பிறர் தங்களை விமர்சனம் செய்வதையே தாங்கிக் கொள்ள முடியாத மனிதர்கள் மத்தியில் தங்களையே சுய விமர்சனம் செய்து பார்க்கவேண்டும் என நினைப்பவர்கள் இரண்டு புத்தகங்களை தவறாமல் படித்துவிடுவது நல்லது. ஒன்று மகாத்மா காந்தியின் “The story of My Experiments with Truth”. மற்றது கண்ணதாசனின் “வனவாசம்”
எப்படி வாழலாம் எப்படி வாழக்கூடாது என்ற இரண்டிற்கும் சரிசமமாக நியாயம் செய்திருக்கிறார் கண்ணதாசன் aka திரு. ஏ.எல்.முத்தையா. இவரைப் பற்றி படிக்கும் போதெல்லாம், கவிகள் எப்போதும் வறுமையில் வாடியதாகவும் அரசர்களின் பரிசை நம்பியே குடும்பத்தை நடத்தியதாகவும் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருக்கும் வரலாற்று புத்தகங்கள் மீது லேசான சந்தேகம் வருகிறது. சோம பானம், சுறா பானம் போன்ற வஸ்த்துக்களுடன் ஏறக்குறைய அரசர்களுக்கிணையான ஒரு வாழ்க்கையையே அவர்களும் வாழ்ந்திருப்பார்கள் போல தெரிகிறது.
M.K.T திரைத்துறையில் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் வாழ்ந்த மக்கள் மிகவும் சந்தோஷத்துடன் வாழ்ந்திருக்க வேண்டும். நின்றால் பாடல், நடந்தால் பாடல் என காசு கொடுத்து வாங்கிய அத்தனை பிலிம் ரோலையும் வெறும் பாட்டுப்பாடியே நிரப்பியிருக்கும் அவர் காலத்து பாடல்களில் காதல் ரசத்தை தவிர்த்து பிற வாழ்வியல் சமாச்சாரங்கள் சல்லடை போட்டு தேடினாலும் அவ்வளவாக கிடைப்பதில்லை. கண்ணதாசன் அந்த வெற்றிடத்தை அழகாக நிரப்ப முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்றிருப்பதாகவே தெரிகிறது.
காதல், சந்தோஷம் போன்ற விஷயங்களுக்கு அப்பால் உள்ள நடைமுறை உலகத்தை மென்மையாகவும் தைரியமாகவும் இவருக்கு முன்னும் சரி பின்னும் சரி எந்த ஒரு திரைப்பட பாடலாசிரியரும் இவரைப்போல வெற்றிகரமாக படைத்திருப்பதாக தெரியவில்லை. போனால் போகட்டும் போடா போன்ற Reality வரிகளை கண்ணதாசனுக்குப் பிறகு யாரும் தொட்டதாக தெரியவில்லை.
தமிழகத்தின் ஏதோ ஒரு மூலையில் எப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கும் தன் பாடல் வரிகளின் வழியாக என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் கவியரசருக்கு Belated Birthday (24-June) Wishes
-----------------------------------------------------------------------------------
பேரரசு இயக்கிய படங்கள் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும்போது மக்களுக்கு சாமி வருவதற்காக மஞ்சள் தண்ணி தெளிப்பது போல MJ Concert-க்கு டிக்கெட் வாங்கும்போதே மக்களை மந்திரித்து விட்டுவிடுவார்கள் போலத் தெரிகிறது. எந்த விஷுவலில் பார்த்தாலும் மக்கள் அனைவரும் ஒரு மாதிரி ஆடியபடியேதான் இருக்கிறார்கள். எல்லோரையும் ஆட்டுவித்த King of Pop மறைந்து ஒரு வருடம் ஓடிவிட்டது.
லைம் லைட்டிற்குள் வந்துவிட்டால் தும்முவதை கூட முதல் பக்கத்தில் கொண்டுவந்துவிடும் மீடியாக்காரர்களுக்கு MJ மாதிரியான ஆட்கள் அமுதசுரபி மாதிரி…..மறைந்து ஒரு வருடம் கழிந்த பின்னும் இன்னமும் பத்திரிகைகளுக்கு செய்தியை வாரி வழங்கிக் கொண்டே இருக்கிறார் மனிதர்.
உயிருடன் இருந்தபோது இருந்த fame இன்னமும் அப்படியே இருக்கிறது மனிதருக்கு. MJ வின் ஆல்பத்தின் பக்கம் தலைவைத்து படுத்திராதவர்கள் கூட சென்ற வருடம் இவர் மறைந்தவுடன் முட்டி மோதி ஒரு காப்பி Thriller-ஐ வாங்கி பத்திரப்படுத்திவிட்டார்கள். கிடைத்த கேப்பில் ரைட்ஸ் வாங்கி வைத்திருந்த ரிக்கார்டிங் நிறுவனங்கள் காசை அள்ளிவிட்டன. இன்னமும் அள்ளிக்கொண்டிருக்கின்றன. யானை இருந்தாலும் பொன் இறந்தாலும் பொன்.
R.I.P MJ
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment