Friday, March 23, 2012

மின்சார கனவு

இந்திய அரசியல்வாதிகள் இப்போதெல்லாம் அறிவியல் பேசுகிறார்கள். சந்தோஷமான விஷயம். இன்னும் எத்தனை நாளைக்குதான் படிக்காத மேதை என சொல்லிக்கொண்டே இருப்பது என யோசித்திருப்பார்கள் போலத் தெரிகிறது. மத்திய அமைச்சர் திரு.நாராயணசாமி சில நாட்களுக்கு முன்பாக ஒரு கருத்தை சொல்லியிருந்தார். விமானம் மோதினால் கூட கூடங்குளம் அணுமின்நிலையத்துக்கு எந்த ஆபத்தும் நிகழாது என்பதுதான் அது. விமானம் என பொதுவில் சொல்லிவிட்டார், நல்ல வேளையாக இன்னும் ஒரு படி மேலே போய் சிங்கிள் என்ஜின் செஸ்னா-172 அல்லது போயிங்-747 என எதையாவது சொல்லியிருந்தால் கேட்ட மக்களுக்கு காது குளிர்ந்து போயிருக்கும். அட நம்ம அமைச்சர் இவ்வளவு பெரிய தகவல் களஞ்சியமா என மெய் மறந்து போயிருப்பார்கள். பொய் சொல்பவர்களை விட தவறான தகவல்களை அள்ளித் தெளிப்பவர்கள் ஆபத்தானவர்கள். அறிவியலை அரசியலுக்கு பயன்படுத்துவது ஏறக்குறைய மார்கரீட்டாவில் காபியை கலப்பதற்கு சமம். உள்ளே போனவுடனே வெளியே வந்துவிடும், போன வழியிலேயே.

வைகைப்புயல் வடிவேல் ஒரு படத்தில் தன்னோட அஸிஸ்டெண்ட்டிடம் சொல்வார். “நான் எடுத்துக் குடுக்குறேன் அடிச்சு விட்றா ஆளக்கான்னு”. நம்ம மத்திய அமைச்சரின் சமீபத்திய அறிக்கைகளைப் பார்த்தால் அப்படிதான் அடிச்சு விடுகிறாரோ என யோசிக்கவேண்டி இருக்கிறது. பார்லிமெண்ட் எலக்ஷன் சீக்கிரமா வரும்போல தெரியுது கொஞ்சம் பார்த்துபேசுவது நல்லது. மக்கள் ஓட்ட மாத்திப் போட்டுட்டா அப்புறம் நாம என்னதான் பேசினாலும் ஒரு பயலும் பத்திரிகையில அதை பப்ளிஷ் பண்ணமாட்டாங்க. .

அரசியல்வாதிகள் தான் தங்கள் அறிவு திறனை இப்படி போட்டு உடைக்கிறாங்கன்னு பார்த்தா, தமிழ்நாட்டுல இருக்குற இன்னொரு கூட்டம் கூடங்குளம் மின்நிலையத்துல ஆப்ரேஷன் தொடங்கினா அடுத்த நாளே தமிழ்நாட்டோட மின் தட்டுப்பாடு குறைஞ்சுடும்ன்னு கூச்சமே இல்லாம ஒரு பொய்யை சொல்லிக்கிட்டு இருக்கு. இதை பொய்யுன்னு கூட சொல்ல முடியாது, முட்டாள்தனம்னு வேணும்னா சொல்லலாம். அப்பா சாமிகளா நெய்வேலி, கல்பாக்கம், ராமகுண்டம், தாராப்பூர் என இப்படி எந்த இடத்துல மின்சாரத்தை உற்பத்தி பண்ணாலும் எல்லா அவுட்புட்டும் நேரா சென்ட்ரல் கிரிட்ல (central grid) போய் சங்கமம் ஆயிடும். அதுக்கப்புறம் அதை ஸ்டோர் பண்ணி வச்சுகிட்டு ஒவ்வொரு மாநிலத்துக்கும் கொஞ்சம் கொஞ்சமா பங்கு பிரிச்சு குடுப்பாங்க நம்ம டெல்லி கில்லிகள். இது கூடங்குளத்துக்கும் பொருந்தும்.

நிலைமை இப்படி இருக்கும்போது ஏதோ கூடங்குளத்துல இருந்து 11KV லைனை நேரா வூட்டு சந்துல இருக்குற 440/230V ட்ரான்ஸ்பார்மருக்கு (“மின் மாற்றி” ன்னு அழகான தமிழ்ல சொல்லலாம்) அனுப்பிடுவாங்க அங்க இருந்து நம்ம வூட்டுக்கு 3-பேஸ் லைன் போட்டு 24X7 கரண்ட் எடுத்துக்கலாம்னுற ரேஞ்சுல பேசிக்கிட்டு இருக்காதீங்க. வர வர ஊர்ல எல்லாருமே EB office JE மாதிரி பேச ஆரம்பிச்சுடாங்கப்பா கூடங்குளத்துல இருக்குற இரண்டு ரியாக்டரும் முழுசா உற்பத்தி தொடங்கி, அதை அப்படியே முழுசா தமிழ்நாட்டுக்கே திருப்பிவிட்டாலும் அந்த அவுட்புட் தமிழ்நாட்டோட தேவையில எத்தனை சதவீதத்தை ஈடுகட்டும்னு யாரும் ஒழுங்கா எந்த டேட்டாவையும் இதுவரைக்கும் சொல்லல. ஒவ்வொரு வருஷமும் அதிகரிச்சிக்கிட்டே போகும் டிமாண்ட்டுக்கு இன்னும் பத்து உலைகளை கட்டுனா கூட சமாளிக்கமுடியுமான்னு தெரியல.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, அணு மின் உலை வேணுமா வேண்டாமா அப்படிங்கற விஷயத்தை இப்ப பேசுறதுக்கு பதிலா இந்த ப்ராஜெக்ட் ஆரம்பிக்கும்போது பேசியிருந்தா நியாயமா இருந்திருக்கும். பத்து வருஷத்துக்கு மேலா வேலை நடந்து ப்ரடெக்ஷன் ஸ்டார்ட் பண்ணும்போது பிரச்சனையை கிளப்புறது நியாயமா படலை. ஆயிரம் ஆயிரம் கோடிகளை கொட்டித் தொடங்கும் ஒவ்வொரு ப்ராஜெக்டையும் ஏதாவது காரணத்திற்காக நிறுத்துவதால் இழப்பு நம்முடைய மக்களுக்குத்தான். அதே சமயம் இந்த உலையால் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அதை சமாளிக்ககூடிய அளவிற்கு நம்மிடம் Infrastructure வசதி இருக்கான்னு கண்டிப்பா தெரியலை. அப்படி இல்லைன்னா அதை எப்படி சரி பண்ணலாம் என யோசிப்பதுதான் இப்போதைக்கு நல்ல வழியாக இருக்கும்.
அமைச்சர்கள்/அரசியல்வாதிகள் சொல்வதை எல்லாம் கேட்டா இங்க பாதி பேருக்கு இந்த விஷயத்தோட அடிப்படை அறிவுகூட இல்லைங்கறது தெளிவாயிடும்.

இந்தியாவைவிட பலமடங்கு தகுதியும் திறமையும் உள்ள ஜப்பான் ஆளுங்களே (இதை சொன்னா மக்களுக்கு கோபம் வரும்) இந்த விஷயத்துல சமீபத்துல ஆடிப்போயிட்டாங்க ஸோ கண்டிப்பா நம்ம ஆளுங்க எந்த அளவுக்கு Prepared-ஆ இருப்பாங்கன்னு தெரிஞ்சுக்கலாம். போபால் விஷ வாயுவை Contain பண்ணவே திணறிட்ட நாம இந்த விஷயத்துல கொஞ்சம் Proactive ஆக இருந்துவிடுவது நல்லது. நாளைக்கு ஏதாவது பிரச்சனை வந்தா (எதுவும் வராது என நம்புவோம்) எல்லாரும் யாரையாவது கை காட்டிட்டு ஒதுங்கி போய்விடுவார்கள். பல கோடிகளை கொட்டித் தொடங்கிய சேது சமுத்திர திட்டத்தை தூக்கி குப்பையில் போட்டுவிட்டார்கள் அதற்கு சொல்லப்பட்ட சில்லியான காரணத்தை விட இந்த திட்டத்திற்கு எதிரான காரணங்கள் atleast technically valid, but it’s too late now. இனிமே இந்த திட்டத்தை எப்படி பாதுகாப்பா நிறைவேற்றலாம்னு யோசிக்குறதுதான் புத்திசாலித்தனமா இருக்கும். ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அசால்ட்டாக நின்று கொண்டிருக்கும் கோயில்களையும், நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு சிறு கசிவும் இல்லாத அணைகளையும், நினைவுச்சின்னங்களையும் கட்டியெழுப்பிய ஒரு நாடு இன்றைக்கு ஒரு சாதாரண மேம்பாலத்தைக்கூட ஐந்து வருடம் நிலைத்து நிற்கும்படி கட்டமுடியாமல் ஊழலில் திணறிக்கொண்டிருப்பது மன்னிக்கமுடியாத குற்றம். இந்த அளவுகோலை மனதில் வைத்து மக்கள் பயம் கொண்டால் இதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை.

இந்த பிரச்சனையெல்லாம் தீரணும்னா மக்களும் அரசாங்கமும் கொஞ்சம் அமைதியா யோசிச்சாதான் உண்டு, மத்த விஷயத்தை (அரசியல்/மதம்) கொஞ்சம் ஓரமா வச்சிட்டு இந்த அளவுக்கு மின்சார தட்டுப்பாட்டுக்கு என்ன காரணம், Alternate Source என்ன, Future requirement/growth expectation, எப்படி இருக்கும் போன்ற சமாச்சராங்களை ஒழுங்கா மனசாட்சியோட ஆராய்ந்து ஒரு நல்ல திட்டத்தை பாதுகாப்பா மக்கள் ஆதரவோடு நிறைவேற்றலாம். அட்லீஸ்ட் அடுத்த ஜெனரேஷன் பவர்கட் இல்லாத சொஸைட்டில வாழ வசதி பண்ணிட்டு போகலாம். நம்ம ஊர்ல Supply-Demand ratio gap அதிகமாயிடுச்சு, இனிமே நிலக்கரிய எரிச்சு, டேம் கட்டி, காற்றாலைய வச்சு எல்லாம் மின்சாரத்த தயாரிச்சுகிட்டு இருக்க முடியாது…அப்படியே தயாரிச்சாலும் அத வச்சி மக்களோட தேவையெல்லாம் முழுசா நிறைவேற்ற முடியாது. இதுதான் இன்றைய நிலவரம்.

ஊர்ல அவனவன் நாலு டி.வி, ரெண்டு ப்ரிட்ஜ், வீடு முழுக்க ஏ.சி-ன்னு ஏகத்துக்கும் முன்னேறிட்டாங்க. இதுக்கெல்லாம் மின்சாரம் வேணும்னா கொஞ்சம் Advanced Technology பயன்படுத்துனா தான் முடியும். போதாத குறைக்கு ஏகப்பட்ட தொழிற்சாலைகள் வேற முளைச்சிகிட்டே இருக்கு..மின்சாரம் இல்லாம அங்க வேலையே நடக்காது…நம்மூர் ஆளுங்களுக்கு தொழிற்சாலை வேணும், அங்க வேலையும் சம்பளமும் வேணும், ஏ.சி.வேணும், ஏ.சி.வச்ச கார் வேணும் ஆனா அனுமின்நிலையம் மட்டும் வேண்டாம்னு பொத்தாம் பொதுவா சொல்றது சரியா படலை. எந்த தொழில்நுட்பத்த வச்சி மின்சாரம் தாயரிச்சாலும் அதுல ரிஸ்க் இருக்கத்தான் செய்யும்…..Risk Mitigate பண்ற வழிய யோசிச்சா தான் முன்னேற முடியும்…இல்லைன்னா கஷ்டம்தான். அரசியல்வாதிகளையும் மக்கள் பிரதிநிதியாக தங்களை முன்நிறுத்திக் கொள்பவர்களையும் கொஞ்சம் ஓரமாக அமரச் சொல்லிவிட்டு இம்மாதிரியான திட்டங்களை சரியான தொழில்நுட்ப ஆட்களிடம் முழுமையாக ஒப்படைத்து அவர்களுக்கு தேவையான சப்போர்ட் மட்டும் கொடுத்தால் போதும். மற்ற விஷயங்கள் தானாகவே சரி செய்யப்பட்டுவிடும்.

இன்னொரு பக்கம் மின்சாரத்த சிக்கனமா பயன்படுத்துறதுக்கு மக்கள் பழகிக்கனும். (குடிக்கிற தண்ணியையே சிக்கனமா பயன்படுத்தாத பொதுமக்கள் மின்சாரத்தை எப்படி சிக்கனமா பயன்படுத்துவாங்க) இந்த விஷயத்துல அரசாங்கம் கொஞ்சம் கண்டிப்பாவே நடந்துக்கனும்..சும்மா ஓட்டுக்கு பயந்துகிட்டு எந்த ஆக்ஷனும் எடுக்காம இருந்தா அப்புறம் எல்லாரும் லாந்தர் விளக்குல தான் ராப்பொழுத கழிக்கவேண்டி வரும். இப்போதைக்கு Workaround கீழே உள்ள விஷயத்தை ட்ரை பண்ணலாம்.

--இலவச மின்சாரத்த நிறுத்திட்டு, விவசாயிகளுக்கு சலுகை விலையில கூடுதலா மின்சாரம் வழங்கலாம். இலவசமா கொடுத்து மின்சாரத்தோட அவசியத்தையே கேவலப்படுத்திட்டாங்க நம்மூர் அரசியல்வாதிங்க. சும்மா கிடைக்குது என்பதற்காக மின்சாரத்த வச்சி மக்களும் அளவுக்கு மீறி விளையாடிட்டாங்க. இப்ப வந்து குத்துது குடையுதுன்னு ஒப்பாரி வைக்கறதுல ஒரு லாபமும் இல்ல.

--வருசத்துல பத்து மாசம் சூரியன் சுட்டெரிக்குற நம்மூர்ல இன்னமும் சோலர் சிஸ்டத்த நிறைய பேர் பயன்படுத்தாம இருக்குறது மன்னிக்க முடியாத குற்றம். இனிஷியல் காஸ்ட் கொஞ்சம் அதிகம். ஆனால் நிறைய பேர் பயன்படுத்த ஆரம்பிச்சா விலை கண்டிப்பா குறையும். நிலத்தடி நீர் சேகரிப்பை கட்டாயம் ஆக்குன மாதிரி இதையும் கொஞ்சம் aggressive ஆக செயல்படுத்தினால் நல்லது. நாலு செல்போன் வச்சிக்கிட்டு பந்தா காட்டுற நம்ம ஆளுகளுக்கு அந்த பணத்த இந்த மாதிரி விஷயத்துல இன்வெஸ்ட் பண்றதுக்கு ஒன்னும் பிரச்சனை இருக்காது.

--Traditional lights க்கு பதிலா CFL மாதிரி engery saver பொருள அதிகமா பயன்படுத்தலாம். பாத்ரூமுக்கு 100W பல்ப எரிய விடுற மக்கள் இன்னமும் நம்ம ஊர்ல இருக்காங்க. கேட்டா அதுதான் பளிச்சுன்னு எரியுதுன்னு விளக்கம் வேற குடுக்குறாங்க. பாத்ரூம்ல எதுக்கு பளிச்சின்னு வெளிச்சம் வேணும்னு சரியா புரியல. இதுக்கு வசதி மட்டும் காரணம் இல்ல போதிய அளவு விழிப்புணர்வு இல்லாததும் ஒரு காரணம்.

--அப்புறம் இந்த Street Light சமாச்சாரம். இந்த விஷயத்துல நாம ரொம்ப மோசம். ஒன்னு அந்த பல்பு சுத்தமா எரியாது, இல்லைன்னா சும்மா கண்ணடிச்சிக்கிட்டே இருக்கும், அதுவும் இல்லைன்னா 24*7 எரிஞ்சுகிட்டே இருக்கும். இருட்டுனத்துக்கு அப்புறம் எரிய ஆரம்பிச்சு, பொழுதுவிடிஞ்ச உடனே அணைச்சாலே போதும் நிறைய எனர்ஜி சேமிக்கலாம். இந்த Street Light எல்லாத்துக்கும் சின்னதா ஒரு சோலார் சிஸ்டத்தை வச்சி அதுல இருந்தே மேனேஜ் பண்ண முடியும்.

--High-Engery Cosumption தேவைப்படுற தொழில்களை கொஞ்சம் Innovative-ஆ natural light use பண்ணுறதுக்கு ஐடியா பண்ணலாம்.

இந்த மாதிரி எதையாவது கொஞ்சம் பண்ணாத்தான் நாடு உருப்படும். இல்லைன்னா கொஞ்ச நாள்ல எல்லோரும் ஆல் இன் ஆல் அழகுராஜாவோட பெட்ரோமாக்ஸ் லைட் கடை முன்னாடி க்யூல நின்னு லைட் வாங்க வேண்டிய நிலைக்கு போயிடுவோம்.

No comments: