Thursday, March 31, 2011

பொய்க்கால் குதிரைகள்

சென்ற அதிமுக ஆட்சியின்போது தமிழகத்தின் பிரபல வார இதழில் திரு. நல்லகண்ணு ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அப்போதைய ஆளும் கட்சியின் எதேச்சதிகார போக்கை கடுமையாக சாடியபடி வந்திருந்த அந்த பேட்டியில் எந்த இடத்திலும் அரசியல் நாகரீகம் சறுக்கிவிடாதபடி வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசியிருந்தார். மிகவும் அமைதியாக பேசியிருந்தாலும் சொல்லப்பட்ட விஷயம் முழுவதிலும் அனல் பறந்திருந்தது. அன்றைய தேதியில் தங்கள் ஆட்சிக்கு எதிராக யார் வாயைத் திறந்தாலும் அவர்களை மதுரைக்கும், வேலூருக்கும் பார்சல் செய்து அனுப்பிக்கொண்டிருந்த அரசியல் சூழ்நிலையில், திமுகவினரோ கொஞ்சம் அடக்கி வாசித்துக் கொண்டிருந்த வேளையில், தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசியிருந்தார் காம்ரேட். மிகவும் அருவருப்பாகவும் நம்பிக்கையற்றதாகவும் மாறிவிட்ட தமிழக அரசியல் சூழலில் இவர் மாதிரியான ஆட்கள் அவ்வப்போது நம்பிக்கையை ஏற்படுத்திக் கொண்டேதான் இருக்கிறார்கள்….Atleast for short span of time.

இனாமாக கிடைத்தால் எதையும் ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு வந்துவிட்ட தமிழக வாக்காளர்களின் மத்தியில், கட்சி தனக்காக அளித்த வாகனத்தைக்கூட கட்சிக்கே திருப்பிக் கொடுத்துவிட்டதாக இவரைப்பற்றி படித்தபோது நெகிழ்ச்சியாக இருந்தது. காலம் வேகமாக ஓடிவிட்டது. எதற்கும்/யாருக்கும் அஞ்சாமல் குரலை எழுப்பிய அதே சுயநலமற்ற தோழர், இக்கட்டான காலகட்டங்களில் தங்களோடு தோளோடு தோளாக நின்று போராடிய வைகோ-விற்கு இன்று ஏற்பட்டுள்ள அரசியல் துரோகத்தை அருகில் இருந்து பார்த்த பின்னும் அதற்கான தனது எதிர்ப்பை பதிவு செய்ய முடியாமல் நழுவுவதை காணும்போது இவரும் ஒரு சராசரி அரசியல்வாதிதானோ என்ற நினைப்பு மட்டுமே மிஞ்சுகிறது. தன் கண் எதிரே நடக்கும் அப்பட்டமான நம்பிக்கை துரோகத்தை கண்டும் காணாமல் இருந்துவிட்டு, தனக்களிக்கப்படும் அன்பளிப்பை நிராகரிப்பதால் மட்டுமே ஒருவர் முழுமையான சோஷலிஸ்டாக ஆக மாறிவிட முடியாது என்பதை திரு.நல்லக்கண்ணு நன்றாக அறிந்திருப்பார்.

இவரைத் தவிர்த்து அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்களை பற்றி பேசுவதோ/எழுதுவதோ காலவிரயம். கழக கண்மணிகளுக்கு இணையாக ஸ்கார்ப்பியோ வண்டிகளில் வலம் வரும் தோழர்கள் தங்கள் சுயலாபத்திற்காக ஒரு நடிகரின் அலுவலகம் வரை ஓடியது தமிழகத்தில் உள்ள நடுநிலையாளர்களின் மனதில் எந்த வியப்பையும் ஏற்படுத்திவிடவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக அந்த அலுவலகத்திலிருந்து பத்துகிலோமீட்டர் எல்லைக்குள் முடங்கிக்கிடந்த தங்கள் கூட்டணித் தோழர் வைகோ-வை இவர்கள் வசதியாக மறந்துவிட்டதும் எந்த அதிர்வையும் ஏற்படுத்திவிடவில்லை. விளாடிமீர் இலிச் உல்யோனோவை யார் என்று கேட்கும் தோழர்களால் நிரம்பிவிட்ட ஒரு இயக்கத்திற்கு வைகோ-வை பற்றி யோசிப்பதற்கெல்லாம் நேரம் இல்லாமல் இருப்பதில் வியப்பேதுமில்லை. தங்கள் கட்சியின் மாநாட்டில் மணிரத்னத்தின் மகன் பிட் நோட்டீஸ் வினியோகதித்தைப் பற்றி சிலாகித்து கொண்டவர்களுக்கு முந்தைய நாள் இரவுவரை தங்கள் பக்கத்தில் நின்றுக்கொண்டிருந்த வைகோ திடீரென கண்ணுக்குத் தெரியாமல் போய்விட்டத்தில் எந்த ஆச்சரியமும் இல்லை. போகிற போக்கைப்பார்த்தால் இனி தமிழகத்தில் உள்ள எல்லா கட்சிகளும் இவர்களிடமிருந்துதான் பாடத்தை கற்கவேண்டும் போலத் தெரிகிறது.

ஆட்சியில் இல்லாத நிலையில் ஜெயலலிதா செய்த/செய்துகொண்டிருக்கும் அரசியல் அநீதிகளையே தட்டிக் கேட்க திராணியற்ற செங்கொடித் தோழர்கள், நாளை அவர் ஆட்சிக்கு வந்துவிட்டால் வீட்டை விட்டு வெளியே வருவார்களா என்பதே சந்தேகமாக இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பாக வீட்டிற்கு அருகில் வசித்த ஒரு பெரிய மனிதர், தன்னை சுமந்து அழைத்து வந்த சைக்கிள் ரிக்‌ஷாகாரருடன் கடுமையாக தகராறு செய்து கொண்டிருந்தார். பேசிய தொகையைவிட இரண்டு ரூபாய் குறைவாகத்தான் கொடுப்பேன் என பெரிய மனிதர் பிடிவாதமாக சொல்லிக் கொண்டிருக்க, களைப்பில் இருந்த ரிக்‌ஷாகாரருக்கு என்ன செய்வதென்று தெரியாமல் அவரிடம் கெஞ்சிக்கொண்டிருந்தார். கொஞ்ச நேரத்தில் அதே ரோட்டில் இன்னொரு சைக்கிள் ரிக்‌ஷாவில் தனது வாடிக்கையாளருடன் சென்று கொண்டிருந்த மற்றொரு ரிக்‌ஷாகாரர் தனது ரிக்‌ஷாவை ஒரம் கட்டிவிட்டு சக ரிக்‌ஷாகாரரிடன் விவரம் கேட்டுவிட்டு, பெரிய மனிதரிடம் வாக்குவாதத்தில் இறங்க, ஒட்டு மொத்த தெருவே கூட்டம் கூடி வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டது. இரண்டு ரிக்‌ஷாகாரர்களும் பெரிய மனிதரிடம் எவ்வளவோ பேசிப்பார்த்தும் அவர் வழிக்கு வருவதாக தெரியவில்லை. திடீரென யாருமே எதிர்பார்க்காத வகையில் இரண்டாவதாக வந்த ரிக்‌ஷாகாரர் தனது பாக்கெட்டில் இருந்த இரண்டு ரூபாயை எடுத்து தனது சக தொழிலாளியிடம் கொடுத்துவிட்டு அவரை கிளப்பி அனுப்பிவிட்டு தன்னுடைய ரிக்‌ஷாவில் இருந்த வாடிக்கையாளரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு ரிக்‌ஷாவை நகர்த்தி கொண்டு போய்விட்டார். தகராறு செய்த பெரிய மனிதரை தெருவில் இருந்தவர்கள் ஒரு மாதிரியாக பார்க்க அவரால் தலை குனிந்து நிற்பதை தவிர வேறு எதுவும் செய்யமுடியாத நிலை. பழைய எம்ஜியார் படங்களில் வரும் செயற்கையான ஒரு நிகழ்வு தங்கள் கண்ணேதிரே நிஜமாகவே நடந்ததை நம்ப முடியாமல் பார்த்துக்கொண்டிருந்தனர் தெருவில் இருந்த அனைவரும். முன்பின் அறிமுகமே இல்லாத தனது சக தொழிலாளியின் உரிமைக்காக குரல் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் தனது பணத்தை எடுத்து கொடுத்த அந்த ரிக்‌ஷாகாரரைப் பற்றி என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஒரு தொழிலாளியிடம் இருந்த குறைந்தபட்ச கண்ணியம், சுயமரியாதை உணர்வு கூட அதே தொழிலாளர்களுக்காக போராடுவதாக சொல்லிக்கொண்டிருக்கும் இயக்கத்தின் தலைவர்களுக்கு இல்லாமலிருப்பது காலத்தின் கோலம். கூட்டணிகள் வரும் போகும். ஆட்சிகள் வரும் போகும். சுயமரியாதையும் கொள்கைகளும் போனபின் இவர்களுக்கும் இரு கழகங்களுக்கும் எந்த வித்தியாசமும் இருக்கப்போவதில்லை.

இவர்களுக்கு கிடைத்துள்ள பத்து பதினைந்து தொகுதிகளில் அனைத்திலுமே வென்றாலும் அடுத்து வரப்போகும் ஆளும் அரசின் எந்தவொரு முடிவையும் இவர்களால் மாற்ற முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்ததே…திமுகவும் சரி அதிமுகவும் சரி இவர்களை எப்படி நடத்துவார்கள் என்பதற்கு கடந்த கால நிகழ்வுகளே சாட்சி. அப்படி இருக்கும்போது குறைந்தபட்சம் தங்கள் இயக்கத்தின் அடிப்படை கொள்கைகளிலாவது சமரசம் செய்து கொள்ளாமல் உறுதியாக நின்றால் கொஞ்சம் உருப்படியாக இருக்கும். ஆளும்கட்சிகளின் தவறுகளுக்காக சட்டசபையிலும் பாராளுமன்றத்திலும் நாடே அதிரும் வகையில் கர்ஜிக்கும் தோழர்கள் தங்கள் கூட்டணியில் இருந்த ஒருவருக்காக ஓங்கிக் குரல் கொடுக்கத் தயங்கியது மோசமான சோஷலிஸம். ஆளும் கட்சியின் தவறுகளை தவிர்த்து மற்ற எதையும் எதிர்த்து குரல் கொடுக்ககூடாது என பொலிட்பீரோ மீட்டிங்கில் தீர்மானம் எதையாவது நிறைவேற்றிவிட்டார்களா எனத் தெரியவில்லை. அப்படி ஏதாவது இருந்தால் மக்களுக்கு தெரிவித்துவிடுவது நலம்…அட்லீஸ்ட் அவர்களாவது இனிமேல் இவர்களிடம் இருந்து கொஞ்சம் விலகி இருப்பார்கள். லால் சலாம்.

Tuesday, March 15, 2011

அரசியலில் சொதப்புவது எப்படி By லோக் பரித்ரன்

இவ்வளவு கேவலமா விளையாடுறதுக்கு பதிலா பேசாம நம்ம டீமை கலைச்சிட்டு எல்லோரும் போய் “லோகு பவித்ரா” பார்ட்டியில சேர்ந்துடலாம். 2006-இன் துவக்கத்தில் BTM கிரவுண்டில் எங்களை புரட்டிப் போட்டுக் கொண்டிருந்த எதிர் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்த போது நண்பன் ஒருவன் உதித்த டயலாக் தான் மேலே சொன்ன அந்த வரிகள். “லோகு பவித்ரா” என்ற வித்தியாசமான பேரைக் கேட்டவுடன், கோல்டன் டக்அவுட் ஆன களைப்பில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த எங்கள் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் சிலிர்த்து எழுந்து உட்கார்ந்து கொண்டது. ஸ்கோர் கார்டை ஒரு பொடியனிடம் கொடுத்துவிட்டு “லோகு பவித்ரா” மேட்டர் பற்றிய விவாதத்தில் இறங்கினோம்.

ஐஐடி பிஸ்துங்க ஒரு ஆறேழு பேர் சேர்ந்து புது பொலிட்டிக்கல் பார்ட்டி ஆரம்பிச்சிருக்காங்க மச்சி..அந்த பார்ட்டி பேருதான் அது-ன்னு அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே இன்னொருத்தன் ரொம்ப சீரியஸாகி அருகில் இருந்த SG பேட்டை கையில் எடுத்து பேசிக்கொண்டிருந்தவனை பார்த்து முறைக்க ஆரம்பித்தான்…பிறகுதான் விவரம் தெரிய ஆரம்பித்தது…”லோக் பரித்ரன்” என்ற பெயரைத்தான் நண்பன் வேறு மாதிரியாக கலாய்த்துக் கொண்டிருந்தது புரிய வந்தது. பேசிக்கொண்டிருக்கும்போதே நான் பி.இ. ECE மச்சி எனக்கு MLA சீட் கொடுப்பாங்களடா என அடுத்தவன் கேப்பில் கார் ஒட்டினான். மிகவும் போராடி மேட்ச்சில் வெற்றிகரமாக தோற்று வீட்டிற்கு திரும்பிய பின் செய்திதாள்களை துழாவியபோது இந்த Startup Party பற்றிய விவரம் கொஞ்சம் விளங்க ஆரம்பித்தது. இந்த கட்சியின் “Founding Fathers” Profile –ஐ பார்த்ததில் புருவம் உயர்ந்தது. ஐஐடி-க்குள் காலடி எடுத்து வைத்தவுடனே அடுத்த Hop ஹார்வர்டு / ஸ்டான்போஃர்டு / MIT / Virginia Tech / Princeton என முடிவு கட்டிவிடும் பசங்களுக்கு மத்தியில் இவர்கள் உன்னதமாக தெரிந்தார்கள். மொத்ததில் இவர்கள் கொடுத்திருந்த வாக்குறுதிகளையும் பில்டப்பையும் பார்த்தவுடன் Love @ First Sight feeling தான் வந்தது.

போதாத குறைக்கு அப்போது (2006) நடைபெறவிருந்த தமிழக சட்டசபை தேர்தலில் இவர்கள் போட்டியில் இறங்கப் போவதாக அறிவித்ததும் நண்பர்கள் அனைவரும் நம்பிக்கையுடன் இவர்களை கவனிக்க ஆரம்பித்திருந்தோம். ஏனென்றால் இவர்களின் முக்கிய கோஷமே ஊழலையும் சாதி அரசியலையும் எதிர்க்கப்போவதாக இருந்த அறிவிப்புதான். இவர்களின் தேர்தல் நடவடிக்கைகள் திருப்திகரமாக இருக்கும் பட்சத்தில் கழுதை சின்னத்தில் நின்றாலும் அந்த பட்டனை அமுக்கிவிடுவது என தீராத வேட்கையில் இருந்தோம். ஆயிரம் பொற்காசு நமக்குதான் சொக்கா என சொல்லி முடிப்பதற்குள் நக்கீரர் போல வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டார்கள். தமிழகத்தின் பொற்கால ஆட்சியை எங்கள் ஓட்டின் மூலமாக கொண்டு வந்துவிடுவது என்ற எங்கள் கனவில் விதி இங்கிலாந்திற்கெதிரான அயர்லாந்து அணியைப் போல விளையாட ஆரம்பித்துவிட்டது. முதல் சறுக்கல் இவர்கள் போட்டியிடப் போவதாக அறிவித்திருந்த தொகுதிகளின் பட்டியல். லிஸ்டில் இருந்த தொகுதிகளில் மைலாப்பூர் தவிர்த்து பிற இடங்களில் இவர்களின் பிரதான டார்கெட்டே திமுக-தான். இத்தனைக்கும் திமுக அப்போதிருந்தது எதிர்கட்சி வரிசையில். சேப்பாக்கதில் வேட்பாளரை நிறுத்திய இவர்களின் இயக்கம் ஆண்டிப்பட்டியை கண்டு கொள்ளாமல் விட்டவுடன், இவர்களின் “Integrity” மீது சந்தேகத்தின் நிழல் விழ ஆரம்பித்தது. இரண்டாவது சறுக்கல், இவர்கள் களமிறக்கிய வேட்பாளர்களின் தேர்வும் அதையொட்டி நடந்த சம்பவங்களும். குறிப்பிட்ட ஒரு வேட்பாளரை மட்டும் ஏகத்துக்கும் முன்னிறுத்தி மற்றவர்களை லூசில் விட்டது, இவர்களின் குறிக்கோள் என்னவென்பதை தெளிவாக உணர்த்திவிட்டது. நம்மூர் கதர் சட்டைக்காரர்களே இவர்களின் இந்த உள்ளடி விளையாட்டைப் பார்த்து வெல வெலத்துப் போயிருப்பார்கள். அப்படி ஒரு அதகளம்.

பெங்களூரிலிருந்து கிளம்பிச் சென்று இவர்களுக்கு ஓட்டளிக்கலாம் என ஆரம்பத்தில் பேசிக்கொண்டிருந்த சில நண்பர்கள் இவர்களின் அதிபுத்திசாலித்தனமான அரசியல் சாணக்கியத்தனத்தைப் பார்த்து மெய் மறந்து, சாந்தி சாகரில் ஒரு பிஸிபேலா பாத் சாப்பிட்டுவிட்டு வழக்கம்போல உதயசூரியனுக்கே குத்திவிடுவது என்ற முடிவுடன் ஊருக்கு கிளம்பிவிட்டார்கள். “Known Devil is better than an unknown Angel” பார்மூலா ரொம்ப சிம்பிள் பிரதர். இத்தனைக்கும் இந்த முடிவை எடுத்தவர்கள் அனைவரும் இருபதுகளின் மத்தியில் இருந்தவர்கள். சினேகா/பாவனா-வின் சமகாலத்தில் வாழ்ந்து தங்கள் பூர்வஜென்ம பலனை அடைந்துக் கொண்டிருப்பவர்கள். தீப்பொறி ஆறுமுகத்தையும், வெற்றிக்கொண்டானையும், நாஞ்சில் சம்பத்தையும் யாருன்னு கேட்கிற தலைமுறையைச் சேர்ந்தவர்கள். பெட்ரோலை “Gas” என்றும், தயிரை “Yogurt” என்றும் பிதற்றி திரியும் பிஞ்சுக் குழந்தைகள் :-)

2006 இல் ஒருவழியாக தேர்தல் முடிந்து கழகங்கள் செட்டில் ஆன பின்னும் இவர்கள் விடுவதாக தெரியவில்லை. அதுவரை புகைந்து கொண்டிருந்த உட்கட்சி (!) பூசலை வெளியே கொண்டுவந்து போட்டு உடைத்துவிட்டார்கள். தமிழகத்தை பொறுத்தவரை திமுக/அதிமுக இரண்டுமே ஊழலில் ஒன்றுக்கொன்று சளைத்தவை இல்லை. பாமக தன்னை ஒரு சாதிக்கட்சியாக முன்னிறுத்திக் கொள்வதில் எந்த தயக்கத்தையும் காட்டியதில்லை. நிலைமை இப்படி இருக்கும்போது இதற்கு மாற்றாக செயல்பட்டிருக்க வேண்டிய படித்த புத்திசாலிகள் ஒருவர் காலை ஒருவர் இழுத்து விட்டுக்கொண்டு மூன்று மாதத்திற்கு ஒருமுறை கோவித்துக் கொண்டு தாய் வீட்டுக்குச் சென்றுவிடும் சம்சாரத்தைப் போல நடு ரோட்டிற்கு வந்துவிட்டார்கள். மூன்று மாதத்திற்குள் கட்சியை பை-டூ போட்டுவிட்டார்கள். சொல்லப்பட்ட காரணம், கட்சியின் வரவு/செலவில் நடந்த குளறுபடிகள் மற்றும் உறுப்பினர்களிக்கிடையேயான சமூக ஏற்றத்தாழ்வுகள். தமிழகத்தில் கட்சி ஆரம்பித்து மிக குறுகிய காலத்திற்குள் அதை தாங்களே உடைத்துக் காட்டிய சாதனை 2011 பிப்ரவரி வரை லோக் பரித்ரனிடமே இருந்தது. சில நாட்களுக்கு முன்னதாக “பெருந்தலைவர் மக்கள் கட்சி” என்ற பேரியக்கம் அந்த சாதனையையும் தட்டி பறித்துவிட்டது. சிறுவனாக இருந்தபோது எனக்குள் இனம் புரியாத வியப்பையும் ஈர்ப்பையும் ஏற்படுத்திய குமரி ஆனந்தனின் கா.கா.தே.க – கூட மூன்று மாதங்களுக்கு மேலாக உடையாமல் நிலைத்திருந்ததாக ஞாபகம். Sorry Guys :-(

அந்த தேர்தலில் தோற்றாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதைப்போல இவர்கள் விட்ட அறிக்கை அடுத்த தேர்தலில் இவர்களுக்கு ஒட்டளிக்கலாம் என கொஞ்சம் நம்பிக்கையுடன் இருந்த என்னைப் போன்றவர்களை ஏகத்துக்கும் சூடாக்கியிருக்கும் என்பதில் மாற்று கருத்தே இல்லை. போதிய அனுபவம் இல்லாததல் தோற்றுவிட்டதாக ஏதோ காரணத்தை கூறினார்கள். அரசியலே தெரியாத விஜயகாந்த் கூட கொஞ்சம் Ground Work செய்த பின்னரே மதுரைக்கு வண்டியை திருப்பினார். Startup Ventures, Entrepreneurship என ஏகத்துக்கும் பேசுபவர்கள் போதிய Ground Work செய்யாமல் உள்ளே வந்தது யார் தவறென்று தெரியவில்லை. எல்லாவற்றிருக்கும் மேலாக சென்னையின் பன்னிரெண்டு தொகுதிகளைத் தாண்டி மற்ற தொகுதி மக்கள் எல்லாம் இவர்களின் புத்திசாலித்தனத்தை புரிந்து கொள்ளும் அளவிற்கு தகுதியில்லாதவர்கள் என நினைத்து செயல்பட்டது எந்த அறிவாளி கொடுத்த ஐடியா எனத் தெரியவில்லை. தென் தமிழகத்தில் மட்டும் ஏதோ ஒரு தொகுதியில் ஒப்புக்கு யாரையோ நிறுத்தியதாக ஞாபகம்.

2006 ஏப்ரல்/மே மாத வெயிலில் ஜெ-வும், மு.க-வும் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் ஓடி ஓடி பிரச்சாரம் செய்துக் கொண்டிருக்கும்போது, லோக் பரித்ரன் டீம் மட்டும் ஆயுத எழுத்து சூரியா ரேஞ்சிற்கு செய்தித்தாள்களில் கம்பீரமாக நின்றபடியே போஸ் கொடுத்துவிட்டு ஓட்டு வாங்கிவிடலாம் என நினைத்து வெறும் Powerpoint Presentation –ஐ வைத்து ஒப்பேற்றிக் கொண்டிருந்தது இவர்களுக்கு அரசியல் சுத்தமாக ஒத்துவராது எனத் தெளிவாக்கிவிட்டது. அண்ணா நகரில் ஐந்து இலக்கத்தில் ஓட்டு வாங்கியதை இவர்கள் கோடிட்டு பேசியதை படிக்க நேர்ந்தது. கொஞ்ச வருடங்களுக்கு முன்பாக கிணறு சின்னத்தில் நகரமன்ற உறுப்பினர் தேர்தலில் நின்று வென்று காட்டிய உறவினர் வாங்கிய ஓட்டுக்கள் நினைவில் வந்து போனது. இத்தனைக்கும் மனிதருக்கு ஐடிஐ-யே என்னவென்று தெரியாது…ஐஐடி எல்லாம் ஹூஹூம். மக்களை நேரிடையாக சந்தித்து குறைகளை புரிந்துகொண்டு வாக்குறுதி அளித்து சேர்த்த ஓட்டுக்கள்.

ஐஐடி Entrance தேர்வில் வெறும் பேப்பருடன் மல்லு கட்டுவதற்கே கடுமையான உழைப்பு தேவை என்பதை நன்கு உணர்ந்தவர்கள் மக்கள் ஓட்டை மட்டும் எளிதாக பெற்றுவிடலாம் என நினைத்ததை என்ன சொல்வதென்றே தெரியவில்லை. போதாத குறைக்கு படிக்காத அரசியல்வாதிகூட தன்னுடைய ஆரம்ப காலகட்டத்தில் செய்யத் தயங்கும் ஊழலையும் சமூக ஏற்றத்தாழ்வுகளையும் தங்கள் இயக்கத்தின் சக உறுப்பினர்களிடையே அனுமதித்துவிட்டு எந்த நம்பிக்கையில் மக்களை வழிநடத்த முன்வருகிறார்கள் எனத் தெரியவில்லை. யோசித்துப்பார்த்தால் பழைய ஆட்களே கொஞ்சம் பெட்டராக தெரிகிறார்கள். காமராஜர் போன்ற அப்பழுக்கற்றவர்களின் ஆட்சிக் காலத்தை நேரிடையாக கண்ட என் தாய்/தந்தையின் வயதை ஒட்டிய மனிதர்கள் மிகப்பெரிய புண்ணியவான்கள்.

நன்றி: காதலில் சொதப்புவது எப்படி என்ற தலைப்பை தங்கள் குறும்படத்திற்கு வைத்து, இந்த பதிவின் தலைப்பிற்கு வழிவகுத்தவர்களுக்கு :-)