Showing posts with label விளையாட்டு. Show all posts
Showing posts with label விளையாட்டு. Show all posts

Sunday, June 20, 2010

வுவுஸலாஃ – Vuvuzela

சில வருடங்களுக்கு முன்னால் ஏதோ ஒரு சானலில் மீசை முருகேஷ் அவர்கள் நாம் தினசரி வாழ்க்கையில் பயன்படுத்தும் ஸ்பூன், தட்டு, அமுல் பேபி பவுடர் டின் ஆகிய பொருட்களை வைத்து வித விதமான ஓசையை ஏற்படுத்தி பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திக்கொண்டிருந்தார். படிக்கும் நாட்களில் என்.சி.சி. கேம்பின் போது அலுமினியத்தால் செய்யப்பட்ட அன்ன(க்)கூடையை தலைகீழாக கவிழ்த்துப்போட்டு அடி பின்னி எடுப்பார்கள் சக மாணவர்கள்….இந்த ஓசையின் காம்பினேஷனில் கானா பாடல்களை கேட்கும் வாய்ப்பு கிடைத்தவர்கள் அடுத்த பத்து தலைமுறைக்கு எந்த புண்ணியமும் செய்ய வேண்டியதில்லை :-) ஆடாத கால்களையும் ஆட வைக்கும் ஒரு துள்ளல் இசையை மிகவும் சாதாரணமாக வெளிப்படுத்திவிடுவார்கள்.

நேர்த்தியான இசைக்கருவிகளின் ஓசையை விட இம்மாதிரியான சாதாரணமான பொருட்களை கொண்டு வெளிப்படுத்தப்படும் ஒசை பல நேரங்களில் ஆளை உருக்கி எடுத்துவிடும். இரண்டு அடிக்கு இரண்டு அடி அலுமினியம் அல்லது ப்ளாஸ்டிக் துண்டை அப்படியே புனல் போல மடித்து நம்மூர் ஆட்டோக்காரர்கள் பயன்படுத்தும் பல்ப் ஹார்ன் போன்றதொரு சமாச்சாரத்தை உருவாக்கிவிட்டார்கள்…..பெயர் மட்டும் கொஞ்சம் ஆப்பிரிக்கத்தனமாக இருக்கிறது…வுவுஸலாஃ (Vu-Vu-Zela)

ஆயிரம் கொசுக்கள் காதருகே வந்து ஒரே நேரத்தில் ரீங்காரமிடுகிற மாதிரி இருக்கிறது வுவுஸலாஃவிலிருந்து வெளிவரும் ஒலியின் ஓசை. இதமாகவும் இல்லாமல் எரிச்சலையும் ஏற்படுத்தாமல் வித்தியாசமாக ஒலிக்கிறது இந்த மினி ஹார்ன். 2010 உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டிகளில் இன்றைய தேதிக்கு கதாநாயகன் இந்த இசை கருவிதான். நம்மூர் நாதஸ்வரத்தில் இருக்கும் துவாரங்களை எடுத்துவிட்டு, அதை இரண்டு அடியாக உருக்கி சுருக்கி எடுத்தது மாதிரியான தோற்றம்….இதை வாசிப்பதற்கு வித்வானாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது கொஞ்சம் ஆறுதலான விஷயம்.

விடலைப்பையன்கள் முதல் விவரம் தெரிந்தவர்கள் வரை ஊதுகிறார்கள்….ஊதிக்கொண்டே இருக்கிறார்கள். ஒவ்வொரு போட்டியின் போதும் தொடர்ந்து தொண்ணூறு நிமிடங்கள் இந்த கருவியிலிருந்து வெளிப்படும் ஓசை பிண்ணணியில் கசிந்தபடி இருக்கிறது. தென்னாப்பிரிக்க அணி பங்கு கொண்ட போட்டிகளின்போது கொஞ்சம் டெஸிபலை கூட்டி எதிரணி மற்றும் தொலைக்காட்சி வர்ணணையாளர்களை ஏகத்தும் சூடேற்றிக்கொண்டிருந்தார்கள் லோக்கல் கால்பந்தாட்ட ரசிகர்கள். குழுவாக செயல்பட்டு மாறி மாறி ஊதிக்கொண்டே இருப்பார்கள் போல தெரிகிறது.

ஒவர் நைட்டில் உலகப்புகழ் பெற்றுவிட்ட வுவுஸலாஃவிற்கு ஆதரவும் எதிர்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. பல மொபைல் போன்களில் வுவுஸலாஃவின் வித்தியாசமான ஒலி தான் இப்போதைக்கு ரிங்டோன்….போட்டி ஆரம்பித்த நாளில் இருந்து இன்று வரை இந்த கருவியை விளையாட்டு மைதானத்திற்குள் பயன்படுத்த தடை விதிக்ககோரி வைக்கப்பட்ட அனைத்து வேண்டுகோளையும் பிஃபா நிராகரித்துவிட்டது. கால்பந்து, கிரிக்கெட் போன்ற போட்டிகளை டென்னிஸ் அல்லது கோல்ப் போட்டியை ரசிப்பது போல அமைதியாக ரசிக்க ஆரம்பித்தால் மிகவும் அபத்தமாக இருக்கும். போட்டியின் சுவாரசியமே தகர்ந்து போகும்.

ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இம்மாதிரியான போட்டிகளின் போது அங்குள்ள கலாச்சாரத்தை அம்மக்கள் பிரதிபலிக்க தவறுவதில்லை..அவர்கள் கைதட்டியும், கோரஸாக சத்தமிட்டும் தங்கள் ஆர்ப்பரிப்பை வெளிப்படுத்துவது போல ஆப்பிரிக்க மக்கள் தங்கள் தேசத்தில் ஒரு இசைக்கருவியின் மூலம் அவர்களின் கொண்டாடத்தை வெளிப்படுத்துகிறார்காள். இதை புரிந்தும் ஏற்றுக்கொள்ள மறுப்பவர்களுக்கு ஒன்றே ஒன்றைதான் சொல்ல முடியும்.

Be a Roman when you are in Rome

Thursday, June 17, 2010

பரிட்டோ பெளல் Vs ப்ரெஞ்ச் கிஸ்

சனி உச்சத்தில் இருக்கிறார் ப்ரெஞ்ச் கால்பந்தாட்ட குழுவிற்கு…சாண் ஏறினால் இரண்டு முழம் சறுக்குவது என சத்திய பிரமாணமே எடுத்திருப்பார்கள் போல தெரிகிறது. 1998 இல் சாம்பியன், சரியாக நாலு வருடம் கழித்து 2002 இல் செனேகல் என்ற கத்துகுட்டி அணி சாம்பியன்களை கிழிப்பது எப்படி என வகுப்பெடுத்துக் காட்டினார்கள். ஒருவழியாக அதிலிருந்து மீண்டு மறுபடியும் 2006 இல் இறுதி போட்டி வரை முன்னேறினார்கள் பாரீஸ்வாலாக்கள், 2010 இல் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிவிட்டது. இம்முறை செனேகல் இடத்தை மெக்ஸிகோ எடுத்துக்கொண்டது…கிழி கிழியென கிழித்துவிட்டார்கள் பிரான்ஸ் அணியை. பேசாமல் ப்ரெஞ்ச்காரர்கள் இனிமேல் எட்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக கோப்பை போட்டிகளில் கலந்து கொண்டு கொஞ்சம் சேதாரத்தை குறைக்கப்பார்க்கலாம்..

படு பில்டப் கொடுத்து வெளிவரும் பாடாவதி படத்தை முதல்நாள் பார்த்து நொந்து நூடுல்ஸ் ஆகும் நம்மூர் ஆட்களைப் போலவே, ஏகத்திற்கும் எதிர்பார்ப்பில் இருந்த சில பல கால்பந்தாட்ட உடன்பிறப்புக்களை ஏமாற்றத்தில் ஆழ்த்திவிட்டது டீம் பிரான்ஸ். பாண்டிச்சேரி மக்கள் மனதை தேற்றிக்கொள்வதை தவிர வேறு வழியில்லை.

அர்ஜென்டினா, ப்ரேசில், ஜெர்மனி, இத்தாலி அணிகளுக்கு இணையான எதிர்பார்ப்பு இந்த அணியின் மீதும் இருந்தது….நேர்த்தியாக சொதப்பிவிட்டார்கள். எதிர்புறத்தில் விளையாடிய மெக்ஸிகோ அணியை யாராவது மலையாள மாந்தீரீக புண்ணியவான் ஆசீர்வதித்து இருப்பார் போல தெரிகிறது, அப்படி ஒரு ஆட்டம் ஆடி தீர்த்துவிட்டார்கள்…ஊருக்கு திரும்பும்போது டகீலா கரை புரளும். ஆட்டத்தின் முதல் பாதி வரை தாக்குதலை தொடங்காமல் வீணடித்துவிட்ட பிரான்ஸ் இரண்டாவது பாதியின் பின்பகுதியில் விழித்துக்கொண்டது....பட் ரொம்ப லேட்.

மெக்ஸிகோவின் முதல் கோல் விழும் போது ப்ரெஞ்ச் அணியின் கோலியை தவிர வேறு எந்த வீரரையும் கேமிராவின் வளையத்துக்குள் காணவே முடியவில்லை……அந்த அளவிற்கு ஒரு சுறுசுறுப்புடன் ஆடிக்கொண்டிருந்தது ஒட்டு மொத்த ப்ரெஞ்ச் அணியும்….போதாத குறைக்கு வேலியில போண ஓணானை எடுத்து வேட்டியில் விட்டுக்கொண்டார்கள்....தேவையற்ற பெனால்டிக் வாய்ப்பை வாரி வழங்கிவிட்டு ஊருக்கு ரிட்டர்ன் டிக்கெட் கன்ஃபர்ம் செய்துவிட்டார்கள்….

கர்லா புரூனியும், நிக்கோலஸ் சர்க்கோஸியும் மறந்தாலும் பிரான்ஸ் கால்பந்தாட்ட ரசிகர்கள் இந்த தோல்வியை மறக்கவே மாட்டார்கள். Better Luck Next time…Adios Amigos Team France 

Tuesday, June 15, 2010

கங்குலி அண்ணே நீங்க தப்பிச்சிட்டீங்க….

ஸ்லோவாக்கியன்ஸ் யாரிடமாவது அவர்கள் உச்சரிக்க விரும்பாத பெயர் என்னவென்று கேட்டுப்பாருங்கள்…சந்தேகமேயில்லாமல் வின்ஸ்டன் ரீட் என்பார்கள். இதுநாள் வரை கிரிக்கெட்டில் மட்டும்தான் நியுசிகாரர்கள் ஸ்லோ பிக்கப் என நினைத்திருந்தேன்….கால்பந்திலும் அப்படித்தான் போலத்தெரிகிறது. ஸ்லோவாக்கியாவிற்கு எதிரான போட்டியில் மிகவும் மந்தமாக ஆடத்தொடங்கி ஆட்டத்தின் இறுதி நொடிகளில் அற்புதமாக ஒரு கோலை போட்டு போட்டியை சமன் செய்ததோடு மட்டுமல்லாமல், ஏறக்குறைய வென்றுவிட்டோம் என மதப்பில் இருந்த ஸ்லோவாக்கியன் அணிக்கு ஷாக் கொடுத்துவிட்டார்கள் நியுசிக்காரர்கள்.

நேர்த்தியான அந்த கோலை அடித்து “கிவி” தேசத்து மக்களை திக்குமுக்காடச் செய்துவிட்டார் வின்ஸ்டன் ரீட். ஆக்லாந்திலும், கிறைஸ்ட்சர்ச்சிலும் ஆட்டம் காலி என முடிவு செய்து அடித்து முடித்த பாதி பட்வைசர் பாட்டிலுடன் வீட்டுக்கு கிளம்ப தயாராக இருந்த அத்தனை நியுசிக்காரர்களும் மீண்டும் ஒருமுறை வின்ஸ்டன் பெயரைச் சொல்லி நிச்சயமாக மலையேறி இருப்பார்கள்.

சோம்பலாக ஆரம்பித்த போட்டி ஸ்லோவாக்கிய அணியின் முதல் கோலால் கொஞ்சம் சுவாரசியமாக மாறியது. ஆட்டத்தின் இரண்டாவது பாதி முழு நேரமும் முடிந்த நிலையில் கோல் எதுவும் போட்டிராத நியுசிகாரர்கள், ஆட்டத்தில் கூடுதல் நேரத்தில் யாருமே எதிர்பார்க்காதவண்ணம் அந்த இறுதி கோலை அடித்து ஸ்லோவாக்கிய அணியின் வெற்றிக்கனவை தகர்த்துவிட்டார்கள்.

எதிரணியின் கனவைத் தகர்த்த வின்ஸ்டன் ரீட் அநேகமாக சல்மான்கான் அல்லது சவுரவ் கங்குலியின் பரம விசிறியாக இருப்பார்/இருந்திருப்பார் போல தெரிகிறது. தனது கன்னிமுயற்சி கோலாக மாறிவிட்ட சந்தோஷத்தில் மனிதர் தனது சட்டையை கழற்றி சுற்றிக்கொண்டே ஒடி வந்ததை நியுசியில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த யுவதிகள் ரசித்திருக்கலாம் ஆனால் ஆட்ட நடுவர் ரசிக்கவில்லை….மஞ்சள் அட்டையை கையில் எடுத்துவிட்டார். என்ன கொடுமை சார் இது…இதுமாதிரியான பெரிய போட்டிகளில் இம்மாதிரியான கொண்டாட்ட நிகழ்வுகளை கூட அனுமதிக்காமல் விளையாட்டு போட்டியை மிலிட்டரி பரேட் மாதிரி மாற்றுவது ஏன் என்றே தெரியவில்லை.

நல்ல வேளை கிரிக்கெட் போட்டிகளில் இம்மாதிரியான விதி ஏதும் இருப்பதாக தெரியவில்லை. இருந்திருந்தால் லண்டன் லார்ட்ஸில் நடந்த போட்டியின் போது ஒன்றாம் வகுப்பு பையன் மாதிரி சட்டையை கழற்றி தலைக்கு மேலே சுற்றியபடி ஓடிவந்த அண்ணன் கங்குலியை இந்நேரம் கட்டம் கட்டி இருப்பார்கள்…தப்பியது பெங்கால் டைகர் 

Saturday, February 13, 2010

விளையாடுகிறதா விளையாட்டுத்துறை அமைச்சகம்

கோலகலாமாக தொடங்கிவிட்டது வான்கூவர் 2010 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள். அமெரிக்காவுடனும், ஐரோப்பிய நாடுகளுடன் போட்டி போட ஆப்பிரிக்காவின் குட்டி தேசங்கள் காலரை தூக்கிவிட்டுக்கொண்டு களத்தில் இறங்கிவிட்டன.

எதிர்பார்த்தது போலவே சீனா, அமெரிக்கா, ரஷ்யா, கனடா, ஜப்பான் போன்ற நாடுகள் மிகப் பெரிய குழுவையே போட்டிகளில் பங்கேற்க அனுப்பி வைத்துள்ளன. மிகவும் சுவாரசியமாக இவர்களுடன் போட்டி போட கேமேன் ஐலேண்ட் (Cayman Islands) என்னும் குட்டி தீவு ஒரே ஒரு சிங்கத்தை சிங்கிளாக தங்கள் நாட்டின் சார்பாக கோதாவில் இறக்கியுள்ளது. இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையை கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்துக்குள் அடக்கிவிடலாம். எழுபதிலிருந்து எண்பது ஆயிரத்துக்குள் இருக்கலாம். அஷ்டே. கானாவும், எத்தியோப்பியாவும், நேபாளமும் தங்கள் பொருளாதார நிலைகளையும் மீறி வீரர்களை தயார் செய்து அனுப்பி உள்ளன. தேசபக்தி பற்றி இவர்களிடம் பாடம் கற்றுக்கொள்வது ஷேமம்.

இன்னும் பத்து வருடத்திற்குள் நாம் தான் உலக வல்லரசு என மக்கள் காதில் பூ சுற்றிக்கொண்டிருக்கும் நம்மூர் அரசியல்வாதிகள் கொஞ்சம் இந்த போட்டிகளில் பங்கேற்கும் நாடுகளின் வரலாற்றையும் அவர்கள் அனுப்பி உள்ள வீரர்களின் எண்ணிக்கையையும் புரட்டிப் பார்த்துவிடுவது நலம். நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டுள்ள ஒரு தேசத்தால் வெறும் மூன்று பேரை மட்டுமே இந்த போட்டிகளுக்க்காக தயார் செய்ய முடிந்திருக்கிறது. அதிலும் இருவர் ராணுவ அணியில் இருந்து வந்திருக்கிறார்கள். ஒருவர் தனியாக களத்தில் உள்ளார்.

சொந்தமாக விண்வெளிக் கலங்களையும், அனுகுண்டையும் தயாரிக்ககூடிய அளவிற்கு முன்னேறி விட்ட ஒரு தேசத்தால் இம்மாதிரியான போட்டிகளுக்கு குறைந்தபட்சம் பத்து பேரைக்கூட தயார்செய்ய முடியாமல் போவது ஆச்சரியமாக இருக்கிறது. மாநிலத்திற்கு ஒரு சிறந்த வீரரை தயார் செய்வதை இலக்காக வைத்து செயல்பட்டிருந்தால் கூட இந்நேரம் முப்பதிலிருந்து முப்பத்தைந்து வீரர்களை இந்த போட்டிகளுக்கு அனுப்பி இருக்கமுடியும். வாழ்க விளையாட்டுத்துறை அமைச்சகம். வளர்க விளையாட்டுத்துறை அமைச்சர்.

கத்திரிக்காயை அனுமதிக்கலாமா வேண்டாமா, ஷாருக் படம் திரையிடப்பட்டதா இல்லையா என மாய்ந்து மாய்ந்து ஆராய்ந்துக்கொண்டிருக்கும் இந்திய மீடியா உலகம் விளையாட்டுத்துறை அமைச்சரின் அலுவலத்திற்கு ஒரு நடை போய்வந்தால் இந்த வருடம் நாட்டில் கொஞ்சம் கூடுதலாக மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.செய்வார்களா ஜனநாயகத்தின் நான்காவது தூணின் போர்ப்படை தளபதிகள்…

பி.கு. வான்கூவர் ஒலிம்பிக் போட்டியை பற்றிய முழு விவரம் இங்கே.
http://www.vancouver2010.com/

Friday, October 2, 2009

ரியோ-டி-ஜெனிரோ ----- கடவுளின் நகரம் அடித்த கோல்டன் கோல்

உலகின் முதல் இரண்டு பொருளாதார சக்திகள் நீயா நானா என முஷ்டியை உயர்த்திக்கொண்டு களத்தில் மோதிக்கொண்டிருக்க சத்தமே இல்லாமல் சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஒட்டிவிட்டது கடவுளின் நகரம்.

2016 ஒலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டியை நடத்துவதற்கு மாட்ரிட் (ஸ்பெயின்), டோக்கியோ (ஜப்பான்), சிகாகோ (அமெரிக்கா) என ஜாம்பவான்கள் மல்லுகட்டிக்கொண்டு நின்றிருக்க, எல்லோரையும் ஒரங்கட்டிவிட்டு வாய்ப்பை தட்டி சென்றுவிட்டது சம்பா சிட்டி ரியோ.

ஸ்பெயின் மன்னர் தனது பரிவாரங்களுடனும், ஜப்பான் பிரதமர் தனது குழுவுடன், பிரேசில் அதிபர் கால்பந்தாட்டத்தின் காட்பாதர் பீலேயுடனும் டென்மார்க்கில் தங்களுக்கான ஆதரவை திரட்டிக்கொண்டிருக்க சத்தமே போடாமல் வாஷிங்டனிலிருந்து பறந்துவந்துவிட்டார் ஒபாமா. அமெரிக்காவின் சார்பில் களத்தில் இருப்பது அவருடைய ஊர் சிகாகோ. மனைவியுடன் வந்து சிகாகோவிற்காக ஆதரவை கோரினார்…ஹூம் பந்தை ரியோ தட்டி சென்றுவிட்டது.

போட்டியில் இருந்த மற்ற மூன்று நகரங்களைவிட பொருளாதார ரீதியாகவும், கட்டமைப்பிலும் பின் தங்கியே இருந்தாலும் விடாமல் போரடியது ரியோ. சென்ற முறை வாய்ப்பை இழந்தபோதும் பொறுமை இழக்காமல் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்துகொண்டு வந்து இம்முறை நம்பிக்கையுடன் களத்தில் இறங்கினார்கள்..முயற்சி வீண்போகவில்லை.

கால்பந்தாட்ட கதாநாயகர்களின் அதிரடியாலும், சம்பா நடன குழுக்களின் வசீகரத்தாலும் உலகையே தன் பக்கம் திருப்பிய பிரேசில், ஒலிம்பிக் போட்டியை நடத்தபோகும் முதல் தென் அமெரிக்க நாடு என்ற பெருமையுடன் மீண்டும் ஒருமுறை தன்னை நோக்கி உலகையே திருப்பி உள்ளது.

அக்டோபர் 2, இந்தியாவிற்கு மட்டுமல்ல இனி பிரேசிலுக்கும் மறக்கமுடியாத நாள் தான்.