Showing posts with label கிரிக்கெட். Show all posts
Showing posts with label கிரிக்கெட். Show all posts

Friday, March 9, 2012

The Great Wall of India



ரவி சாஸ்திரியும், திலீப் வெங்க்சர்க்காரும் டொக்கு வைப்பதில் கில்லாடிகள் (டொக்கு வைப்பது என்பது மட்டைப் போடுவது அல்லது ரன்னே எடுக்காமல் கிரிக்கெட் பார்க்கும் அனைவரையும் கடுப்பின் உச்சத்திற்கே அழைத்துச் செல்லும் நிகழ்வு) விக்கெட்டுகள் மள மளவென சரியும் போது டீமை பாஃர்முக்கு கொண்டு வருவதற்ககாக எல்லாப் ப்ளேயரும் அவ்வப்போது மட்டையை போடுவது ஒரு வகையான யுக்தி அல்லது சாணக்கியத்தனம். புலி பதுங்குவதை போன்ற சமாச்சாரம். ரன்னும் எடுக்காமல் அதே சமயம் விக்கெட்டையும் பறி கொடுக்காமல் எதிரணியை கொஞ்சம் காயவிடுவது என்பது 1980-களின் இறுதியில் ரொம்ப பிரபலம். இதில் மேற்படியாளர்கள் தில்லாலங்கடிகள். மட்டையைப் போட்டு நல்ல பாஃர்மில் இருக்கும் பெளலர்களை கொஞ்சம் டென்ஷனாக்கி பிறகு கிடைக்கும் கேப்பில் கொஞ்சம் ரன்னை தேற்றிவிடுவது இதுதான் அடிப்படை பார்மூலா.

அப்போதைய மேற்கிந்திய அணியை தவிர மற்ற எல்லா அணிகளுமே ஓரளவிற்கு இந்த பார்மூலாவை Adapt செய்து அவ்வப்போது ஜகா வாங்கி ஆடிக்கொண்டிருந்தார்கள். விவியன் ரிச்சர்ட்ஸ், கஸ் லோகி, ஜெஃப் துஜான் போன்ற வெஸ்ட் இண்டீஸ் முரட்டு காளைகளுக்கு இந்த டொக்கு வைக்கும் சடங்கில் உடன்பாடில்லாததல் கிடைத்த எல்லா பெளலர்களையும் கிழித்து தொங்க போடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்கள். உண்மையில் 1983 ப்ரூடென்ஷியல் கோப்பை இறுதிப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த பார்மூலாவை பயன்படுத்தி இருந்தால் கோப்பையை ஒருவேளை வென்றிருக்க கூடும்.…..மேட்சை விரைவாக முடிப்பதற்காக அவசரமாக ஆடிய விவியன் ரிச்சர்ட்ஸின் பேட்டிங்கும், கபில்தேவின் அந்த எவர்கிரீன் கேட்சும் அதிர்ஷ்ட தேவதையை அன்றைக்கு இந்தியாவின் பக்கம் திருப்பி விட்டுவிட்டது.

நம்மூர் ஸ்ரீகாந்த் ஏறக்குறைய விவியன் ரிச்சர்ட்ஸ் செய்வதைதான் பெரும்பாலும் செய்வார். ஆனால் ஓப்பனிங் இறங்கிவிடுவதால் இவருக்கு மிடில் ஆர்டரில் வந்து டொக்கு வைத்து மற்றவர்களை நோகடிக்கும் சந்தர்ப்பம் எல்லாம் கிட்டவேயில்லை என நினைக்கிறேன். கிடைத்திருந்தாலும் அவ்வளவு பொறுமை இருந்திருக்குமா எனத் தெரியவில்லை. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களே கதி கலங்கும் அளவிற்கு ஓப்பனர் சுனில் கவாஸ்கர் அவ்வப்போது டொக்கு வைத்து எனிமா கொடுக்காமலே இந்திய ரசிகர்களுக்கு வயிற்றில் அவ்வப்போது கலவரத்தை உண்டு பண்ணுவார்…அது தனிக்கதை.

1990-களின் தொடக்கத்தில் இருந்து மத்தி வரை இந்த டொக்கு வைக்கும் கலாச்சாரம் ஏறக்குறைய இந்திய அணியை கரையானைப் போல மெல்ல அழித்துக்கொண்டிருந்தது….ஜிம்பாப்வே போன்ற சுமாரான டீமிடம் கூட (உண்மையில் ஜிம்பாப்வே அணி சில சமயம் மற்ற அணிகளைவிட பெட்டராக ஆடக்கூடியது) போராடி போராடி ஜெயிக்கவேண்டிய நிலையில் இருந்த டீமை நவ்ஜோத் சிங் சித்துவும், அசாருதினும், மனோஜ் பிரபாகரும் அவ்வபோது முட்டுக்கொடுத்து காப்பாற்றி வந்தார்கள்..இடையிடையே நரேந்திர ஹிர்வானி போன்றவர்கள் வந்த வேகத்தில் காணாமலும் போய்க்கொண்டிருந்தார்கள். சத்தமேயில்லாமல் சச்சின் வளர்ந்துகொண்டிருந்தது இந்த காலகட்டத்தில் தான்.

ஒருவழியாக இந்திய கிரிக்கெட் அணி மறுபடியும் கொஞ்சம் அதிரடியாக ஆட ஆரம்பித்திருந்த நிலையில் தான் ராகுல் டிராவிட் இந்திய அணிக்கு வந்து சேர்ந்தார். முதல் சில ஆட்டங்களை பார்த்தவுடன் மனிதர் டொக்கு கலாச்சாரத்தை மீண்டும் அணிக்கு கொண்டு வந்துவிடுவாரோ எனத் தோன்றியது…ஆனால் குறுகிய காலத்திலேயே எல்லோரையும் கொஞ்சம் கொஞ்சமாக ஆச்சரியப்படுத்த தொடங்கினார் இந்த இந்திரா நகர் ஹீரோ. ஆரம்பத்தில் மெதுவாக தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக வேகம் பிடித்து கிடைக்கும் கேப்பில் பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் அடித்து இறுதியில் தனது ஆவ்ரேஜ் ஸ்கோரை கார்டில் கொண்டு வந்துவிடுவது இவரது தனி ஸ்டைல்.

சச்சினின் அதிரடியை கட்டுப்படுத்த எல்லா அணியும் வியூகம் வகுத்துக்கொண்டிருந்த நிலையில் சச்சினை கவிழ்த்தாலும் இந்திய அணி கவிழாது என்பதை ஒரு முறையல்ல பல முறை நிரூபித்துக் கொண்டேயிருந்தார் மனிதர், இதில் இவர் இறுதியாக ஆடிய இங்கிலாந்து போட்டிகளும் அடக்கம். அந்த டூரில் டபுள் டிஜிட் ஸ்கோரை ஒவ்வொரு மேட்சிலும் எட்டிபிடித்தது இவர் மட்டுமே தான் என நினைக்கிறேன். இதில் முக்கியமான விஷயம் ஒவ்வொரு கேமையும் சச்சினின் தோள் மீது ஏற்றிவைத்துவிட்டு எல்லா ப்ளேயரும் ரிலாக்ஸாக இருந்த காலகட்டத்தில் கூட சத்தமேயில்லாமல் சச்சினின் பாரத்தை குறைக்க பலமுறை தோள்கொடுத்தவர் டிராவிட் என்பதை கிரிக்கெட்டை அறிந்தவர்கள் நிச்சயம் ஒத்துக்கொள்வார்கள்.

Calm & Composed இதுதான் டிராவிடின் தாரக மந்திரம். சச்சின், ஷேவாக், கங்குலி மாதிரி பட்டையை கிளப்பாமலே ஸ்கோரை நைசாக உயர்த்துவதில் மனிதருக்கு நிகர் அவரேதான். இவரும் வி.வி.எஸ். லஷ்மனும் (வி.வி.எஸ் ஒரு குட்டி Wall, டிராவிடைப் போலவே நங்கூரம் பாய்ச்சி நின்று விடுவதில் இவரும் கில்லாடி) நின்று ஆடிய சில டெஸ்ட் போட்டிகள் இன்றைய 20-20 மேட்சுகளைவிட சுவாரசியமாக இருக்கும். ஒரு நாள் போட்டியை டெஸ்ட் போட்டி மாதிரி போட்டுத் தாக்கும் சிலருக்கு மத்தியில் டெஸ்ட் போட்டியை சில நேரங்களில் ஒருநாள் போட்டியைப் போன்ற சுவாரசியத்திற்கு கொண்டு சென்றவர்கள் இந்த இருவரும். கேப்டன், துணைக்கேப்டன், ஓப்பனிங்/மிடில் ஆர்டர், விக்கெட்கீப்பர் என எதை கொடுத்தாலும்
சராசரி இந்திய ரசிகனை ஏமாற்றாதவர் டிராவிட். எனக்கு தெரிந்தவரை மிக அதிகமான பெண் ரசிகைகள் இவருக்கு உண்டு என்பது மிகவும் சுவாரசியமான விஷயம். Down to Earth image, அந்த amul baby face என பல விஷயங்கள் இவரின் ப்ளஸ் பாயிண்ட் :-) கபில், ஸ்ரீகாந்தைப் போல இவரும் இந்திய கிரிக்கெட்டின் மார்கண்டேயன் தான்…எப்போது பார்த்தாலும் அதே பொலிவோடு இருப்பார் மனிதர்.

தனது ஆட்டத்தைப் போலவே அணியில் இருந்து ஓய்வு பெறுவதையும் ஆர்ப்பாட்டமே இல்லாமல் செய்ததற்காக ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் ரசிகனும் உங்களை நிச்சயம் கொண்டாடுவான் டிராவிட். இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடிய காலங்களில் உங்கள் சொந்த வாழ்க்கையின் அற்புதமான தருணங்களை பலமுறை நீங்கள் இழந்திருக்ககூடும் அதை எந்த ரசிகனாலும் நிச்சயமாக ஈடு செய்ய முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை. உங்களை இந்த நாள் வரை தோளில் தூக்கி வைத்து கொண்டாடிய இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் மிக அழகான, நேர்மையான, திறமையான ஒரு கிரிக்கெட் வீரரை இனிமேல் களத்தில் காணப்போவதில்லை என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. இந்திரா நகரின் தெருக்களில் கிரிக்கெட் விளையாடும் சிறுவர்களை பார்க்கும்போது இனி இயல்பாக உங்கள் முகம் நினைவில் வந்து போவதை எந்த ஒரு கிரிக்கெட் பித்தர்களாலும் தவிர்க்கமுடியாது.

We Miss You Dravid

Sunday, December 19, 2010

சச்சின் - Made In India



50 Test Centuries - Well Done Sachin !!!Keep Going.

Wednesday, May 13, 2009

IPL’s Deep Throat - யார் இவர் ?

“நடிகையின் கதை” யில் ஆரம்பித்து தலைமை செயலக டெலிபோன் உரையாடல் வரை, எந்த ரகசியமானலும் சரி, மக்கள் அதன் மேல் காட்டும் ஆர்வம் இருக்கிறதே…அடடா…..இந்த ஆர்வம்தான் ஆரம்பித்து ஒரு மாதமே ஆன ஒரு வலைப்பூவிற்கு ஏறக்குறைய 6700 பிளஸ் பின் தொடர்பவர்களை கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. ஒவ்வொரு பதிவும் சராசரியாக 300-450 பின்னூட்டங்களை பெறுகிறது/பெற்றுக்கொண்டிருக்கிறது.. மேட்டர் ரொம்ப சிம்பிள்…ஒரு அணியின் ஒவ்வொரு அசைவையும் யாரோ ஒரு முகமூடி தனது வலைப்பூவில் எழுதி இணையத்தில் ஏற்றிக்கொண்டே இருக்கிறார். மாட்டிக்கொண்ட அந்த அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ். தீ பற்றி எரிகிறது அந்த அணியில்.

அரசியல் எல்லைக்குள் மட்டுமே கபடி ஆடி கொண்டிருந்த இந்த இன்சைடர் ஸ்பை ஆப்ரேஷன் முதன்முறையாக ஐபிஎல் போட்டிகளுக்கு உள்ளேயும் நுழைந்துள்ளது. போட்டியை தொடர்கிறார்களோ இல்லையோ இந்த வலைப்பூவை நிறைய ரசிகர்கள் தொடர்வது சுத்தமாக தெரிகிறது. அழுகாச்சி டிவி சீரியலுக்காக அடுத்த நாள் வரை காத்திருக்க முடியாமல் தவிக்கும் தாய்குலங்கள் இந்த வலைப்பூவை தொடர்பவர்களிடம் தோற்பது உறுதி……அவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்கள் அடுத்தத்து வெளிவந்துகொண்டே இருக்கும் பதிவுகளில்.

இந்த வலைப்பூவின் சாரம்சத்திற்காக உள்ளே நுழைந்தவர்கள் இப்போது அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து இதை எழுதிக்கொண்டிருப்பது யார் என வெத்தலையில் மை போட்டு பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். அருமையான ஆங்கில நடை, நக்கலான விமர்சனம், தோல்வின் மெல்லிய வலி என கலந்து கட்டி எழுதும் எழுத்துக்கள், கொல்கத்தா நைட் ரைடர்ஸின் தொடர் தோல்வியை சிறிது மறக்க செய்கின்றன. ஆரம்பத்தில் இந்த அணியைப் போலவே மந்தமாக இருந்த இந்த வலைப்பூ இப்போது டெல்லி டேர் டெவில்ஸ் ரேஞ்சில் ஹாட் ஆகிவிட்டது. அணியின் முதலாளி (ஷாருக்கான்) முதல் ஸ்பான்ஸர்ஸ் வரை, இந்த முகமூடிக்குள் ஒளிந்திருக்கும் உண்மையான முகம் யாரென தெரியாமல் மண்டை காய்ந்து போய் இருக்கிறார்கள். தெரிந்தவர்கள் ஷாருக்கை தொடர்பு கொண்டால் சன்மானம் உறுதி.

பற்றி எரிந்து கொண்டிருக்கும் இந்த மேட்டருக்கு அதை எழுதுபவரே இப்போது நெய்யையும் ஊற்றிவிட்டிருக்கிறார்…..ஆரம்பத்தில் ஐபிஎல்லின் இறுதி கட்டத்தில் தான் யார் என்பதை உலகுக்கு பகிரங்கப்படுத்தப்போவதாக அறிவித்தவர், தற்போது தனது முகமூடியை விலக்கி தான் யார் என்பதை உலகுக்கு தெரியபடுத்தவா அல்லது வேண்டாமா என ஒரு சிறிய சர்வே கேள்வியை தனது வலைப்பூவில் வைத்து மேலும் அனலை கூட்டியுள்ளார். இந்த சர்வே ஆரம்பித்த ஒரு வாரத்திற்குள் ஏறக்குறைய 55,000- க்கும் அதிகமானோர் ஒட்டளித்துள்ளனர். மொத்தமாக ஆறு கேள்விகளை கேட்டுள்ளார் மனிதர். அதிலும் அந்த கடைசி கேள்வி……ஹிட் விக்கெட் . சென்ஸ்-ஆப்-ஹுயுமரில் சிக்ஸர் அடித்துகொண்டிருக்கிறார் இந்த முகமூடி.

ஐபிஎல்-இன் இறுதிப்போட்டியில் யார் வென்றாலும் சரி, அது ஏற்படுத்தும் சலசலப்பை விட இந்த பதிவரின் முகமூடி விலகும்போது ஏற்படும் சலசலப்பு பட்டையை கிளப்பப்போவது நிஜம். இந்த முகமூடிக்கு பின்னால் இயங்கும் நபர் எந்த அணியின் வீரராக இருந்தாலும் சரி, அவரின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வரக்கூடிய சாத்தியம் அதிகம், கொஞ்சம் நஞ்சமாகவா கிழிக்கிறார்…நார் நாராக கிழித்து ஊறுகாய் போட்டுக் கொண்டிருக்கிறார். கேப்டன், முதலாளி, அணி மேனேஜர், கோச், சக வீரர்கள் என பேதமே இல்லாமல் சிதறடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்திய மீடியாக்கள் அரசியல் போதை தெளிந்தவுடன் தங்களுக்கு சரக்கு இல்லையே என கவலையே படத் தேவையில்லை. இந்த வலைப்பூ மற்றும் இவருக்கு பின்னால் இருக்கும் அந்த நபர் போதும்….ஒரு மாதத்திற்கு சர்குலேஷனை ஒப்பேற்றிவிடலாம். ஏற்கனவே “தி டெலிகிராப்” இந்த மேட்டரை அள்ளிக்கொண்டுவிட்டது…நம்மூர்காரர்களுக்கு மே 16 வரை தண்ணியை தலையில் ஊத்தினாலும் போதை தெளியாது. தெளியும் வரை மக்கள் கொஞ்சம் காத்திருக்க வேண்டும். தட்ஸ் ஆல்.

அதிரடி சிக்ஸர், அட்டகாச பவுண்டரி என வீரர்கள் ஒருபுறம், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என அம்மணிகளின் ரவுசு மறுபுறம், இது இரண்டையும் தாண்டி ஐபிஎல்-ஐ சூடேற்றிக்கொண்டிருக்கிறது இந்த முகமூடியின் வலைப்பூ. சத்தமாக சொல்ல வேண்டும் போல தோன்றுகிறது “Cricket is no more Fool’s Game” என்று.
---------------------------------------------------------------------------------------

பின்குறிப்பு: அந்த வலைப்பூவின் முகவரி. http://fakeiplplayer.blogspot.com/
---------------------------------------------------------------------------------------