Wednesday, May 13, 2009

IPL’s Deep Throat - யார் இவர் ?

“நடிகையின் கதை” யில் ஆரம்பித்து தலைமை செயலக டெலிபோன் உரையாடல் வரை, எந்த ரகசியமானலும் சரி, மக்கள் அதன் மேல் காட்டும் ஆர்வம் இருக்கிறதே…அடடா…..இந்த ஆர்வம்தான் ஆரம்பித்து ஒரு மாதமே ஆன ஒரு வலைப்பூவிற்கு ஏறக்குறைய 6700 பிளஸ் பின் தொடர்பவர்களை கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. ஒவ்வொரு பதிவும் சராசரியாக 300-450 பின்னூட்டங்களை பெறுகிறது/பெற்றுக்கொண்டிருக்கிறது.. மேட்டர் ரொம்ப சிம்பிள்…ஒரு அணியின் ஒவ்வொரு அசைவையும் யாரோ ஒரு முகமூடி தனது வலைப்பூவில் எழுதி இணையத்தில் ஏற்றிக்கொண்டே இருக்கிறார். மாட்டிக்கொண்ட அந்த அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ். தீ பற்றி எரிகிறது அந்த அணியில்.

அரசியல் எல்லைக்குள் மட்டுமே கபடி ஆடி கொண்டிருந்த இந்த இன்சைடர் ஸ்பை ஆப்ரேஷன் முதன்முறையாக ஐபிஎல் போட்டிகளுக்கு உள்ளேயும் நுழைந்துள்ளது. போட்டியை தொடர்கிறார்களோ இல்லையோ இந்த வலைப்பூவை நிறைய ரசிகர்கள் தொடர்வது சுத்தமாக தெரிகிறது. அழுகாச்சி டிவி சீரியலுக்காக அடுத்த நாள் வரை காத்திருக்க முடியாமல் தவிக்கும் தாய்குலங்கள் இந்த வலைப்பூவை தொடர்பவர்களிடம் தோற்பது உறுதி……அவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்கள் அடுத்தத்து வெளிவந்துகொண்டே இருக்கும் பதிவுகளில்.

இந்த வலைப்பூவின் சாரம்சத்திற்காக உள்ளே நுழைந்தவர்கள் இப்போது அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து இதை எழுதிக்கொண்டிருப்பது யார் என வெத்தலையில் மை போட்டு பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். அருமையான ஆங்கில நடை, நக்கலான விமர்சனம், தோல்வின் மெல்லிய வலி என கலந்து கட்டி எழுதும் எழுத்துக்கள், கொல்கத்தா நைட் ரைடர்ஸின் தொடர் தோல்வியை சிறிது மறக்க செய்கின்றன. ஆரம்பத்தில் இந்த அணியைப் போலவே மந்தமாக இருந்த இந்த வலைப்பூ இப்போது டெல்லி டேர் டெவில்ஸ் ரேஞ்சில் ஹாட் ஆகிவிட்டது. அணியின் முதலாளி (ஷாருக்கான்) முதல் ஸ்பான்ஸர்ஸ் வரை, இந்த முகமூடிக்குள் ஒளிந்திருக்கும் உண்மையான முகம் யாரென தெரியாமல் மண்டை காய்ந்து போய் இருக்கிறார்கள். தெரிந்தவர்கள் ஷாருக்கை தொடர்பு கொண்டால் சன்மானம் உறுதி.

பற்றி எரிந்து கொண்டிருக்கும் இந்த மேட்டருக்கு அதை எழுதுபவரே இப்போது நெய்யையும் ஊற்றிவிட்டிருக்கிறார்…..ஆரம்பத்தில் ஐபிஎல்லின் இறுதி கட்டத்தில் தான் யார் என்பதை உலகுக்கு பகிரங்கப்படுத்தப்போவதாக அறிவித்தவர், தற்போது தனது முகமூடியை விலக்கி தான் யார் என்பதை உலகுக்கு தெரியபடுத்தவா அல்லது வேண்டாமா என ஒரு சிறிய சர்வே கேள்வியை தனது வலைப்பூவில் வைத்து மேலும் அனலை கூட்டியுள்ளார். இந்த சர்வே ஆரம்பித்த ஒரு வாரத்திற்குள் ஏறக்குறைய 55,000- க்கும் அதிகமானோர் ஒட்டளித்துள்ளனர். மொத்தமாக ஆறு கேள்விகளை கேட்டுள்ளார் மனிதர். அதிலும் அந்த கடைசி கேள்வி……ஹிட் விக்கெட் . சென்ஸ்-ஆப்-ஹுயுமரில் சிக்ஸர் அடித்துகொண்டிருக்கிறார் இந்த முகமூடி.

ஐபிஎல்-இன் இறுதிப்போட்டியில் யார் வென்றாலும் சரி, அது ஏற்படுத்தும் சலசலப்பை விட இந்த பதிவரின் முகமூடி விலகும்போது ஏற்படும் சலசலப்பு பட்டையை கிளப்பப்போவது நிஜம். இந்த முகமூடிக்கு பின்னால் இயங்கும் நபர் எந்த அணியின் வீரராக இருந்தாலும் சரி, அவரின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வரக்கூடிய சாத்தியம் அதிகம், கொஞ்சம் நஞ்சமாகவா கிழிக்கிறார்…நார் நாராக கிழித்து ஊறுகாய் போட்டுக் கொண்டிருக்கிறார். கேப்டன், முதலாளி, அணி மேனேஜர், கோச், சக வீரர்கள் என பேதமே இல்லாமல் சிதறடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்திய மீடியாக்கள் அரசியல் போதை தெளிந்தவுடன் தங்களுக்கு சரக்கு இல்லையே என கவலையே படத் தேவையில்லை. இந்த வலைப்பூ மற்றும் இவருக்கு பின்னால் இருக்கும் அந்த நபர் போதும்….ஒரு மாதத்திற்கு சர்குலேஷனை ஒப்பேற்றிவிடலாம். ஏற்கனவே “தி டெலிகிராப்” இந்த மேட்டரை அள்ளிக்கொண்டுவிட்டது…நம்மூர்காரர்களுக்கு மே 16 வரை தண்ணியை தலையில் ஊத்தினாலும் போதை தெளியாது. தெளியும் வரை மக்கள் கொஞ்சம் காத்திருக்க வேண்டும். தட்ஸ் ஆல்.

அதிரடி சிக்ஸர், அட்டகாச பவுண்டரி என வீரர்கள் ஒருபுறம், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என அம்மணிகளின் ரவுசு மறுபுறம், இது இரண்டையும் தாண்டி ஐபிஎல்-ஐ சூடேற்றிக்கொண்டிருக்கிறது இந்த முகமூடியின் வலைப்பூ. சத்தமாக சொல்ல வேண்டும் போல தோன்றுகிறது “Cricket is no more Fool’s Game” என்று.
---------------------------------------------------------------------------------------

பின்குறிப்பு: அந்த வலைப்பூவின் முகவரி. http://fakeiplplayer.blogspot.com/
---------------------------------------------------------------------------------------

2 comments:

எம்.எம்.அப்துல்லா said...

//அடுத்து..

மிகப்பெரிய புயல் அடிக்கிறது, நிலைமையை அழகாக சமாளித்து கரையேறுகிறார் இவர், இவரின் இந்த திறமைதான் பின்னாளில் இவருக்கான அங்கீகாரத்தையும் அதிகாரத்தையும் அளித்தது. தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய அதிர்வலைகளை தாங்கள் தேர்ந்தெடுக்கப்போகும் வேட்பாளர் ஏற்படுத்தப்போகிறார் என்பது இந்த தொகுதி மக்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு மிக மிக குறைவு…அந்த தொகுதி……

(தொடரும்)

//

நானும் எம்மாநாளா காத்துகினுகீறேன். சுகுறா எழுதுண்ணா

;00)

Rex said...

எழுதுறேன்..எழுதுறேன்.