Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

Saturday, September 27, 2008

ஹிதேந்திரன் - சமர்ப்பணம்

மறைந்தும் வாழும் ஆத்மா ஹிதேந்திரனுக்கு இந்த எழுத்துக்கள் சமர்ப்பணம்.



தீக்குச்சியாய் எரிந்தணைந்தாய்
தீபமாய் மற்றவர் வாழ.

இறந்தும் உயிர்கொடுத்தாய்
இருண்டவர் விழிகளில் ஒளிகொடுத்தாய்

மரணத்திற்கு உன்
வாழ்க்கையை பரிசாக்கினாய்
மற்றவரின் உடலில் கரைந்து
அவர் வாழ்க்கையை ஒளியாக்கினாய்

மூன்று நாட்கள் கழித்து
உயிர்த்தெழுந்தான் தேவன்
உலகை இரட்சிப்பதற்காக...

முப்பது நிமிடங்களில்
உயிர்தெழுந்தாய் நீ
இன்னொரு உயிர் காப்பதற்காக

மரித்துப்போகும் மனிதனுக்கு
இரங்கற்பா எழுதும் பேனாக்கள்
இனி
மரணத்தை வென்று வாழும்
உனக்கு வாழ்த்துப்பா எழுதட்டும்.

Wednesday, September 24, 2008

இமைகளின் அசைவில்

கொஞ்சமாய் கனவுகள்..
அளவாய் கண்ணீர்த்துளிகள்..
அபூர்வமாய் உறக்கம்..
இமைகளின் அசைவில்
நீ காணாமல் போகும்
அந்த சில கணங்களில்.

Sunday, September 21, 2008

மெளன மொழி



உன் நிசப்தங்களின் போதெல்லாம்
உலகம் அமைதியாகிவிடுகிறது.
உன் மெளனம்
கலைக்கப்படக் கூடாதென்பதற்காக..


உன் உச்சரிப்புக்களின் போதெல்லாம்
உலகம் அமைதியாகிவிடுகிறது.
உன் வார்த்தைகள்
ரசிக்கப் படவேண்டும் என்பதற்காக..

பூக்களின் ஊர்வலம்

காம்பின் விழிகளில் கண்ணீர்
இறுக்கி அணைக்கப்பட்ட
மாலைகளாய்
இறுதி ஊர்வலத்தில் பூக்கள்.

அஞ்சலி

மெல்ல இறந்து கொண்டிருந்தது
மெழுகுவர்த்தி
மறைந்துவிட்ட மனிதனின்
இரங்கல் கூட்டத்தில்.