இன்று ஒரு தகவல்…எல்லோராலும் ரசிக்கபட்ட நிகழ்ச்சி. இப்போது மறு ஒலிபரப்பு செய்தாலும் நின்று கேட்டுவிட்டு செல்லலாம். ஆல் இந்திய ரேடியோவில் ஒலிப்பரப்பபட்ட பல நிகழ்ச்சிகள் மிகவும் கடியானதாக இருந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் இன்னமும் நினைவுகளில் பசுமையாக இருக்கின்றன. தென்கச்சி அவர்களின் ஐந்து நிமிட பேச்சை கேட்கவேண்டும் என்பதற்காக சரோஜ் நாராயண்சாமி செய்தியை வாசித்து முடிக்கும் வரை பொறுமையாக காத்திருந்ததெல்லாம் வாழ்க்கையின் பொற்கால தருணங்கள். சரோஜ் நாராயண்சாமி ஆணா அல்லது பெண்ணா என்ற சந்தேகம் நீண்ட நாட்களாக இருந்தது வேறு கதை.
ஐந்து நிமிடத்திற்கும் குறைவாகவே ஒலிபரப்பான இன்று ஒரு தகவல் நிகழ்ச்சியை இன்றைய தேதி வரை மற்ற எந்த ஒலிபரப்பாலும் அடித்துக்கொள்ள முடியவில்லை. ஜவ்வு மாதிரி இழுத்துக்கொண்டே செல்லும் தொலைக்காட்சி தொடரை இயக்கும் இயக்குநர்கள் ஏன் இந்த மாதிரி Short & Sweet ஆன நிகழ்ச்சியை யோசிக்காமலே இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.
இந்த நிகழ்ச்சியின் ஹைலைட்டே இவர் சொல்லும் சில குட்டி கதைகளும், உதாரணங்களும் தான். நிகழ்ச்சியை ஆரம்பிக்கும்போதே மிகவும் யதார்த்தமாக எந்த வித பில்டப்பும் இல்லாமல் டாப் கியரில் மேட்டருக்குள் சென்றுவிடும் இவரின் இயல்பான பேச்சு நடை கேட்பதற்கு இனிமையானது. “இத இப்ப இங்க எதுக்கு சொல்றேன்னா” என இவர் பேசும் அந்த கோவை வட்டார பேச்சு காலையில் சிடு சிடுவென இருக்கும் மனிதர்களின் முகங்களில்கூட புன்னகையை வரவழைத்துவிடும்.
தமிழ்நாட்டில் சில குரல்கள் ஏறக்குறைய எல்லோருக்கும் மிகவும் பரிச்சயமானதாயிருக்கும். TMS, திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள், எம்.என்.நம்பியார், எம்.எஸ்.எஸ், சாலமன் பாப்பையா என நீண்டுகொண்டே போகும் இந்த பட்டியலில் சந்தேகேமே இல்லாமல் திரு. தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்களின் பெயரையும் சேர்த்துவிடலாம். விநாடி வினா, வயலும் வாழ்வும், இன்று ஒரு தகவல், L.R.Swamy விளம்பரம் என ஒரு காலத்தில் லயித்திருந்த ஆல் இந்திய ரேடியோ நிகழ்ச்சிகள் இன்று கேட்க விரும்பினாலும் கிடைக்காத பொக்கிஷங்களாக மாறி இன்னும் ஒரு வருடம் பின்னோக்கி போய்விட்டன. ஆனால் அந்த குரல்கள் மட்டும் மனதிற்குள் ஓயாமல் எதிரொலித்துக் கொண்டேயிருக்கின்றன.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment