Tuesday, May 5, 2009

கோபிநாத் – ஜெயபிரகாஷ் நாராயணன் – சரத்பாபு

வோட் பார் சேஞ்ச் (Vote for Change), பாரக் ஒபாமா முதல் பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர் வரை இன்றைக்கு உச்சரிக்கும் மந்திரம் இது. முழுநேர அரசியல்வாதிகள் இதை வெறும் வார்த்தையாக மட்டுமே சொல்லிக் கொண்டிருக்க, இதை செயலில் கொண்டு வருவதற்காக ஒவ்வொரு தேர்தலிலும் அவ்வப்போது சிலர் வெளியில் வந்து முயற்சி செய்வதுண்டு. இந்த தேர்தலிலும் சிலர் அந்த முயற்சியில் இறங்கி உள்ளார்கள்.

சில வருடங்களுக்கு முன்பு பெங்களூர் செல்வதற்காக டெல்லி விமான நிலையத்தின் மெயின் லாபிக்குள் நுழைந்தபோது ஒரு நபர் மிக சத்தமாக “சார் ஏர் டெக்கான் குவஹாத்தி, சார் ஏர் டெக்கான் குவஹாத்தி” என இரண்டு முறை கேட்டார், நான் இல்லை என தலையை ஆட்டிவிட்டு உள்ளே சென்று அமர்ந்துவிட்டேன். என்னைத் தொடர்ந்து பின்னால் உள்ளே நுழைந்த அனைவரிடமும் அவர் அதே பாணியில் கேட்டுக் கொண்டேயிருந்தார். அந்த நபர் நின்றிருந்த இடம் குவஹாத்தி செல்லும் ஏர் டெக்கான் விமானத்தின் போர்டிங் கேட் அருகில்…குவஹாத்தி செல்லும் பயணிகளை கூவி கூவி அழைத்து உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தார். மக்கள் சேவையை விமான நிலையத்தின் உள்ளே வைத்து கொஞ்சம் வித்தியாசமாக செய்து கொண்டிருந்தது ஏர் டெக்கான் நிறுவனம்.

கோயலும், மல்லையாவும் விமான டிக்கெட்டின் விலையை கூட்டி கொண்டிருக்க சத்தமே இல்லாமல் ஏர் டெக்கான் விலையை குறைத்து விளையாடிக் கொண்டிருந்தது. மிக குறுகிய காலத்தில் உருவாகி பரபரப்பை ஏற்படுத்தியோடு மட்டும் இல்லாமல் விலை குறைப்பில் இறங்கி லல்லுவின் ரெயில்வே துறையுடனும் மல்லுக்கு நின்றது ஏர் டெக்கான். கார்ப்பரேட் உலகத்தை தாண்டி சாதாரண நடுத்தர மக்களுக்கும் விமான பயணத்தை நனவாக்கிய பெருமை இந்த நிறுவத்திற்கு உண்டு, அப்படிபட்ட ஒரு துவக்கத்திற்கு முதல் புள்ளியாய் இருந்தவர் கேப்டன் கோபிநாத். தொழில் என்ற எல்லையை தாண்டி மனிதர் கொஞ்சம் மக்களைப் பற்றியும் சிந்தித்தனின் விளைவுதான் இந்த தாறுமாறான விலைகுறைப்பு ஐடியா.

மக்களை உயரத்திற்கு கொண்டு சென்றவருக்கு அந்த மாற்றம் மட்டும் போதுமானதாக தெரியவில்லை போல தெரிகிறது, மக்கள் சேவையே மகேசன் சேவை என நேரடியாக களத்தில் இறங்கிவிட்டார் மனிதர். கர்நாடகாவின் Hi-Fi தொகுதியான பெங்களூர் தெற்கு தொகுதியில் சுயேச்சையாக லேண்ட் ஆகி இருக்கிறார். இவரின் அறிவிப்பை தொடர்ந்து டேக்-ஆப் ஆன சலசலப்பு இன்னமும் அடங்காமல் இருப்பதுபோலத் தான் தெரிகிறது. காங்கிரஸ், பிஜேபி, ஜனதா என இங்கு போட்டியிடும் பெருந்தலைகளுக்கு இவரின் வேட்பாளர் அறிவிப்பு தூக்கத்தை கலைத்திருக்கும்.

மற்ற அரசியல்வாதிகள் போல லௌட் ஸீபீக்கர் வைத்து நோகடிக்காமல் அமைதியாக பிரசாரம் மேற்கொண்டவர். பூங்காக்களிலும், மக்கள் கூடும் பொது இடங்களிலும் நேரிடையாக சென்று பேசி ஒட்டு சேகரித்தது பெரும்பாலானவர்களை கவர்ந்துள்ளது. மாற்றத்தை தனது பிரசாரத்திலேயே செயல்முறைபடுத்த ஆரம்பித்தவர். தென் பெங்களூரின் பவர்புல் கார்ப்பரேட் உலகம் இவரை வெளிப்படையாக ஆதரிப்பது மிகப் பெரிய பலம்.

காற்றில் பறந்து சேவை செய்த இவருக்கு காற்றாடி சின்னத்தை வழங்கியிருக்கிறது தேர்தல் கமிஷன். எவ்வளவு உயரத்திற்கு இந்த காற்றாடியை மக்கள் பறக்க விட்டிருக்கிறார்கள் என்பது மே 16 இல் தெரிந்துவிடும்.
------------------------------------------------------------------------------------------------

குண்டூர் மிளகாவை அரைத்து கண்ணில் ஊற்றியது போல எரிந்து கொண்டிருக்கிறது மணவாடு தேசம். காங்கிரஸ், தெலுங்குதேசம், பிரஜா ராஜ்யம் என ஆள் ஆளுக்கு ஆந்திராவை ராமகுண்டம் ரேஞ்சுக்கு சூடேற்றிக் கொண்டு இருக்க, பதினாறு வயதில் பாகிஸ்தானை புரட்டி எடுத்த சச்சின் மாதிரி நேற்று முளைத்த லோக் சத்தா ஆந்திர அரசியலை தாறுமாறாக தகர்த்து முன்னேறிக் கொண்டிருக்கிறது.. .

கர்நாடகாவிற்கு நிஜமான கேப்டன் என்றால் ஆந்திராவிற்கு நிஜமான டாக்டர் கம் ஐஏஎஸ் அதிகாரி டாக்டர் ஜெயபிரகாஷ் நாராயணன். சுருக்கமாக ஜே.பி. லோக் சத்தாவின் காட் பாதர். ஆந்திராவின் அரசியலை மையமாக வைத்து நடந்து கொண்டிருக்கும் இண்டர்நெட் யுத்தத்தில் இன்றைய தேதிக்கு இவரின் லோக் சத்தா கட்சிதான் சூப்பர் டூப்பர் ஹிட். ஈநாடு தெலுங்கு தேசத்திற்கும், சாக்-ஷி காங்கிரசுக்கும், ஆந்திரஜோதி பிரஜா ராஜ்யத்திற்கும் குடை பிடிக்க, ஒட்டுமொத்த தெலுங்கு இண்டர்நெட் உலகமும் லோக் சத்தாவின் பின்னால் வரிந்து கட்டிக்கொண்டு வேலை செய்வது போல தெரிகிறது.

ஐஏஎஸ் அதிகாரியாக பணிபுரிந்து அரசியலுக்கு வந்திருப்பதால் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. மக்களின் கேள்விகளுக்கு கதையோ கவிதையோ சொல்லி திசை திருப்பாமல் தெளிவான நடைமுறைக்கு சாத்தியமான பதிலை தருகிறார் மனிதர். ஆந்திராவின் எல்லா தரப்பு மக்களையும் டோலிவுட் ஹீரோயின்களைவிட அதிகமாக கவர்ந்துள்ளார். அத்தனையும் ஒட்டாக மாறும்பட்சத்தில் ஆந்திரா நிஜமாகவே ஒளிருவதற்கு வாய்ப்பு இருநூறு சதவீதம் உள்ளது.

எல்லா கட்சியின் தொண்டரடிபொடிகளும் ஹெலிகாப்டரில் பறந்து கொண்டிருக்க மனிதர் தனி ஆளாக ஒட்டு மொத்த ஆந்திராவையும் ரயிலில் சென்று கவர் செய்து கொண்டிருக்கிறார். தகுதியான வேட்பாளர்கள் கிடைக்காத காரணத்தால் ஒட்டு மொத்த ஆந்திராவிற்கும் வேட்பாளர்களை நிறுத்த முடியாத நிலையில் இருக்கிறது லோக் சத்தா. யூகித்துக் கொள்ளுங்கள் எந்த மாதிரியான கட்சி என்று. நம்மூரில் ஒரே தொகுதிக்கு ஒரே கட்சியில் முப்பது பேர் வரிசையில் நிற்கிறார்கள். நல்ல கட்சிக்கு வேட்பாளர் பஞ்சம்….தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சினிமா, பணம், ஆள் பலம் என்ற ஆந்திர அரசியலின் எந்த தகுதியும் இல்லாமலே மக்களை சென்றடைந்திருக்கிறார். ஆந்திர மக்களை எழுப்புவதற்காகவோ என்னவோ இவருக்கு விசில் சின்னத்தை கொடுத்திருக்கிறது தேர்தல் கமிஷன். இவர் அடிக்கும் விசில் சத்தத்தில் மக்கள் லேசாக விழித்தாலே போதும், ஹைதராபாத்தில் லோக் சத்தாவின் கொடி உயர பறக்கும். பார்க்கலாம் மே 16 அன்று என்ன நடக்கிறது என்று.
------------------------------------------------------------------------------------------------

ஒவர் டூ மடிப்பாக்கம்….முன்னவர்கள் இருவரும் சீனியர்கள் வயதிலும் அனுபவத்திலும், இருவருக்குமே ஒரளவு அரசியல் ரீதியான அனுபவம் உள்ளது. இதெல்லாம் ஒரு பெரிய மேட்டரே இல்லை என சொல்லாமல் சொல்லி களத்தில் இறங்கிவிட்டார் சரத்பாபு. அம்மாவும், அய்யாவும், கேப்டனும் தமிழ்நாட்டை கூறு போட்டு பந்தாடிக் கொண்டிருக்க, சத்தமே இல்லாமல் சென்னையின் உஷ்ணத்தை இன்னும் கொஞ்சம் கூட்டி கொண்டிருக்கிறார் சரத். இவரை ஆதரித்தும் எதிர்த்தும் இணையத்தில் எழுதும் அளவிற்கு தென்சென்னையின் முக்கிய வேட்பாளராக விசுவரூபம் எடுத்து இருக்கிறார்.

இவரின் பின்புலம், படிப்பு விவரம் போன்ற இத்யாதிகளை பலரும் துவைத்து காயப்போட்டு விட்டார்கள், விதம் விதமாக அவர் அவருக்கு பிடித்த வகையில். போதாத குறைக்கு பத்திரிகைகளின் அதீதமான எழுத்துக்கள் இவரை தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு போய் சேர்த்திருக்கிறது. Indirect Marketing மனிதருக்கு நன்றாகவே வேலை செய்கிறது. இதை கன்சாலிடேட் செய்வாரா என்பதை கொஞ்சம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

வேட்டி கட்டிய அரசியல்வாதிகளையே பார்த்து பார்த்து புளித்து போன தமிழக வாக்காள பெருமக்களின் கண்களுக்கு இவரின் தோற்றமே ஒரு மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. ஓட்டு வாங்க இது மட்டுமே போதாது என்று சரத்துக்கு தெரிந்திருக்கும் என்று நம்புவோமாக. மே 16 அன்று முடிவுகள் எப்படி இருந்தாலும் இவர் இழப்பதற்கு ஒன்றும் இல்லை, எதிர்காலத்தில் இன்னொரு சந்தர்ப்பம் வாய்த்தால் இந்த அனுபவத்தை பயன்படுத்தி இன்னும் கொஞ்சம் மேலே போகலாம்.

ஒரு பயலும் சரியில்லை என்ற மனநிலையில் உள்ள தமிழக வாக்காளர்கள் நிஜமாகவே ஒரு மாற்றத்தை விரும்பும் பட்சத்தில் சரத்துக்கு “டெல்லி சலோ” வாய்ப்பு நிஜமாகலாம்.

------------------------------------------------------------------------------------------------

கோபிநாத், ஜே.பி ஆகியோரின் பரீட்சை முடிந்துவிட்டது…முடிவுக்காக காத்திருக்கிறார்கள்….சரத்துக்கு இனிமேல் தான் பரீட்சையே நடக்கப் போகிறது…….மாற்றத்திற்கு தென்சென்னை மக்கள் தயாரா இல்லையா என்பது மே 16 அன்று தெரிந்துவிடும்.

-------------------------------------------------------------------------------------------------

No comments: