது பேசியிருந்தா நியாயமா இருந்திருக்கும். பத்து வருஷத்துக்கு மேலா வேலை நடந்து ப்ரடெக்ஷன் ஸ்டார்ட் பண்ணும்போது பிரச்சனையை கிளப்புறது நியாயமா படலை. ஆயிரம் ஆயிரம் கோடிகளை கொட்டித் தொடங்கும் ஒவ்வொரு ப்ராஜெக்டையும் ஏதாவது காரணத்திற்காக நிறுத்துவதால் இழப்பு நம்முடைய மக்களுக்குத்தான். அதே சமயம் இந்த உலையால் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அதை சமாளிக்ககூடிய அளவிற்கு நம்மிடம் Infrastructure வசதி இருக்கான்னு கண்டிப்பா தெரியலை. அப்படி இல்லைன்னா அதை எப்படி சரி பண்ணலாம் என யோசிப்பதுதான் இப்போதைக்கு நல்ல வழியாக இருக்கும்.
அமைச்சர்கள்/அரசியல்வாதிகள் சொல்வதை எல்லாம் கேட்டா இங்க பாதி பேருக்கு இந்த விஷயத்தோட அடிப்படை அறிவுகூட இல்லைங்கறது தெளிவாயிடும்.

இந்தியாவைவிட பலமடங்கு தகுதியும் திறமையும் உள்ள ஜப்பான் ஆளுங்களே (இதை சொன்னா மக்களுக்கு கோபம் வரும்) இந்த விஷயத்துல சமீபத்துல ஆடிப்போயிட்டாங்க ஸோ கண்டிப்பா நம்ம ஆளுங்க எந்த அளவுக்கு Prepared-ஆ இருப்பாங்கன்னு தெரிஞ்சுக்கலாம். போபால் விஷ வாயுவை Contain பண்ணவே திணறிட்ட நாம இந்த விஷயத்துல கொஞ்சம் Proactive ஆக இருந்துவிடுவது நல்லது. நாளைக்கு ஏதாவது பிரச்சனை வந்தா (எதுவும் வராது என நம்புவோம்) எல்லாரும் யாரையாவது கை காட்டிட்டு ஒதுங்கி போய்விடுவார்கள். பல கோடிகளை கொட்டித் தொடங்கிய சேது சமுத்திர திட்டத்தை தூக்கி குப்பையில் போட்டுவிட்டார்கள் அதற்கு சொல்லப்பட்ட சில்லியான காரணத்தை விட இந்த திட்டத்திற்கு எதிரான காரணங்கள் atleast technically valid, but it’s too late now. இனிமே இந்த திட்டத்தை எப்படி பாதுகாப்பா நிறைவேற்றலாம்னு யோசிக்குறதுதான் புத்திசாலித்தனமா இருக்கும். ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அசால்ட்டாக நின்று கொண்டிருக்கும் கோயில்களையும், நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு சிறு கசிவும் இல்லாத அணைகளையும், நினைவுச்சின்னங்களையும் கட்டியெழுப்பிய ஒரு நாடு இன்றைக்கு ஒரு சாதாரண மேம்பாலத்தைக்கூட ஐந்து வருடம் நிலைத்து நிற்கும்படி கட்டமுடியாமல் ஊழலில் திணறிக்கொண்டிருப்பது மன்னிக்கமுடியாத குற்றம். இந்த அளவுகோலை மனதில் வைத்து மக்கள் பயம் கொண்டால் இதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை.

இந்த பிரச்சனையெல்லாம் தீரணும்னா மக்களும் அரசாங்கமும் கொஞ்சம் அமைதியா யோசிச்சாதான் உண்டு, மத்த விஷயத்தை (அரசியல்/மதம்) கொஞ்சம் ஓரமா வச்சிட்டு இந்த அளவுக்கு மின்சார தட்டுப்பாட்டுக்கு என்ன காரணம், Alternate Source என்ன, Future requirement/growth expectation, எப்படி இருக்கும் போன்ற சமாச்சராங்களை ஒழுங்கா மனசாட்சியோட ஆராய்ந்து ஒரு நல்ல திட்டத்தை பாதுகாப்பா மக்கள் ஆதரவோடு நிறைவேற்றலாம். அட்லீஸ்ட் அடுத்த ஜெனரேஷன் பவர்கட் இல்லாத சொஸைட்டில வாழ வசதி பண்ணிட்டு போகலாம். நம்ம ஊர்ல Supply-Demand ratio gap அதிகமாயிடுச்சு, இனிமே நிலக்கரிய எரிச்சு, டேம் கட்டி, காற்றாலைய வச்சு எல்லாம் மின்சாரத்த தயாரிச்சுகிட்டு இருக்க முடியாது…அப்படியே தயாரிச்சாலும் அத வச்சி மக்களோட தேவையெல்லாம் முழுசா நிறைவேற்ற முடியாது. இதுதான் இன்றைய நிலவரம்.

ஊர்ல அவனவன் நாலு டி.வி, ரெண்டு ப்ரிட்ஜ், வீடு முழுக்க ஏ.சி-ன்னு ஏகத்துக்கும் முன்னேறிட்டாங்க. இதுக்கெல்லாம் மின்சாரம் வேணும்னா கொஞ்சம் Advanced Technology பயன்படுத்துனா தான் முடியும். போதாத குறைக்கு ஏகப்பட்ட தொழிற்சாலைகள் வேற முளைச்சிகிட்டே இருக்கு..மின்சாரம் இல்லாம அங்க வேலையே நடக்காது…நம்மூர் ஆளுங்களுக்கு தொழிற்சாலை வேணும், அங்க வேலையும் சம்பளமும் வேணும், ஏ.சி.வேணும், ஏ.சி.வச்ச கார் வேணும் ஆனா அனுமின்நிலையம் மட்டும் வேண்டாம்னு பொத்தாம் பொதுவா சொல்றது சரியா படலை. எந்த தொழில்நுட்பத்த வச்சி மின்சாரம் தாயரிச்சாலும் அதுல ரிஸ்க் இருக்கத்தான் செய்யும்…..Risk Mitigate பண்ற வழிய யோசிச்சா தான் முன்னேற முடியும்…இல்லைன்னா கஷ்டம்தான். அரசியல்வாதிகளையும் மக்கள் பிரதிநிதியாக தங்களை முன்நிறுத்திக் கொள்பவர்களையும் கொஞ்சம் ஓரமாக அமரச் சொல்லிவிட்டு இம்மாதிரியான திட்டங்களை சரியான தொழில்நுட்ப ஆட்களிடம் முழுமையாக ஒப்படைத்து அவர்களுக்கு தேவையான சப்போர்ட் மட்டும் கொடுத்தால் போதும். மற்ற விஷயங்கள் தானாகவே சரி செய்யப்பட்டுவிடும்.

இன்னொரு பக்கம் மின்சாரத்த சிக்கனமா பயன்படுத்துறதுக்கு மக்கள் பழகிக்கனும். (குடிக்கிற தண்ணியையே சிக்கனமா பயன்படுத்தாத பொதுமக்கள் மின்சாரத்தை எப்படி சிக்கனமா பயன்படுத்துவாங்க) இந்த விஷயத்துல அரசாங்கம் கொஞ்சம் கண்டிப்பாவே நடந்துக்கனும்..சும்மா ஓட்டுக்கு பயந்துகிட்டு எந்த ஆக்ஷனும் எடுக்காம இருந்தா அப்புறம் எல்லாரும் லாந்தர் விளக்குல தான் ராப்பொழுத கழிக்கவேண்டி வரும். இப்போதைக்கு Workaround கீழே உள்ள விஷயத்தை ட்ரை பண்ணலாம்.

--இலவச மின்சாரத்த நிறுத்திட்டு, விவசாயிகளுக்கு சலுகை விலையில கூடுதலா மின்சாரம் வழங்கலாம். இலவசமா கொடுத்து மின்சாரத்தோட அவசியத்தையே கேவலப்படுத்திட்டாங்க நம்மூர் அரசியல்வாதிங்க. சும்மா கிடைக்குது என்பதற்காக மின்சாரத்த வச்சி மக்களும் அளவுக்கு மீறி விளையாடிட்டாங்க. இப்ப வந்து குத்துது குடையுதுன்னு ஒப்பாரி வைக்கறதுல ஒரு லாபமும் இல்ல.

--வருசத்துல பத்து மாசம் சூரியன் சுட்டெரிக்குற நம்மூர்ல இன்னமும் சோலர் சிஸ்டத்த நிறைய பேர் பயன்படுத்தாம இருக்குறது மன்னிக்க முடியாத குற்றம். இனிஷியல் காஸ்ட் கொஞ்சம் அதிகம். ஆனால் நிறைய பேர் பயன்படுத்த ஆரம்பிச்சா விலை கண்டிப்பா குறையும். நிலத்தடி நீர் சேகரிப்பை கட்டாயம் ஆக்குன மாதிரி இதையும் கொஞ்சம் aggressive ஆக செயல்படுத்தினால் நல்லது. நாலு செல்போன் வச்சிக்கிட்டு பந்தா காட்டுற நம்ம ஆளுகளுக்கு அந்த பணத்த இந்த மாதிரி விஷயத்துல இன்வெஸ்ட் பண்றதுக்கு ஒன்னும் பிரச்சனை இருக்காது.

--Traditional lights க்கு பதிலா CFL மாதிரி engery saver பொருள அதிகமா பயன்படுத்தலாம். பாத்ரூமுக்கு 100W பல்ப எரிய விடுற மக்கள் இன்னமும் நம்ம ஊர்ல இருக்காங்க. கேட்டா அதுதான் பளிச்சுன்னு எரியுதுன்னு விளக்கம் வேற குடுக்குறாங்க. பாத்ரூம்ல எதுக்கு பளிச்சின்னு வெளிச்சம் வேணும்னு சரியா புரியல. இதுக்கு வசதி மட்டும் காரணம் இல்ல போதிய அளவு விழிப்புணர்வு இல்லாததும் ஒரு காரணம்.

--அப்புறம் இந்த Street Light சமாச்சாரம். இந்த விஷயத்துல நாம ரொம்ப மோசம். ஒன்னு அந்த பல்பு சுத்தமா எரியாது, இல்லைன்னா சும்மா கண்ணடிச்சிக்கிட்டே இருக்கும், அதுவும் இல்லைன்னா 24*7 எரிஞ்சுகிட்டே இருக்கும். இருட்டுனத்துக்கு அப்புறம் எரிய ஆரம்பிச்சு, பொழுதுவிடிஞ்ச உடனே அணைச்சாலே போதும் நிறைய எனர்ஜி சேமிக்கலாம். இந்த Street Light எல்லாத்துக்கும் சின்னதா ஒரு சோலார் சிஸ்டத்தை வச்சி அதுல இருந்தே மேனேஜ் பண்ண முடியும்.

--High-Engery Cosumption தேவைப்படுற தொழில்களை கொஞ்சம் Innovative-ஆ natural light use பண்ணுறதுக்கு ஐடியா பண்ணலாம்.

இந்த மாதிரி எதையாவது கொஞ்சம் பண்ணாத்தான் நாடு உருப்படும். இல்லைன்னா கொஞ்ச நாள்ல எல்லோரும் ஆல் இன் ஆல் அழகுராஜாவோட பெட்ரோமாக்ஸ் லைட் கடை முன்னாடி க்யூல நின்னு லைட் வாங்க வேண்டிய நிலைக்கு போயிடுவோம்.

Friday, March 9, 2012

The Great Wall of India



ரவி சாஸ்திரியும், திலீப் வெங்க்சர்க்காரும் டொக்கு வைப்பதில் கில்லாடிகள் (டொக்கு வைப்பது என்பது மட்டைப் போடுவது அல்லது ரன்னே எடுக்காமல் கிரிக்கெட் பார்க்கும் அனைவரையும் கடுப்பின் உச்சத்திற்கே அழைத்துச் செல்லும் நிகழ்வு) விக்கெட்டுகள் மள மளவென சரியும் போது டீமை பாஃர்முக்கு கொண்டு வருவதற்ககாக எல்லாப் ப்ளேயரும் அவ்வப்போது மட்டையை போடுவது ஒரு வகையான யுக்தி அல்லது சாணக்கியத்தனம். புலி பதுங்குவதை போன்ற சமாச்சாரம். ரன்னும் எடுக்காமல் அதே சமயம் விக்கெட்டையும் பறி கொடுக்காமல் எதிரணியை கொஞ்சம் காயவிடுவது என்பது 1980-களின் இறுதியில் ரொம்ப பிரபலம். இதில் மேற்படியாளர்கள் தில்லாலங்கடிகள். மட்டையைப் போட்டு நல்ல பாஃர்மில் இருக்கும் பெளலர்களை கொஞ்சம் டென்ஷனாக்கி பிறகு கிடைக்கும் கேப்பில் கொஞ்சம் ரன்னை தேற்றிவிடுவது இதுதான் அடிப்படை பார்மூலா.

அப்போதைய மேற்கிந்திய அணியை தவிர மற்ற எல்லா அணிகளுமே ஓரளவிற்கு இந்த பார்மூலாவை Adapt செய்து அவ்வப்போது ஜகா வாங்கி ஆடிக்கொண்டிருந்தார்கள். விவியன் ரிச்சர்ட்ஸ், கஸ் லோகி, ஜெஃப் துஜான் போன்ற வெஸ்ட் இண்டீஸ் முரட்டு காளைகளுக்கு இந்த டொக்கு வைக்கும் சடங்கில் உடன்பாடில்லாததல் கிடைத்த எல்லா பெளலர்களையும் கிழித்து தொங்க போடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்கள். உண்மையில் 1983 ப்ரூடென்ஷியல் கோப்பை இறுதிப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த பார்மூலாவை பயன்படுத்தி இருந்தால் கோப்பையை ஒருவேளை வென்றிருக்க கூடும்.…..மேட்சை விரைவாக முடிப்பதற்காக அவசரமாக ஆடிய விவியன் ரிச்சர்ட்ஸின் பேட்டிங்கும், கபில்தேவின் அந்த எவர்கிரீன் கேட்சும் அதிர்ஷ்ட தேவதையை அன்றைக்கு இந்தியாவின் பக்கம் திருப்பி விட்டுவிட்டது.

நம்மூர் ஸ்ரீகாந்த் ஏறக்குறைய விவியன் ரிச்சர்ட்ஸ் செய்வதைதான் பெரும்பாலும் செய்வார். ஆனால் ஓப்பனிங் இறங்கிவிடுவதால் இவருக்கு மிடில் ஆர்டரில் வந்து டொக்கு வைத்து மற்றவர்களை நோகடிக்கும் சந்தர்ப்பம் எல்லாம் கிட்டவேயில்லை என நினைக்கிறேன். கிடைத்திருந்தாலும் அவ்வளவு பொறுமை இருந்திருக்குமா எனத் தெரியவில்லை. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களே கதி கலங்கும் அளவிற்கு ஓப்பனர் சுனில் கவாஸ்கர் அவ்வப்போது டொக்கு வைத்து எனிமா கொடுக்காமலே இந்திய ரசிகர்களுக்கு வயிற்றில் அவ்வப்போது கலவரத்தை உண்டு பண்ணுவார்…அது தனிக்கதை.

1990-களின் தொடக்கத்தில் இருந்து மத்தி வரை இந்த டொக்கு வைக்கும் கலாச்சாரம் ஏறக்குறைய இந்திய அணியை கரையானைப் போல மெல்ல அழித்துக்கொண்டிருந்தது….ஜிம்பாப்வே போன்ற சுமாரான டீமிடம் கூட (உண்மையில் ஜிம்பாப்வே அணி சில சமயம் மற்ற அணிகளைவிட பெட்டராக ஆடக்கூடியது) போராடி போராடி ஜெயிக்கவேண்டிய நிலையில் இருந்த டீமை நவ்ஜோத் சிங் சித்துவும், அசாருதினும், மனோஜ் பிரபாகரும் அவ்வபோது முட்டுக்கொடுத்து காப்பாற்றி வந்தார்கள்..இடையிடையே நரேந்திர ஹிர்வானி போன்றவர்கள் வந்த வேகத்தில் காணாமலும் போய்க்கொண்டிருந்தார்கள். சத்தமேயில்லாமல் சச்சின் வளர்ந்துகொண்டிருந்தது இந்த காலகட்டத்தில் தான்.

ஒருவழியாக இந்திய கிரிக்கெட் அணி மறுபடியும் கொஞ்சம் அதிரடியாக ஆட ஆரம்பித்திருந்த நிலையில் தான் ராகுல் டிராவிட் இந்திய அணிக்கு வந்து சேர்ந்தார். முதல் சில ஆட்டங்களை பார்த்தவுடன் மனிதர் டொக்கு கலாச்சாரத்தை மீண்டும் அணிக்கு கொண்டு வந்துவிடுவாரோ எனத் தோன்றியது…ஆனால் குறுகிய காலத்திலேயே எல்லோரையும் கொஞ்சம் கொஞ்சமாக ஆச்சரியப்படுத்த தொடங்கினார் இந்த இந்திரா நகர் ஹீரோ. ஆரம்பத்தில் மெதுவாக தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக வேகம் பிடித்து கிடைக்கும் கேப்பில் பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் அடித்து இறுதியில் தனது ஆவ்ரேஜ் ஸ்கோரை கார்டில் கொண்டு வந்துவிடுவது இவரது தனி ஸ்டைல்.

சச்சினின் அதிரடியை கட்டுப்படுத்த எல்லா அணியும் வியூகம் வகுத்துக்கொண்டிருந்த நிலையில் சச்சினை கவிழ்த்தாலும் இந்திய அணி கவிழாது என்பதை ஒரு முறையல்ல பல முறை நிரூபித்துக் கொண்டேயிருந்தார் மனிதர், இதில் இவர் இறுதியாக ஆடிய இங்கிலாந்து போட்டிகளும் அடக்கம். அந்த டூரில் டபுள் டிஜிட் ஸ்கோரை ஒவ்வொரு மேட்சிலும் எட்டிபிடித்தது இவர் மட்டுமே தான் என நினைக்கிறேன். இதில் முக்கியமான விஷயம் ஒவ்வொரு கேமையும் சச்சினின் தோள் மீது ஏற்றிவைத்துவிட்டு எல்லா ப்ளேயரும் ரிலாக்ஸாக இருந்த காலகட்டத்தில் கூட சத்தமேயில்லாமல் சச்சினின் பாரத்தை குறைக்க பலமுறை தோள்கொடுத்தவர் டிராவிட் என்பதை கிரிக்கெட்டை அறிந்தவர்கள் நிச்சயம் ஒத்துக்கொள்வார்கள்.

Calm & Composed இதுதான் டிராவிடின் தாரக மந்திரம். சச்சின், ஷேவாக், கங்குலி மாதிரி பட்டையை கிளப்பாமலே ஸ்கோரை நைசாக உயர்த்துவதில் மனிதருக்கு நிகர் அவரேதான். இவரும் வி.வி.எஸ். லஷ்மனும் (வி.வி.எஸ் ஒரு குட்டி Wall, டிராவிடைப் போலவே நங்கூரம் பாய்ச்சி நின்று விடுவதில் இவரும் கில்லாடி) நின்று ஆடிய சில டெஸ்ட் போட்டிகள் இன்றைய 20-20 மேட்சுகளைவிட சுவாரசியமாக இருக்கும். ஒரு நாள் போட்டியை டெஸ்ட் போட்டி மாதிரி போட்டுத் தாக்கும் சிலருக்கு மத்தியில் டெஸ்ட் போட்டியை சில நேரங்களில் ஒருநாள் போட்டியைப் போன்ற சுவாரசியத்திற்கு கொண்டு சென்றவர்கள் இந்த இருவரும். கேப்டன், துணைக்கேப்டன், ஓப்பனிங்/மிடில் ஆர்டர், விக்கெட்கீப்பர் என எதை கொடுத்தாலும்
சராசரி இந்திய ரசிகனை ஏமாற்றாதவர் டிராவிட். எனக்கு தெரிந்தவரை மிக அதிகமான பெண் ரசிகைகள் இவருக்கு உண்டு என்பது மிகவும் சுவாரசியமான விஷயம். Down to Earth image, அந்த amul baby face என பல விஷயங்கள் இவரின் ப்ளஸ் பாயிண்ட் :-) கபில், ஸ்ரீகாந்தைப் போல இவரும் இந்திய கிரிக்கெட்டின் மார்கண்டேயன் தான்…எப்போது பார்த்தாலும் அதே பொலிவோடு இருப்பார் மனிதர்.

தனது ஆட்டத்தைப் போலவே அணியில் இருந்து ஓய்வு பெறுவதையும் ஆர்ப்பாட்டமே இல்லாமல் செய்ததற்காக ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் ரசிகனும் உங்களை நிச்சயம் கொண்டாடுவான் டிராவிட். இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடிய காலங்களில் உங்கள் சொந்த வாழ்க்கையின் அற்புதமான தருணங்களை பலமுறை நீங்கள் இழந்திருக்ககூடும் அதை எந்த ரசிகனாலும் நிச்சயமாக ஈடு செய்ய முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை. உங்களை இந்த நாள் வரை தோளில் தூக்கி வைத்து கொண்டாடிய இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் மிக அழகான, நேர்மையான, திறமையான ஒரு கிரிக்கெட் வீரரை இனிமேல் களத்தில் காணப்போவதில்லை என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. இந்திரா நகரின் தெருக்களில் கிரிக்கெட் விளையாடும் சிறுவர்களை பார்க்கும்போது இனி இயல்பாக உங்கள் முகம் நினைவில் வந்து போவதை எந்த ஒரு கிரிக்கெட் பித்தர்களாலும் தவிர்க்கமுடியாது.

We Miss You Dravid

Thursday, March 8, 2012

ஓவர் டூ டெல்லி

ஒரு வழியா ஐந்து மாநில தேர்தல் முடிஞ்சு ரிசல்ட்டும் வந்துடுச்சு. கவுண்டிங் எட்டு மணிக்கு தொடங்கினாலும் நம்ம மீடியாக்கார அண்ணாச்சிக சரியா ஏழு முப்பது மணிக்கே கடைய திறந்துட்டாங்க. தேர்தல் முடிவு எப்படி இருக்கும்னு அலசி ஆராய்ந்து காயப்ப்போட வழக்கம்போல ஊர்ல இருக்குற போணியாகாத வட்ட செயலாளர் வண்டு முருகன் மாதிரி ஆளுகள கொண்டு வந்து டீயும், பிஸ்கெட்டும் கொடுத்து கேமிரா முன்னால உட்கார வச்சிட்டு முதல் பெட்டிய திறக்கற வரைக்கும் நர்சரி ஸ்கூல் பாப்பா மாதிரி அமைதியா இருந்த காட்சி கண்கொள்ளாதது.

நம்ம ஊர்ல முன்னாடி எல்லாம் முதல்ல தபால் ஒட்டுன்னு ஒரு வஸ்துவ எண்ணி பர்ஸ்ட் ரவுண்ட் ரிசல்ட்டுன்னு நியுஸ வெளியவிடுவாங்க…அத அப்படியே மாலைமுரசு மாதிரியான மசாலா ஆளுங்க, ஆளுங்கட்சி முண்ணனி அப்படின்னு பில்டப் கொடுத்து பேப்பர வித்து காசு பண்ணிடுவாங்க…வந்த ஐம்பது தபால் ஒட்டுல யாரு முண்ணணியில இருந்தா என்ன, இல்லைன்னா என்ன….முழுசா எண்ணி முடிக்கும்போது இப்படி பில்டப் கொடுத்த ஆளுங்க பலபேர் டெபாசிட் எகிறி வேஷ்டி அவுந்து நிக்குறத எல்லாம் பல சமயம் பார்த்ததுண்டு…….சரி துண்டு பேப்பர மடிச்சு ஓட்டுப் போட்ட காலம் போய் பட்டன் ப்ரஸ் பண்ற அளவுக்கு முன்னேறிவிட்ட பிறகாவது கொஞ்சம் மாறியிருப்பாங்கண்னு பார்த்தா….ம்ம்ம்ம்ம்….நோ வே….நம்மூர் மீடியா தான் இப்படின்னு பார்த்தா, அந்த பக்கம் அண்ணன் ப்ரணாய் ராய் & கோ அதவிட படுமோசமா இருக்காங்க…உ.பி. ரிசல்ட் வெளிவர ஆரம்பித்த அடுத்த அரைமணி நேரத்துல இவங்க போட்ட சத்தத்துல காது ஜவ்வு கிழிஞ்சுடும் போல இருந்தது…முடியலடா சாமி….

மாயவதி மேல செம காண்டு போல இவங்களுக்கு, அந்த அக்காவ போட்டு ஒரேடியா தாக்கிகிட்டு இருந்தாங்க…நாலவது இடந்தான் அவங்களுக்கு என கற்பூரம் அடிக்காத குறையா சத்தியம் பண்ணிகிட்டு இருந்தாரு அந்த கூட்டத்துல ஒருத்தரு....மொத்தமே பத்து தொகுதியோட முண்ணனி தான் அப்ப ஓடிகிட்டு இருந்துச்சு……போதாத குறைக்கு அப்பப்ப சைக்கிள் கேப்ல பிஜேபி இரண்டாவது இடத்துக்கு வந்துடும்னு சொல்லி அந்த கட்சி ஆளு ஒருத்தர கொண்டு வந்து கேமிரா முன்னாடி நிறுத்தி காமெடி பண்ணிட்டாங்க…பாவம் அவரு தூக்க கலக்கத்துல எல்லா பெருமையும் எங்க தலைவருக்கேன்னு பொத்தாம் பொதுவா பேசி வச்சிட்டாரு…..மொத்த ரிசல்ட் வந்த பிறகு தான் புரிந்தது ஏன் அவரு அப்படி பேசினாருன்னு…கொஞ்சம் விவரமான ஆளுதான் அண்ணன்.

ஒரு வழியா முன்னூறு தொகுதியோட முண்ணனி வெளியான உடனே தெரிஞ்சு போச்சு, அண்ணாச்சி அகிலேஷ் பார்மூலா ஒர்க் அவுட் ஆயிடுச்சுன்னு, சமாஜ்வாடி பார்ட்டி 180+ முண்ணணிக்கு வந்த பிறகும் உ.பி.காங்கிரஸ் வாலா ஒருத்தர கூட்டி வந்து கேமிரா முன்னாடி நிறுத்தி நீங்க இவங்களுக்கு ஆதரவு கொடுப்பிங்களான்னு லூசுத்தனமா கேள்வி கேட்டுகிட்டு இருந்தாங்கப்பா….ஆனா அந்த காங்கிரஸ்கார அண்ணன் ரொம்ப நல்லவரு….எத கேட்டாலும் ஹைகாமண்ட் தான் முடிவு பண்ணும் அப்படின்னு கீறல் விழுந்த ரிக்கார்டு மாதிரி எல்லா கேள்விக்கும் இதையே பதிலா சொல்லிக்கிட்டு இருந்தாரு…..யோவ் உன்னோட மாநிலத்துல கட்சி என்ன பண்ணனும் நீ தான்யா மேலிடத்துக்கு சொல்லனும்…அவங்களே எல்லா முடிவும் எடுத்தா அப்புறம் நீங்க எதுக்கு மாநிலத்துல தலைவரா இருக்கீங்க….அது சரி..வாங்குற முப்பது சீட்டுக்கு யாரு முடிவு பண்ணா என்ன….இப்படியே போனா எல்லா மாநிலத்துலயும் கூடிய சீக்கிரம் பொட்டிய கட்டிட்டு கிளம்புங்கப்பான்னு சொல்லிட போறாங்க நம்ம மக்கள். இதுக்கு பிஜேபி கொஞ்சம் பெட்டர், யாருக்கும் ஆதரவு இல்ல…எங்களுக்கு மெஜாரிட்டி கிடைச்சா பார்த்துகலாம்னு நேராவே சொல்லிட்டாங்க. முடிவு இப்படிதான் இருக்கும்னு திடமா நம்பிட்டாங்க போல தெரியுது...நம்பிக்கை வீண்போகல :-)

நல்ல வேளை கடைசியா சமாஜ்வாடி கட்சி தனியாவே மெஜாரிட்டிய தேத்திட்டாங்க..இல்லைன்னா இந்த மீடியா ஆளுங்க நாங்க அப்பவே சொன்னோம்னு சந்துல சிந்து பாடி இருப்பாங்க…ஏறக்குறைய இதேதான் பஞ்சாப் முடிவுலயும் நடந்துச்சு…அங்க இருபது தொகுதியோட நிலவரம் தெரியும்போதே ஒரு அவரச குடுக்கை அடுத்த காங்கிரஸ் முதல்வர் யாருன்னு பேச ஆரம்பிச்சுடுச்சு…பொழுது விடிஞ்சு பார்த்தா அகாலி ஆளுங்க எல்லோரையும் காலி பண்ணிட்டு சிரிச்சிக்கிட்டு நிக்குறாங்க...கடைசி ஓட்டு எண்ணி முடிக்குற வரைக்கும் காத்திருக்கலைன்னாலும் அட்லீஸ்ட் ஒரு 75% முடியுறவரைக்கும் காத்திருந்து முடிவு பத்தி பேசுனா ஒரு அர்த்தம் இருக்கும்….அத விட்டுட்டு பத்து ஓட்டு எண்ணி முடிச்சவுடனே தைய்ய தக்கான்னு எதுக்கு இப்படி குதிச்சு ரகளை பண்ணுறாங்கண்னு தெரியுல…சின்னப்புள்ளைத்தனமா இருக்கு….தேர்தல்ல ஜெயிக்குறவன் தோக்குறவன விட இவங்க கொஞ்சம் emotional ஆயிடுறாங்க…ஏன்னு தெரியல...

இன்னமும் எந்த முதல்வரும் பதவியேற்காத நிலையில் இப்பவே பார்லிமெண்ட் எலக்ஷென் பத்தி கோதவுல குதிச்சிட்டாங்க…ஒரு பக்கம் காங்கிரஸ் உள்குத்து சத்தம் அதிகமாயிடுச்சு..இன்னொரு பக்கம் அன்னா ஹசாரே மாதிரி ஆளுக எங்களாலதான் காங்கிரஸ் தோத்துடுச்சுன்னு அடிச்சு விட ஆரம்பிச்சுட்டாங்க….இன்னும் சில நாட்கள்ல எல்லா மீடியாவும் டெல்லிக்கு ஷிப்ட் ஆகிடுவாங்க…இனிமே சத்தம் கொஞ்சம் அதிகமாயிடும்….இந்த நாட்டுல அரசியல்வாதிகள விட மீடியாக்கராங்க சத்தம் தான் வர வர தாங்க முடியல….என்ன கொடுமை சார் இது.

Sunday, January 22, 2012

துர்காதேவி

தமிழ்நாட்டில் மருத்துவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வை முன்னிறுத்தி டாக்டர் ருத்ரன் சமீபத்தில் பதிவொன்றை எழுதியிருந்தார். மருத்துவர்களின் ஒற்றுமையின்மையின் காரணமாக “ஸ்ட்ரைக்” என்னும் சுண்ணாம்பை அவர்களால் வேகவைக்க முடியவில்லை என குறிப்பிட்டிருந்தார். அவரது ஆதங்கத்தை ரசிக்க முடியவில்லை. மருத்துவர்கள் ஒற்றுமையுடன் “ஸ்ட்ரைக்” செய்திருந்தாலும் போய்விட்ட அந்த இரண்டு உயிர்களை திரும்ப கொண்டு வந்திருக்க முடியாது. இறுதியாக பராசக்தியிடம் சில கோரிக்கைகளை வைத்து பதிவை முடித்திருந்தார். அந்தப் பதிவின் ஈரம் காயும் முன்பாகவே மேற்கு வங்காளத்தில் பராசக்தியிடமே தங்கள் மேன்மையை காட்டிவிட்டார்கள் அரசாங்க ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர்.

பிரசவத்திற்கு வந்த ஒரு பெண்ணை இரண்டு அரசு ஆஸ்பத்திரி நிர்வாகங்கள் அலைகழிக்க விட்டிருக்கின்றன. விளைவு இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்துவிட்டு சாலையோரத்தில் அந்த பெண் இறந்திருக்கிறார். மனிதாபிமானமில்லாத இந்த செயலை கண்டித்து வேலை நிறுத்தம் செய்ய எந்த இரக்கமுள்ள மருத்துவரும் இதுவரை முன்வந்ததாக தெரியவில்லை. குறைந்தபட்சம் ஒரு கண்டன அறிக்கைகூட இதுவரை வெளிவரவில்லை. இறந்துபோனவள் சாதாரண மனுஷி, அவளுக்கெதற்கு இரக்கம் என விட்டிருக்கலாம். இறந்து போனவளின் பெயர் உமாதேவியாம். சுடுகாட்டை காவல் காப்பவனை காத்து நிற்பவள். தங்களின் அலட்சிய போக்கால் இறந்து போனது சாட்சாத் அந்த பராசக்தியேதான் என்பதாவது இவர்களுக்குத் தெரியுமா என்பது தெரியவில்லை. சினங்கொண்டவளாய் தீமையை அழித்தபடி நிற்கும் அந்த துர்கா தேவியின் காலடி மண்ணிலேயே நடந்துவிட்ட செயலுக்கு யாரிடம் சென்று நியாயம் கேட்பது எனத் தெரியவில்லை.

------------------------------------------------------------------------------------
ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் செய்தியை வெளியிட்டதற்காக நக்கீரன் பத்திரிகை வருத்தம் தெரிவிக்கவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. வரவேற்கவேண்டிய விஷயம். வெறும் பரபரப்பிற்காக எதை வேண்டுமானலும் செய்தியாக போடலாம் என்ற அரிப்பில் உள்ளவர்களுக்கு இந்த தீர்ப்பு கொஞ்சம் நிதானத்தைக் கொடுக்கும்..அதே சமயம் அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொண்டு பத்திரிகை அலுவலகத்தை தாக்கியது பற்றியோ அல்லது அவர்களால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட இடைஞ்சல்கள் பற்றியோ எந்த கருத்தையும் தெரிவிக்காமல் நீதிமன்றம் கழண்டு கொண்டது கொஞ்சம் நெருடுகிறது.

பதவியில் இருப்பவர்களின் வழக்கை மட்டும் உடனடியாக விசாரித்து நிவாரணத்தை வழங்கும் நீதிமான்கள் அதே வேகத்தை சாமன்ய மக்களும் வழங்கினால் நீதிதேவதை நிஜமாகவே சந்தோஷப்படுவாள். மின்வெட்டு, விலைவாசி உயர்வு, மக்களின் வரிப்பணத்தில் கோடி கோடியாய் செலவழித்து கட்டப்படும் அரசு அலுவலங்களை ஏதாவது வெற்று காரணத்தைச் சொல்லி தங்கள் Ego-விற்காக மாற்றிக்கொண்டேயிருக்கும் போக்கு போன்றவற்றையும் இதே வேகத்தில் கண்டித்தால் மக்களுக்கு கொஞ்சம் ஆறுதலாயிருக்கும்.

------------------------------------------------------------------------------------

எழிலக கட்டிட தீயை அணைப்பதற்காக போராடி தனது உயிரை இழந்திருக்கிறார் ஒரு மாவீரர். RIP Sir. இன்னும் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருப்பதாக தெரிகிறது. அனைவரும் விரைவில் குணமடைந்து நல்ல நிலைக்கு திரும்ப வாழ்த்துக்கள். வெறும் ஆயிரங்களில் சம்பளத்தை வாங்கிக்கொண்டு தங்கள் உயிரை பணையம் வைத்து பொதுமக்களின் உடமையைக் காக்க போராடும் இவர்கள் நிச்சயம் கொண்டாடப்பட வேண்டியவர்கள். தீயணைப்பு வீரர்களைப்போல வெள்ளித்திரையில் வேஷம் போடுபவர்களை தலையில் தூக்கி வைத்து ஆடும் மக்கள் நிஜமான இந்த ஹீரோக்களை நிராகரிப்பது நியாயமற்ற செயல்.

தமிழ்நாட்டில் மற்ற எல்லா அரசுத் துறைகளும் கொஞ்சம் வனப்பாக மாறிவிட்டாலும் தீயணைப்புத்துறை மட்டும் இன்னமும் அப்படியே பழமை மாறாமல் இருக்கிறது. எங்கள் பகுதியில் சிறுவயதில் பார்த்த தீயணைப்பு நிலையம் பல வருடங்கள் கடந்த பின்னும் இன்னமும் அதே நிலையில் தான் இருக்கிறது. எல்லா அரசு அலுவலகங்களும் புது புது கட்டிடங்களுக்கு குடிபெயர்ந்து விட்டபின்னும் இன்னமும் அதே இடத்தில் எந்த வித மாற்றமும் இல்லாமல் இவர்களை வைத்திருப்பது நியாமற்றதாக இருக்கிறது.

உலகில் உள்ள வளர்ந்த தேசங்களில், அமெரிக்கா உட்பட இந்த துறைக்கு கிடைக்கும் மரியாதையே தனி. நம்மூரிலும் இதே மரியாதையை கொடுத்து இவர்களை கொண்டாடினால் நாடு இன்னும் கொஞ்சம் சுபிட்சமடையும்

Sunday, January 8, 2012

எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க

இந்திய தேர்தல் ஆணையம் சில நேரங்களில் ரொம்ப சில்லியாக நடந்து கொள்கிறது. உ.பி.யில் யானை சிலைகளையும் அதன் காரணகர்த்தாவின் சிலைகளையும் துணியால் மூடினால் தான் ஆச்சு என இவர்கள் அடம்பிடிப்பது கொஞ்சம் ஒவராக இருக்கிறது. நாடு முழுவதும் உள்ள சிலைகள் ஏதாவது ஒரு சிக்னலை அல்லது சிக்கலை மக்களுக்கு கொடுத்துக்கொண்டேதான் இருக்கின்றன. தமிழ்நாட்டில் நான் பார்த்த எல்லா எம்.ஜி.ஆர் சிலைகளும் இரட்டை விரலை காட்டிக்கொண்டுதான் இருக்கின்றன. நேருவும் இந்திராவும் கையை உயர்த்தியபடி நிற்கும் சிலைகள் கூட காங்கிரஸ் கட்சியின் சின்னத்தை மறைமுகமாக மக்களுக்கு காட்டிக்கொண்டேதான் இருக்கின்றன.

இதே போக்கில் போனால் தேர்தல் முடியும்வரை உ.பி.யில் கோயில் யானைகளைகூட மக்கள் கண்ணில் படாமல் மறைத்து வைக்கும்படி சொல்வார்கள் போலத் தெரிகிறது. எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க. மூடி மறைக்கும்போதுதான் மனிதனுக்கு ஒரு விஷயத்தின் மீது அதிகமான ஈர்ப்பு ஏற்படுகிறது என்ற அடிப்படை லாஜிக்கூட தெரியாமல் என்ன சார் நீங்க….ஒரு விதத்துல பார்த்தா இது அந்த கட்சிக்கு ஓசி-யில கிடைக்குற விளம்பரம் தான். ஒருவேளை இந்த விதியை நாளை தமிழத்திற்குள் கொண்டுவந்தால் அதிகாலை சூரியனையும், மரத்தில் உள்ள அத்தனை இரட்டை இலைகளையும் திரை போட்டு மறைக்கவேண்டும் என சொல்லி விடுவார்களோ என பயமாய் இருக்கிறது. சோலார் சிஸ்டத்தை மொட்டை மாடியில் வைத்திருப்பவர்கள், அதிகாலையில் எழுந்து சூரிய நமஸ்காரணம் செய்பவர்கள் கொஞ்சம் Proactive ஆக இருந்துகொள்வது நலம்.

---------------------------------------------------------------------------------

புயல் சேதங்களை மத்திய குழு பார்வையிட்டு அறிக்கை தந்தபின் நிவாரணம் வழங்கப்படும் என்ற செய்தியை படித்தபின் உடம்பெல்லாம் புல்லரித்துப்போனது. புயல் வருவதைப்பற்றி ஒரு வாரமாக எல்லா ஊடகங்களும் கூவிக் கொண்டிருக்கும்போதே மத்திய குழுவை அந்த பகுதிக்கு முன்னெச்சரிக்கையாக அனுப்பி புயல் கரையை கடந்த உடனே சேதங்களை மதிப்பிட சொல்லியிருக்கலாம். எல்லாம் முடிந்து ஒரு வாரம் கழித்து இப்படி ஒரு அறிக்கையை விடுவது கேனத்தனமாக இருக்கிறது. மத்திய குழு வரும்வரை எதையும் சீர்செய்யாமல் இருக்கும்படி சொல்கிறார்களா என்பது தெரியவில்லை.

வருமுன் காப்போம் போன்ற நீதிக்கதைகளை எல்லாம் இனிமேல் பாடப்புத்தகத்தில் தயவு செய்து அச்சடிக்காதீங்கப்பா….அதையெல்லாம் படிச்சிட்டு சின்ன குழந்தைங்ககூட நம்மள பார்த்து கேவலமா சிரிப்பாங்க… புயல் வர்ற வரைக்கும் அந்த செய்தியை வச்சி கல்லா கட்டுன நம்மூர் மீடியாக்காரர்கள் புயலுக்கு பிறகு அங்க நடக்குற எந்த மேட்டரையும் கண்டுக்காம கேமராவா தூக்கிகிட்டு ஆஸ்திரேலியா பக்கம் போய்ட்டாங்க…அங்க நம்மள பிரிச்சி மேய்ஞ்சிக்கிட்டு இருக்காங்க….அடுத்த மேட்டர் சிக்குற வரைக்கும் வேற வழியில்ல அததான் காட்டியாகனும்…இல்லைன்னா கல்லா காலியாயிரும்…..நல்லாயிருங்கடே.

----------------------------------------------------------------------------------

நம்ம கிரிக்கெட் டீம் இனிமே வெளியே போய் ஜெயிக்கனும்னா அதுக்கு ஒரே வழி நம்மூர் Pitch Curator ஆளுங்கள வச்சி நாம விளையாடுற எல்லா பிட்சையும் ரெடி பண்ணனும் இல்லைன்னா எல்லா மேட்சையும் நம்மூர்லேயே நடத்திக்கனும்…இது ரெண்டுல ஒன்னு நடந்தாதான் இனிமே டெஸ்ட் மேட்ச் எல்லாம் ஜெயிக்கமுடியும்னு தோணுது. ஆஸ்திரேலியாவில ஏறக்குறைய எல்லா பிட்சுமே ரொம்ப quick and bouncy. அங்க seamers பப்பு மட்டும்தான் வேகும். முட்டு சந்துல கிரிக்கெட் ஆடுற கெஜாவுக்கு கூட இந்த டெக்னிக்கல் மேட்டர் தெரியும்…ஆனா நம்ம ஆளுங்க இதையெல்லாம் கண்டுக்குற மாதிரியே தெரியல.

நம்மூர்ல எல்லாமே flat pitch..பத்து ஓவர் போட்டு முடிச்சாலே பிட்ச் படுத்துக்கும், அதுக்கப்புறம் என்னதான் லொங்கு லொங்குன்னு போட்டாலும் பந்து தரைய விட்டு எழுந்துக்கவே ரொம்ப கஷ்டப்படும்…இந்த மாதிரி பிட்ச்ல மால்கம் மார்ஷல் இல்ல அவங்க தாத்தா வந்து போட்டாலும் ஒரு கட்டத்துக்கு மேல நம்ம ஆளுங்க ஈசியா சமாளிச்சிடுவாங்க. ஆனா ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்கா பக்கம் போனா பந்து கடைசி நாள் அன்னைக்குகூட தலைக்கு வருது…எவ்ளோ நேரத்துக்குத்தான் குனிஞ்சி நிமிர்ந்து எஸ்கேப் ஆகிக்கிட்டே இருக்கிறது….அதான் சீக்கிரமா திரும்பி வந்துடறாங்க. இது தெரிஞ்சும் அண்ணண் சுனில் கவாஸ்கர் புத்திசாலித்தனமா பேசுறதா நினைச்சிக்கிட்டு எதையோ பேசிகிட்டு இருக்காரு. போதாத குறைக்கு ஒவருக்கு எத்தனை பந்துன்னு தெரியாத மீடியா குழந்தைங்க வேற அவர மாத்துங்க இவர மாத்துங்கன்னு சொல்லி கடுப்பேத்திகிட்டு இருக்காங்க

ஜென்டில்மேன், இப்ப இருக்குற ஆளுங்கல்ல டிராவிட், தெண்டுல்கர், லஷ்மண் மாதிரி ஆளுங்களுக்கு தான் இந்த மாதிரி பிட்ச் பத்தி கொஞ்சம் தெரியும்…அவங்க ட்ரவுசரே அங்க அவுந்து நிக்குது. So புது ஆளுங்களுக்கு கொஞ்சம் டைம் ஆகும்….அதுவரைக்கும் அவங்கள ஆட விட்டுதான் பழகனும்…..வேற வழியில்ல…..இல்லைன்னா எல்லா டூருக்கும் புதுசு புதுசாதான் ஆள அனுப்பனும். இதெல்லாம் வேலைக்கு ஆகாதுன்னு நினனச்சா, வெளிநாட்டுல இருந்து ஒரு நல்ல Pitch Curator கொண்டு வந்து இங்க மைதானத்துல வேலையை பண்ணவிட்டு அதுக்கப்புறம் நம்ம Boys-ஐ ஒழுங்கா இங்க கொஞ்சம் ப்ராக்டிஸ் பண்ணச் சொன்னா மேட்டர் சால்வ் ஆகிடும்…அப்புறம் வெளிநாட்டு கோட்ச் எல்லாம் தேடி அலைய வேண்டியதில்ல. .இதச் சொன்னா நம்மள பைத்தியகாரன்பாங்க. பெர்த் பிட்ச் Curator கொஞ்சம் கருணை காட்டுனா அடுத்த டெஸ்ட்ல தப்பிச்சிக்கலாம்…இல்லைன்னா girls touching hand problem the same harry potter also deal the same problem, this sapter அப்படின்னு ஏதாவது சொல்லி சமாளிக்கவேண்டிய நிலைமைக்கு போய்டுவாரு நம்ம கேப்டன் தோணி அண்ணண்.

Tuesday, January 3, 2012

தென்கச்சி கோ. சுவாமிநாதன்

இன்று ஒரு தகவல்…எல்லோராலும் ரசிக்கபட்ட நிகழ்ச்சி. இப்போது மறு ஒலிபரப்பு செய்தாலும் நின்று கேட்டுவிட்டு செல்லலாம். ஆல் இந்திய ரேடியோவில் ஒலிப்பரப்பபட்ட பல நிகழ்ச்சிகள் மிகவும் கடியானதாக இருந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் இன்னமும் நினைவுகளில் பசுமையாக இருக்கின்றன. தென்கச்சி அவர்களின் ஐந்து நிமிட பேச்சை கேட்கவேண்டும் என்பதற்காக சரோஜ் நாராயண்சாமி செய்தியை வாசித்து முடிக்கும் வரை பொறுமையாக காத்திருந்ததெல்லாம் வாழ்க்கையின் பொற்கால தருணங்கள். சரோஜ் நாராயண்சாமி ஆணா அல்லது பெண்ணா என்ற சந்தேகம் நீண்ட நாட்களாக இருந்தது வேறு கதை.

ஐந்து நிமிடத்திற்கும் குறைவாகவே ஒலிபரப்பான இன்று ஒரு தகவல் நிகழ்ச்சியை இன்றைய தேதி வரை மற்ற எந்த ஒலிபரப்பாலும் அடித்துக்கொள்ள முடியவில்லை. ஜவ்வு மாதிரி இழுத்துக்கொண்டே செல்லும் தொலைக்காட்சி தொடரை இயக்கும் இயக்குநர்கள் ஏன் இந்த மாதிரி Short & Sweet ஆன நிகழ்ச்சியை யோசிக்காமலே இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

இந்த நிகழ்ச்சியின் ஹைலைட்டே இவர் சொல்லும் சில குட்டி கதைகளும், உதாரணங்களும் தான். நிகழ்ச்சியை ஆரம்பிக்கும்போதே மிகவும் யதார்த்தமாக எந்த வித பில்டப்பும் இல்லாமல் டாப் கியரில் மேட்டருக்குள் சென்றுவிடும் இவரின் இயல்பான பேச்சு நடை கேட்பதற்கு இனிமையானது. “இத இப்ப இங்க எதுக்கு சொல்றேன்னா” என இவர் பேசும் அந்த கோவை வட்டார பேச்சு காலையில் சிடு சிடுவென இருக்கும் மனிதர்களின் முகங்களில்கூட புன்னகையை வரவழைத்துவிடும்.

தமிழ்நாட்டில் சில குரல்கள் ஏறக்குறைய எல்லோருக்கும் மிகவும் பரிச்சயமானதாயிருக்கும். TMS, திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள், எம்.என்.நம்பியார், எம்.எஸ்.எஸ், சாலமன் பாப்பையா என நீண்டுகொண்டே போகும் இந்த பட்டியலில் சந்தேகேமே இல்லாமல் திரு. தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்களின் பெயரையும் சேர்த்துவிடலாம். விநாடி வினா, வயலும் வாழ்வும், இன்று ஒரு தகவல், L.R.Swamy விளம்பரம் என ஒரு காலத்தில் லயித்திருந்த ஆல் இந்திய ரேடியோ நிகழ்ச்சிகள் இன்று கேட்க விரும்பினாலும் கிடைக்காத பொக்கிஷங்களாக மாறி இன்னும் ஒரு வருடம் பின்னோக்கி போய்விட்டன. ஆனால் அந்த குரல்கள் மட்டும் மனதிற்குள் ஓயாமல் எதிரொலித்துக் கொண்டேயிருக்கின்றன.