நிகழ்காலத்தில் இந்தியாவில் பிரபலமாவதற்கு பெரிய அறிவாளியாகவோ அல்லது முட்டாளாகவோ இருக்க வேண்டியதில்லை. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்களை ஊழலுக்கு எதிரான பேர்வழியாக காட்டிக்கொள்ள வேண்டும், ஒரு ஆயிரம் பேரை எப்படியாவது உங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணைத்துவிட்டு, தடாலடியாக ஒரு உண்ணாவிரதத்தை நடத்தினால் போதும். மது இல்லாத மலரைக்கூட முகரத் துடிக்கும் காய்ந்துப்போன வண்டைப்போல மீடியாக்கள் எல்லா பக்கத்திலும் உங்களை செய்திகளில் போட்டு தங்கள் தினத்தை ஒப்பேற்றிவிடுவார்கள். உலகெங்கிலும் உள்ள பிரபல சேனல்களில் வரும் செய்திகளை Ctrl+c & Ctrl+v செய்து கல்லா கட்டிக்கொண்டிருக்கும் பித்துக்குளி ஆசாமிகளுக்கு யார் செய்தி கொடுத்தாலும் ஒ.கே தான்.
இன்னும் ஒரு படி கொஞ்சம் மேலே போக விரும்பினால், சென்னையிலோ, டெல்லியிலோ ஒரு பத்து யுவதிகளை கையில் மெழுவர்த்தி ஏந்தி நின்று போஸ் கொடுக்கும்படி செய்துவிட்டால் போதும்…உங்கள் பிரபல பயணம் டாப்கியரில் செல்ல ஆரம்பித்துவிடும். இந்த Candle light vigil, Candle light dinner போன்ற வஸ்த்துக்களையெல்லாம் ஏதோ ஒரு வீணாய்ப்போன NRI ஆசாமி எங்கிருந்தோ தொத்திக் கொண்டு வந்து இந்தியாவில் பரப்பி இருக்கவேண்டும் என நினைக்கிறேன். நான் அறிந்த வரைக்கும் ஐந்து ஆண்டுக்கு முன்னால் கூட இந்த மெழுகுவர்த்தி ஏந்தி போராடுவது போன்ற வகையறா எல்லாம் இந்தியாவில் புழக்கத்திற்கே வரவில்லை. கேரளாவில் காம்ரேடுகள் இரவு நேர போராட்டங்களின் போது தீப்பந்தத்தை கையில் ஏந்தி செல்வதை சில நேரங்களில் பார்த்ததோடு சரி….இந்தியா ஒளிர்கிறது என்பதை மக்கள் தப்பாக புரிந்துகொண்டுவிட்டார்கள் போலத் தெரிகிறது. என்ன கொடுமை சார் இது.
இவர்கள் போட்ட கூச்சலில் இப்போதெல்லாம் யாராவது Foot Ball, Volley Ball, கோபால் என எது சொன்னாலும் என் காதில் லோக்பால் என்றே கேட்கிறது. தங்களால் முன்வைக்கப்பட்ட திட்டத்தை உடனடியாக சட்டமாக அமல்படுத்தாவிட்டால் உன் பேச்சு க்கா, போ உன்கிட்டே பேசமாட்டேன்…என இவர்கள் பத்திரிகைகளில் பேட்டி கொடுப்பது லொள்ளு சபா காமெடியை விட அதிகமாக சிரிப்பை வரவழைக்கிறது.. போதாத குறைக்கு காங்கிரஸ் மேல் உள்ள காண்டில் இவர்கள் இன்னொரு ஊழல் அரசியல்வாதியை மறைமுகமாக ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்ய முனைவது லூசுத்தனமாக இருக்கிறது. இவர்களின் நோக்கம் லோக்பாலை வலியுறுத்துவது மட்டுமா அல்லது அதையும் தாண்டி ஏதாவது Hidden Agenda இருக்கிறதா என்பது தெரியவில்லை.
இனிவரும் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து பிரச்சாரம் செய்யப்போவாதாக சொல்பவர்கள் அந்த கட்சிக்கு மாற்றாக எந்த வேட்பாளரை ஆதரிக்கிறார்கள் என்பதை தெளிவாக்க வேண்டும். நம்மூரில் தேர்தல்களில் நடுநிலைமை எல்லாம் வகிக்க முடியாது. எந்த கட்சியும் யோக்கியர்களை நிறுத்தாதபோது காங்கிரஸை மட்டுமே இவர்கள் எதிர்ப்பது சந்தேகத்தை கிளப்புகிறது. திருடர்களில் சூப்பர் திருடன், சுமாரான திருடன் என பாகுபாடு பார்ப்பதுதான் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். இதைத்தான் இப்பொழுது முழு மூச்சாக இவர்கள் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். இதையும் Justify செய்ய ஒரு சின்ன அறிவாளிகளின் கூட்டம் இவர்கள் பின்னால் இருக்கிறது.
இவர்கள் கொண்டுவர விரும்பும் சட்டத்தை எந்த தேதிக்குள் நிறைவேற்ற வேண்டும், எந்த அமைச்சர் தங்களிடம் பேசவேண்டும்/பேச கூடாது, தங்களுக்கு எதிராக எந்த குற்றச்சாட்டை யார் கூறினாலும் அடுத்த நிமிடமே இது ஒரு சதிவேலை என கூறி ஜகா வாங்குவது என பல பரிமாண வளர்ச்சியை அடைந்து அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி அரசியல்வாதிகளுக்கு இணையான வேகத்துடன் முன்னேறிக்கொண்டே இருக்கிறார்கள். லோக்பாலை நிறைவேற்றாவிட்டால் ஒட்டு மொத்த அரசாங்கமும் பதவியில் நீடிக்ககூடாது என இவர்கள் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை வீட்டிற்கு போகச் சொல்லிவிட்டு யாரிடம் போய் லோக்பாலை நிறைவேற்ற கேட்பார்கள் எனத் தெரியவில்லை. ஜனநாயகத்தின் அடிப்படையே தெரியாமல் சும்மானாச்சும் வெறும் செய்திகளில் இந்த மாதிரி முட்டாள்தனமாக எதையாவது உளறிக்கொட்டிக் கொண்டிருந்தால் இருக்கும் பத்து பேரும் மெல்ல கழண்டு கொள்வார்கள்.
1.2 பில்லியன் மக்கள் தொகை கொண்ட தேசத்தில் ஒரு சில ஆயிரம் பேரை திரட்டிவிட்டதால் என்ன வேண்டுமானாலும் பேசலாம், கேட்கலாம் என்றால் நம்மூர் கோடம்பாக்க சுனாமி நமீதா கூட நாளையே அதைவிட ஒரு பெரிய கூட்டத்தை கூட்டிக் காட்டுவார். அப்புறம் அவர் வைக்கும் ஏதாவது ஒரு கோரிக்கையை அரசாங்கம் நிறைவேற்றவேண்டும் என மீடியாக்கள் அலற ஆரம்பித்துவிடும். இவர்கள் செய்யும் லீலைகளுக்கு மோகன் தாஸ் கரம்சந்த் காந்தியை வேறு துணைக்கு அழைத்துக்கொள்கிறார்கள்….காந்தி இருந்திருந்தால் தலையில் அடித்துக்கொண்டிருப்பார். இவர்களுக்கு உண்மையிலேயே ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற அக்கறையிருந்தால் முதலில் மக்களை திருத்துவதற்கு வழியை தேடியிருக்கவேண்டும் அதைவிட்டு விட்டு ஒரு சின்ன சட்டத்தின் மூலம் ஊழலை ஒழித்துவிடலாம் என நினைப்பது அறியாமையின் உச்சகட்டம். ஏற்கனவே இருக்கும் எந்த ஒரு சட்டத்தையும் எவனும் முழுதாக மதிக்காதபோது இந்த லோக்பால் பில் இன்னொரு சட்டமாக அரசியல் அமைப்பு சாசனத்தில் பதியப்படுவதை தவிர வேறு எந்த பெரிய மாற்றத்தையும் கண்டிப்பாக ஏற்படுத்தப்போவதில்லை. வாத்தியார் பாடியது போல “திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது”…அவ்ளோதான்.
----------------------------------------------------------------------------------

ஸ்டெபியும், மோனிகா செலஸும் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றிறுக்காவிட்டால் அவர்களை இன்றைய தேதிக்கு யாருக்குமே தெரிந்திருக்காது. ஆனால் எந்த ஒரு பெரிய பட்டத்தையும் வெல்லாமலே சிலரை அனைவருக்கும் தெரிந்துவிடுகிறது அல்லது பிடித்துவிடுகிறது. அம்மணி அன்னா கோர்னிக்கோவ் சந்தேகமே இல்லாமல் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர். கேப்ரியாலா சபாடினிக்கு பிறகு வறண்டு போயிருந்த டென்னிஸ் உலகத்தை மீட்டெடுத்த பெருமை பேரிளம்பெண் அன்னா கோர்னிக்கோவையே சேரும்.
சில வருடங்களுக்கு முன்னால் ஏதோ ஒரு விடலைப்பையன் சின்ன வைரஸ் ப்ரோகிராமை எழுதி நெட்டில் விட்டுவிட்டான். அந்த ஆசாமி செய்த ஒரே நல்ல விஷயம் அந்த ப்ரோகிராமிற்கு ஒரு நல்ல பெயரை வைத்தது தான்…அதன் பெயர் அன்னா கோர்னிக்கோவ் :-)
அன்னாவை பற்றி ஏன் இதுவரை எழுதவில்லை என்று கேட்ட நண்பர் எந்த அன்னா என்று குறிப்பிட்டு சொல்ல மறந்ததின் விளைவுதான் மேலே உள்ள மேட்டருக்கு மூல காரணம். மற்றபடி எனக்கு எப்போதும் பிடித்த டென்னிஸ் வீரர் ஜான் மெக்கன்ரோ மட்டுமே.

No comments:
Post a Comment