Sunday, January 22, 2012

துர்காதேவி

தமிழ்நாட்டில் மருத்துவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வை முன்னிறுத்தி டாக்டர் ருத்ரன் சமீபத்தில் பதிவொன்றை எழுதியிருந்தார். மருத்துவர்களின் ஒற்றுமையின்மையின் காரணமாக “ஸ்ட்ரைக்” என்னும் சுண்ணாம்பை அவர்களால் வேகவைக்க முடியவில்லை என குறிப்பிட்டிருந்தார். அவரது ஆதங்கத்தை ரசிக்க முடியவில்லை. மருத்துவர்கள் ஒற்றுமையுடன் “ஸ்ட்ரைக்” செய்திருந்தாலும் போய்விட்ட அந்த இரண்டு உயிர்களை திரும்ப கொண்டு வந்திருக்க முடியாது. இறுதியாக பராசக்தியிடம் சில கோரிக்கைகளை வைத்து பதிவை முடித்திருந்தார். அந்தப் பதிவின் ஈரம் காயும் முன்பாகவே மேற்கு வங்காளத்தில் பராசக்தியிடமே தங்கள் மேன்மையை காட்டிவிட்டார்கள் அரசாங்க ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர்.

பிரசவத்திற்கு வந்த ஒரு பெண்ணை இரண்டு அரசு ஆஸ்பத்திரி நிர்வாகங்கள் அலைகழிக்க விட்டிருக்கின்றன. விளைவு இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்துவிட்டு சாலையோரத்தில் அந்த பெண் இறந்திருக்கிறார். மனிதாபிமானமில்லாத இந்த செயலை கண்டித்து வேலை நிறுத்தம் செய்ய எந்த இரக்கமுள்ள மருத்துவரும் இதுவரை முன்வந்ததாக தெரியவில்லை. குறைந்தபட்சம் ஒரு கண்டன அறிக்கைகூட இதுவரை வெளிவரவில்லை. இறந்துபோனவள் சாதாரண மனுஷி, அவளுக்கெதற்கு இரக்கம் என விட்டிருக்கலாம். இறந்து போனவளின் பெயர் உமாதேவியாம். சுடுகாட்டை காவல் காப்பவனை காத்து நிற்பவள். தங்களின் அலட்சிய போக்கால் இறந்து போனது சாட்சாத் அந்த பராசக்தியேதான் என்பதாவது இவர்களுக்குத் தெரியுமா என்பது தெரியவில்லை. சினங்கொண்டவளாய் தீமையை அழித்தபடி நிற்கும் அந்த துர்கா தேவியின் காலடி மண்ணிலேயே நடந்துவிட்ட செயலுக்கு யாரிடம் சென்று நியாயம் கேட்பது எனத் தெரியவில்லை.

------------------------------------------------------------------------------------
ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் செய்தியை வெளியிட்டதற்காக நக்கீரன் பத்திரிகை வருத்தம் தெரிவிக்கவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. வரவேற்கவேண்டிய விஷயம். வெறும் பரபரப்பிற்காக எதை வேண்டுமானலும் செய்தியாக போடலாம் என்ற அரிப்பில் உள்ளவர்களுக்கு இந்த தீர்ப்பு கொஞ்சம் நிதானத்தைக் கொடுக்கும்..அதே சமயம் அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொண்டு பத்திரிகை அலுவலகத்தை தாக்கியது பற்றியோ அல்லது அவர்களால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட இடைஞ்சல்கள் பற்றியோ எந்த கருத்தையும் தெரிவிக்காமல் நீதிமன்றம் கழண்டு கொண்டது கொஞ்சம் நெருடுகிறது.

பதவியில் இருப்பவர்களின் வழக்கை மட்டும் உடனடியாக விசாரித்து நிவாரணத்தை வழங்கும் நீதிமான்கள் அதே வேகத்தை சாமன்ய மக்களும் வழங்கினால் நீதிதேவதை நிஜமாகவே சந்தோஷப்படுவாள். மின்வெட்டு, விலைவாசி உயர்வு, மக்களின் வரிப்பணத்தில் கோடி கோடியாய் செலவழித்து கட்டப்படும் அரசு அலுவலங்களை ஏதாவது வெற்று காரணத்தைச் சொல்லி தங்கள் Ego-விற்காக மாற்றிக்கொண்டேயிருக்கும் போக்கு போன்றவற்றையும் இதே வேகத்தில் கண்டித்தால் மக்களுக்கு கொஞ்சம் ஆறுதலாயிருக்கும்.

------------------------------------------------------------------------------------

எழிலக கட்டிட தீயை அணைப்பதற்காக போராடி தனது உயிரை இழந்திருக்கிறார் ஒரு மாவீரர். RIP Sir. இன்னும் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருப்பதாக தெரிகிறது. அனைவரும் விரைவில் குணமடைந்து நல்ல நிலைக்கு திரும்ப வாழ்த்துக்கள். வெறும் ஆயிரங்களில் சம்பளத்தை வாங்கிக்கொண்டு தங்கள் உயிரை பணையம் வைத்து பொதுமக்களின் உடமையைக் காக்க போராடும் இவர்கள் நிச்சயம் கொண்டாடப்பட வேண்டியவர்கள். தீயணைப்பு வீரர்களைப்போல வெள்ளித்திரையில் வேஷம் போடுபவர்களை தலையில் தூக்கி வைத்து ஆடும் மக்கள் நிஜமான இந்த ஹீரோக்களை நிராகரிப்பது நியாயமற்ற செயல்.

தமிழ்நாட்டில் மற்ற எல்லா அரசுத் துறைகளும் கொஞ்சம் வனப்பாக மாறிவிட்டாலும் தீயணைப்புத்துறை மட்டும் இன்னமும் அப்படியே பழமை மாறாமல் இருக்கிறது. எங்கள் பகுதியில் சிறுவயதில் பார்த்த தீயணைப்பு நிலையம் பல வருடங்கள் கடந்த பின்னும் இன்னமும் அதே நிலையில் தான் இருக்கிறது. எல்லா அரசு அலுவலகங்களும் புது புது கட்டிடங்களுக்கு குடிபெயர்ந்து விட்டபின்னும் இன்னமும் அதே இடத்தில் எந்த வித மாற்றமும் இல்லாமல் இவர்களை வைத்திருப்பது நியாமற்றதாக இருக்கிறது.

உலகில் உள்ள வளர்ந்த தேசங்களில், அமெரிக்கா உட்பட இந்த துறைக்கு கிடைக்கும் மரியாதையே தனி. நம்மூரிலும் இதே மரியாதையை கொடுத்து இவர்களை கொண்டாடினால் நாடு இன்னும் கொஞ்சம் சுபிட்சமடையும்

No comments: