Wednesday, May 9, 2012

நித்தி-யிஸம்-பவர்


முடி துறந்து சாமியார் ஆனவர்களை பற்றி படித்து படித்து போரடித்திருந்த வேளையில் மாடர்ன் டே சாமியார்கள் துறவை மறந்து லெளதீக வாழ்க்கைக்கு திரும்பி வருவதற்காக ஏகத்துக்கும் மெனக்கெடுவதை பார்ப்பது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது. மதுரை ஆதீனமாக “நித்தியை” நியமித்த ஒலி-ஒளியைப் பார்த்த போது சிறுவயதில் இராமாயணத் தொலைக்காட்சித் தொடரில் பார்த்த ராமர் பட்டாபிஷேக வைபவம் நினைவில் நுழைந்து சடாரென விலகியது. இப்பொழுது ஆதீனமாக இருப்பவரும் நித்தியும் ஒருவருக்கொருவர் கிரீடத்தை தங்கள் தலைகளில் மாற்றி மாற்றி வைத்து புளங்காகிதம் அடைவதை எல்லா தொலைக்காட்சியும் ஐபிஎல் கிரிக்கெட் மேட்சுக்கு இணையாக கவர் செய்தது காணக் கிடைக்காதது. கூடிய விரைவில் மக்கள் காதில் இவர்கள் வைக்கபோகும் பூவையும் அப்படியே படம் பிடிக்க நம்மூர் மீடியாக்காரர்கள் இதே போல தயாராக இருப்பார்கள் என நம்புகிறேன்.

மக்கள் மத்தியில் சாமியார்கள் சர்வலோக வலி நிவாரணி மாதிரி மாறிவிட்டார்கள், இல்லாவிட்டால் சர்வ சாதரணமாக ஒரு கோடி ரூபாயை ஆதீனத்திற்கு அள்ளித் தெளித்துவிட்டு இன்னும் பல கோடியை பிறகு தருவேன் என நித்தி பேசுவதை எல்லாம் மக்கள் கேட்டுக்கொண்டிருக்கும் நிலைக்கு நாடு சென்றிருக்காது. ஐந்துக்கும் பத்துக்கும் இப்படி கீ-போர்டை தட்டிக்கொண்டிருப்பதற்கு பதிலாக சுவாமி ஜில்பானாந்தா மாதிரி ஏதாவது செய்து பார்க்கலாமா என்பதைப் போன்ற விபரீத கேள்விகளையெல்லாம் சில நண்பர்கள் விளையாட்டாக கேட்பதைப் பார்த்தால் விரக்தியின் உச்சியின் இருப்பவன் எவனாவது நிஜமாலுமே காவியை கையில் எடுத்து களங்கப்படுத்திவிடுவானோ என அடிவயிற்றில் கிலி பிடிக்கிறது.

கடவுள் பெயரை சொல்லி எவன் எவ்வளவு கறுப்பு பணத்தை சேர்த்தாலும் வருமானத்துறை அதிகாரிகள் கண்ணை கட்டிக்கொள்வார்கள் போலத் தெரிகிறது. முற்றும் துறந்தவனுக்கு எதற்கு தங்கத்தில் கிரீடமும் கேளிக்கை விடுதியை மிஞ்சும் செட்டப்பில் மடங்களும் என்பது மண்டையை குடைந்து கொண்டிருக்கும் கேள்வி. மூன்று வருடங்களுக்கு முன்பு திருவண்ணாமலை கிரிவல பாதையில் மூன்றாம் ஜாமத்தில் கஞ்சாவை உறிஞ்சியபடி அமாவாசை கரும் இருளில் நண்பர்களுடன் பேசியபடியே வந்த பேர் தெரியாத சித்தர் பாடிய பட்டினத்தார் பாடல் இன்றைய சாமியார்களுக்கு சாலப் பொருத்தம்.

“பொல்லாதவன், நெறி நில்லாதவன், ஐம்புலன்கள்தமை
வெல்லாதவன், கல்வி கல்லாதவன், மெய்யடியவர்பால்
செல்லாதவன், உண்மை சொல்லாதவன், நின் திருவடிக்கண்பு
இல்லாதவன், மண்ணிலேன்பிறந்தேன் கச்சியேகம்பனே”
=============================================================================================
ஆட்களை கடத்துவது நிச்சயமாக மாவோயிஸமும் இல்லை ஹீரோயிஸமும்  இல்லை என்பதை யாரவது ஒரு பக்கா கம்யூனிஸ்ட் தோழர், மாவோயிஸ்ட்டுகள் என்று தங்களைத் தாங்களே அழைத்துக்கொள்ளும் கூட்டத்திடம் சொல்லிவிடுவது நல்லது. எம்.எல்.ஏ, கலெக்டர் என இவர்கள் தொடர்ந்து மனிதர்களை கடத்துவதால் மார்க்ஸியம் மீதான தவறான இமேஜை தொடந்து உருவாக்கி கொண்டேயிருக்கிறார்கள். புரட்சி செய்பவனாக தங்களை காட்டிக்கொள்பவர்கள் சேகுவாரே-வின் டி-சர்ட்டை அணிந்து கொள்வதால் மட்டுமே பெரிய ஹீரோவாக மாறிவிடமுடியாது என்பதை யாராவது இவர்களுக்கு ஒதி விடுவது நலம்.

மாவோ-வும், இன்ன பிற கம்யூனிஸ்ட் பெருந்தலைகளும் தலைமறைவு வாழ்க்கையை வாழ்ந்தாலும் அவர்கள் போராட்டம் உழைக்கும் வர்க்கத்தை முன்னிறுத்தி மட்டுமே இருந்தது. ஆனால் இன்றைய அதிரி புதிரிகள் வெறும் கப்பம் வசூலிப்பதற்காக அந்த கொள்கைகளை பயன்படுத்திக் கொள்வது சகிக்கவில்லை. இதற்கு பேசாமல் முதலாளித்துவத்தை தழுவிவிடலாம் அட்லீஸ்ட் பொதுமக்கள் கொஞ்சம் நிம்மதியாக இருப்பார்கள். நாடோடி மன்னனில் எம்ஜியார் செய்த சாகஸகங்களையெல்லாம் கி.பி.2012 இல் செய்வேன் என இவர்கள் அடம்பிடிப்பது கொஞ்சம் ஓவராக இருக்கிறது அதுவும் நிஜத்தில். அப்படியே எதையாவது செய்தே தீருவேன் என அடம்பிடிப்பவர்கள் மக்களை நிஜமாகவே கொள்ளையடிப்பவர்களை கவனித்துக்கொண்டால் இந்தியாவின் 99.9% மக்கள் ஏன் என்று கூட கேட்கமாட்டார்கள். அதை விட்டுவிட்டு அமைதியாக தங்கள் பணியை செய்பவர்களையெல்லாம் சீண்டிக்கொண்டிருப்பதும் ஒன்றும் அறியாத கடைநிலை ஊழியர்களை சுட்டுக்கொல்வதும் மன்னிக்கவேமுடியாத குற்றம்.  

========================================================================================
காற்றாலை மூலமாக கிடைத்த/கிடைக்கும் அளவிற்கு அதிகமான மின்சாரத்தை சேமித்து வைக்க போதிய வசதிகள் இல்லை என்ற மின்சார வாரிய அறிக்கையினை சமீபத்தில் படித்தவுடன் தமிழ்நாட்டில் வெய்யிலில் அலையாமலே புத்தி பேதலித்தவனை போன்ற நிலையை உணர்ந்தேன். எப்பேர்ப்பட்ட அபாரமான புத்திசாலிகள்…நினைத்தாலே புல்லரிக்கிறது. மின்சாரத்துறை அமைச்சர் எதுக்கும் அம்மா கண்களில் படாமல் இருந்துகொள்வது நலம் இல்லையென்றால் ஒரு நல்ல சுபயோக சுபதினத்தில்  அம்மா ராஜ்பவனுக்கு கடிதம் அனுப்பிவிடுவார்கள். அப்புறம் ஹை-வோல்டேஜை தொடாமலே ஷாக் அடித்தது போன்ற ஒரு அனுபவம் கிட்டிவிடும்.

ஒரு பக்கம் பற்றாக்குறை இன்னொரு பக்கம், அள்ளி அள்ளி கொடுத்தாலும் அதை ஒழுங்காக உபயோக படுத்திக் கொள்ளத் தெரியாத கூட்டம். தமிழ்நாட்டு மக்களை சனி பகவான் ஒரு கை பார்க்காமல் போகமாட்டர் போலத் தெரிகிறது. ஒட்டுமொத்த ஜனங்களும் திருநள்ளாறு போய் வணங்கி நின்றாலும் கருணையே காட்டமாட்டார் என நம்புவோமாக. மழை பெய்தால் அதை வீணாக கடலில் கலக்கவிட்டு விட்டு மறுநாளே தண்ணீர் பஞ்சம் என தலையில் கைவைத்துக் கொள்வது, உபரியாக மின்சாரத்தை உற்பத்தி செய்தால் Capacitor Capacity தீர்ந்து போச்சு என பொறுப்பில்லாமல் பேசுவது…என்னப்பா நடக்குது…கத்திரி வெயில் காய்ச்சி எடுக்குது அது போதாதா இன்னும் நீங்க வேற இப்படி தனியா போட்டு வறுத்தெடுக்கனுமா…...ஓட்டு போட்ட மக்களுக்கு இப்படியெல்லாம் வேட்டு வைக்கனுமா..கொஞ்சம் யோசிச்சு செய்யுங்கப்பு.

Pre-Planning, Proactive Measure போன்ற வார்த்தைகள் எல்லாம் கெட்ட வார்த்தைகள் இல்லை என்பதை நம்மூர் மின்சாரத்துறை ஊழியர்களிடமும் அவர்களின் அமைச்சரிடமும் எடுத்து புரியும்படியாக சொல்பவர்கள் அடுத்த ஜென்மத்தில் 24X7 மின்சாரவசதி கொண்ட ஏதாவது ஒரு மேற்கத்திய தேசத்தில் பிறப்பதற்கான சாத்தியங்கள் மிக மிக அதிகம். மனிதனாக பிறக்காவிட்டாலும் அவர்கள் வீட்டு பூனைக்குட்டியாகவோ அல்லது நாய்க்குட்டியாகவோ பிறப்பது சர்வ நிச்சயம்.

காற்றாலைகளில் இருந்து வரும் சிறிய அளவிலான மின்சாரத்தையே சேமித்து வைக்க வழிக்க தெரியாமல் திணறுபவர்கள் கூடங்குளம் மின்சாரம் முழுவதையும் வழங்கவேண்டும் என கேட்பது புரியாத லாஜிக்காக இருக்கிறது. அப்படியே முழுதாக வழங்கினாலும் இதே டயலாக்கை மீண்டும் சொல்லிவிடுவார்களோ என நினைத்தால் இப்போதே இருட்டிக்கொண்டு வருகிறது.


Sunday, April 15, 2012

கொம்பு முளைத்த மனிதர்கள்

இந்திய வெளியுறவுத்துறையைச் சேர்ந்தவர்கள் அவ்வப்போது நாங்களும் ரவுடிதான் என குரல்விட்டு தங்கள் இருப்பை வெளிப்படுத்திக் கொள்வதில் ஒருவித அர்ப்ப சுகம் காண்கிறார்கள் போலத் தெரிகிறது. சமீபத்தில் ஷாருக்கானை அமெரிக்காவில் தடுத்து வைத்த விவகாரத்தில் இவர்கள் அடித்த ஜிங்சங்க்கா சத்தத்தில் காது ஜவ்வு கிழிந்து தொங்கிவிடும் போல இருக்கிறது. அமெரிக்காவிற்கு பணி நிமித்தமாக வந்து செல்பவர்களை முடிந்தால் கேட்டுப்பாருங்கள், இந்த மாதிரியான ஏர்போர்ட் விசாரணைகள் வழக்கமான ஒன்றுதான் என்பது தெளிவாக தெரியும். எல்லாவற்றிற்கும் மேலாக அது அவர்கள் நாட்டின் நடைமுறை. மும்பை ஏர்போர்ட்டில் இவருக்கு சலாம் அடித்து வழிவிடுவது போலவே உலகத்தின் எல்லா இடத்திலும் இதே போல நடத்தவேண்டும் என எதிர்ப்பார்ப்பது கேவலமான மனோநிலை. இதற்காக வரிந்து கட்டிக்கொண்டு கத்திக்கொண்டிருக்கும் தூதரக அடிபொடிகளையும் வெளியுறவுத்துறையையும் நினைத்தால் நீ வாங்குற அஞ்சுக்கும் பத்துக்கும் இது உனக்கு தேவையா அப்படின்னு கேட்கத் தோன்றுகிறது.

நாட்டின் எல்லா குடிமகன்களுக்காகவும் குரல் கொடுப்பதாக இருந்தால் இதேபோன்ற சூழ்நிலையை தினந்தோறும் உலகின் பல்வேறு நாடுகளில் சந்திக்கும் சாமான்ய மனிதனுக்காகவும் வரிந்து கட்டிக்கொண்டு பேசவேண்டும். அதைவிட்டு விட்டு சும்மா அரிதாரம் பூசிவிட்டார் என்பதற்காக ஒரு சாதாரண நடிகருக்காக பெரிய பந்தா காட்டுவது சகிக்கவில்லை. அமெரிக்காவில் ஏதோ இவரை மட்டும்தான் இப்படி செய்கிறார்கள் என்பதைப்போன்ற தோற்றத்தை உருவாக்க முயல்வது அதை பயன்படுத்தி கொஞ்சம் விளம்பரம் தேடிக்கொள்ள முயல்வது போன்ற செயல்களை விட்டு விட்டு வேறு ஏதாவது உருப்படியாக செய்யலாம். இந்த டிராமா எல்லாம் தியேட்டரில் விசிலடிக்கும் குஞ்சுககளுக்கு ஒ.கே. ஆனால் படித்த விஷயம் தெரிந்த ஆட்கள் சீண்டவே மாட்டார்கள். ஜார்ஜ் பெர்னாண்டஸ், அப்துல்கலாம், கமல்ஹாசன் போன்றவர்களுக்கும் இதே போன்ற சோதனைகளும் விசாரணைகளும் நடந்துள்ளன. அப்போதெல்லாம் இதே போல தேசபக்தி இவர்களுக்கு பீச்சி அடிக்கவில்லை….அதற்கான காரணமும் இன்றுவரை பிடிபடவில்லை. அப்துல்கலாமை விட நாட்டிற்காக அதிகமாக தன்னை அர்பணித்துக்கொண்டவர் ஷாருக்கான் என்பது இப்போதுதான் என்னைப் போன்றவர்களுக்கு புரிய ஆரம்பித்திருக்கிறது.

ஒட்டு மொத்த நிலைமை இப்படி இருக்கும்போது ஒரு சாதாரண நடிகர் என்ன வித்தியாசமாக எதிர்பார்க்கிறார் எனத் தெரியவில்லை. இதெல்லாம் பிடிக்கவில்லை என்றால் அமைதியாக இருக்கும் இடத்தில் இருந்துவிடலாம் அதைவிட்டு விட்டு இவ்வளவு தூரம் வருவானேன், வந்த பின் அவர்கள் நடைமுறையை குறைசொல்வது நியாயமாக படவில்லை. சட்டத்தின் முன் அனைவரும் சமம் அது அதிபராகவே இருந்தாலும் சரி…இதெல்லாம் தெரிந்தும் தெரியாதுது போல பாவ்லா காட்டுவது சரியாக படவில்லை.

உள்ளூர் ஏர்போர்ட்களில் அதிகாலை வேளைகளில் குழந்தையும் குட்டியுமாக வந்திறங்கும் ஒரு சாமன்ய மனிதனை கடுமையாக நடத்தி வெறுப்பின் உச்சத்திற்கே அழைத்துச் செல்லும் நம்மூர் கஸ்டம்ஸ் ஆட்களைவிட அமெரிக்காவில் பிற தேசத்தவர்களை நடத்துவிதம் எவ்வளவோ மேல். குழந்தையுடன் நிற்கும் பெண்களையும், வயதானவர்களையும் முன்னுரிமை அளித்து வழிவிடுவதில் தொடங்கி, எந்த தேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் அவர்களை மரியாதையுடன் விளிப்பது வரை ஒரு சக மனிதனை எந்தவிதத்திலும் மரியாதை குறைவாக நடத்துவது என்பது அரிதான ஒன்று. இதே நடத்தையை மீனம்பாக்கத்திலும், பெங்களூர் சர்வதேச விமான நிலையத்திலும், மும்பை விமான நிலையத்திலும் எத்தனை அதிகாரிகள் கடைப்பிடிக்கிறார்கள் என்பதை அவர்களின் மனசாட்சிக்கே விட்டுவிடுவது நல்லது. துபாயிலும் கத்தாரிலும் இருந்து ஊருக்கு திரும்பும் கூலித் தொழிலாளர்களை தெரு நாயை விட கேவலமாக நடத்தும் ஆயிரம் பேரை நம்மூர் ஏர்போர்ட்களில் காட்ட முடியும். உள்ளூரில் ஆயிரம் ஓட்டையை வைத்துக்கொண்டு வெறுமனே பிரபலமானவர் என்ற ஒரு காரணத்திற்காக ஷாருக்கானுக்காக வரிந்து கட்டிக்கொண்டு குரல் கொடுப்பது ஏறக்குறைய -------------- சமம்.

தனது தனிப்பட்ட பயணமாக யேல் பல்கலைகழகத்தில் குத்து ஆட்டம் போட வந்தவரை எல்லோரையும் போல சோதனைக்கு உட்படுத்துவதை ஏதோ மகாத்மா காந்தியை ரயிலில் இருந்து தள்ளி விட்டதற்கு சமமாக பாவித்து குரலை உயர்த்துவது முட்டாள்தனமானது. அவர்கள் நாட்டிற்கு வரும்போது அவர்களின் நடைமுறைக்கு இணங்குவதில் உடன்பாடில்லை என்றால் வராமல் இருந்துவிட வேண்டும். மீறி வருவதாக இருந்தால் அந்த நாட்டு சட்டத்திற்கு உட்படுவதற்கு எந்த தயக்கத்தையும் காட்டக்கூடாது. அதைவிட்டு விட்டு ஒவ்வொரு முறை வரும்போதும் நிறுத்தி வைத்து சோதனை செய்கிறார்கள் என குறை கூறி அதில் சுய விளம்பரம் தேடிக்கொள்வது கேவலமான செயல். இதில் ஆச்சரியமான விஷயம் அமெரிக்காவில் உள்ள எந்த ஒரு Desi அமைப்பும் இதை பெரிய விஷயமாகவே கருதவில்லை. காரணம் அதிபராகவே இருந்தாலும் சில சட்ட நடைமுறைகள் எல்லோருக்கும் சமம் எல்லோரும் அதை மதித்தே ஆக வேண்டும். இது எல்லாம் தெரிந்தும் சும்மானாச்சும் தெரியாதது போல இந்திய தூதரக அடிபொடிகள் அலட்டிக்கொள்வது பார்க்க சகிக்கவில்லை.

இவர் புகழ்பெற்ற நடிகர் என்பதற்காக இவருக்கு சட்ட நடைமுறைகள் பொருந்தாது என சொல்ல வருகிறார்களா என தெரியவில்லை. இதே நடைமுறையைதான் இந்தியாவில் எல்லா ஏர்போர்ட்டிலும் இவருக்கு தருவார்களா எனத் தெரியவில்லை. வேலை விஷயமாக வெளிநாடு செல்பவர்களும், திரும்பி வருபவர்களும் தினசரி கடந்து செல்லும் ஒரு இயல்பான தேவையான நிகழ்வை ஏதோ மாபெரும் தவறு என்பது போல சித்தரிக்க முயல்வது அபத்தமாக இருக்கிறது. ஷாருக்கானைப் போலவே எல்லா சாப்ட்வேர் என்ஜினியர்களும் ஒழுங்காக தங்கள் வரியை அரசுக்கு செலுத்துகிறார்கள், இன்னும் சொல்லப்போனால் அவர்களிடம் நடிகர்களிடம் இருப்பது போல கறுப்பு பணம் போன்ற வஸ்துக்கள் எல்லாம் குறைவு அல்லது இல்லவே இல்லை. ஷாருக்கானுக்கு கொடுக்கும் அதே சலுகையை/ மரியாதையை முதலில் இந்திய விமான நிலையங்களில் ஒழுங்காக வரி செலுத்தும் எல்லோருக்கும் கொடுப்பார்களா எனத் தெரியவில்லை. நடிப்பு அவரது தொழில் மற்றபடி இந்தியாவின் சராசரி அரசு ஊழியருக்கும் அவருக்கும் எந்த ஒரு பெரிய வித்தியாசமும் இல்லை. சும்மா மும்பையில் உட்கார்ந்து கொண்டு உலகமே தங்கள் காலடியில் போன்ற கனவில் மிதப்பதால் வரும் வினை இதெல்லாம். எல்லாவற்றிற்கும் மேலாக இந்த கூத்தெல்லாம் முடிந்தபின் யேல் பல்கலைக்கழகத்தில் அவர் விட்ட உதாரை கேட்டபோது அடுத்த முறை வரும்போது இவரை கூடுதலாக மேலும் பல மணிநேரம் நிற்க வைத்தாலும் தப்பே இல்லை எனத் தோன்றுகிறது. தவளை தன் வாயால் கெடும் என்பதற்கு சரியான உதாரணம். எஸ்.எம்.கிருஷ்ணாக்களும் நிருபமா ராவ்களும் தங்கள் போலி தேச பக்தியை ஒரு நடிகருக்காக வரிந்து கட்டிக்கொண்டு காட்டுவதை நிறுத்தாதவரை இம்மாதிரியான நிகழ்வுகளை இந்திய மீடியாக்களும் சாதாரணமாக கடந்து போகப் போவதில்லை.

கொசுறு: முடிந்தால் மும்பைக்குள் நுழைந்து பார் என ஒரு மாநில முதல்வரை நோக்கி சவால் விடும் ராஜ் தாக்கரே போன்ற கொசுக்களை கண்டிப்பதற்கு எந்த மத்திய அமைச்சருக்காவது துணிவு இருக்கிறதா என இதுவரை தெரியவில்லை. எஸ்.எம்.கிருஷ்ணா, ப.சி. போன்றவர்கள் எல்லாம் எங்கிருக்கிறார்கள் என்றேத் தெரியவில்லை. ஷாருக்கானுக்காக வரிந்து கட்டிக்கொண்டு மூச்சுவிடாமல் கதறிக்கொண்டிருக்கும் மீடியா ஆட்களை நோக்கி இப்படி கேட்க வேண்டும் போலத் தோன்றுகிறது…Do you guys have balls to stand up and speak the truth?

Friday, March 23, 2012

மின்சார கனவு

இந்திய அரசியல்வாதிகள் இப்போதெல்லாம் அறிவியல் பேசுகிறார்கள். சந்தோஷமான விஷயம். இன்னும் எத்தனை நாளைக்குதான் படிக்காத மேதை என சொல்லிக்கொண்டே இருப்பது என யோசித்திருப்பார்கள் போலத் தெரிகிறது. மத்திய அமைச்சர் திரு.நாராயணசாமி சில நாட்களுக்கு முன்பாக ஒரு கருத்தை சொல்லியிருந்தார். விமானம் மோதினால் கூட கூடங்குளம் அணுமின்நிலையத்துக்கு எந்த ஆபத்தும் நிகழாது என்பதுதான் அது. விமானம் என பொதுவில் சொல்லிவிட்டார், நல்ல வேளையாக இன்னும் ஒரு படி மேலே போய் சிங்கிள் என்ஜின் செஸ்னா-172 அல்லது போயிங்-747 என எதையாவது சொல்லியிருந்தால் கேட்ட மக்களுக்கு காது குளிர்ந்து போயிருக்கும். அட நம்ம அமைச்சர் இவ்வளவு பெரிய தகவல் களஞ்சியமா என மெய் மறந்து போயிருப்பார்கள். பொய் சொல்பவர்களை விட தவறான தகவல்களை அள்ளித் தெளிப்பவர்கள் ஆபத்தானவர்கள். அறிவியலை அரசியலுக்கு பயன்படுத்துவது ஏறக்குறைய மார்கரீட்டாவில் காபியை கலப்பதற்கு சமம். உள்ளே போனவுடனே வெளியே வந்துவிடும், போன வழியிலேயே.

வைகைப்புயல் வடிவேல் ஒரு படத்தில் தன்னோட அஸிஸ்டெண்ட்டிடம் சொல்வார். “நான் எடுத்துக் குடுக்குறேன் அடிச்சு விட்றா ஆளக்கான்னு”. நம்ம மத்திய அமைச்சரின் சமீபத்திய அறிக்கைகளைப் பார்த்தால் அப்படிதான் அடிச்சு விடுகிறாரோ என யோசிக்கவேண்டி இருக்கிறது. பார்லிமெண்ட் எலக்ஷன் சீக்கிரமா வரும்போல தெரியுது கொஞ்சம் பார்த்துபேசுவது நல்லது. மக்கள் ஓட்ட மாத்திப் போட்டுட்டா அப்புறம் நாம என்னதான் பேசினாலும் ஒரு பயலும் பத்திரிகையில அதை பப்ளிஷ் பண்ணமாட்டாங்க. .

அரசியல்வாதிகள் தான் தங்கள் அறிவு திறனை இப்படி போட்டு உடைக்கிறாங்கன்னு பார்த்தா, தமிழ்நாட்டுல இருக்குற இன்னொரு கூட்டம் கூடங்குளம் மின்நிலையத்துல ஆப்ரேஷன் தொடங்கினா அடுத்த நாளே தமிழ்நாட்டோட மின் தட்டுப்பாடு குறைஞ்சுடும்ன்னு கூச்சமே இல்லாம ஒரு பொய்யை சொல்லிக்கிட்டு இருக்கு. இதை பொய்யுன்னு கூட சொல்ல முடியாது, முட்டாள்தனம்னு வேணும்னா சொல்லலாம். அப்பா சாமிகளா நெய்வேலி, கல்பாக்கம், ராமகுண்டம், தாராப்பூர் என இப்படி எந்த இடத்துல மின்சாரத்தை உற்பத்தி பண்ணாலும் எல்லா அவுட்புட்டும் நேரா சென்ட்ரல் கிரிட்ல (central grid) போய் சங்கமம் ஆயிடும். அதுக்கப்புறம் அதை ஸ்டோர் பண்ணி வச்சுகிட்டு ஒவ்வொரு மாநிலத்துக்கும் கொஞ்சம் கொஞ்சமா பங்கு பிரிச்சு குடுப்பாங்க நம்ம டெல்லி கில்லிகள். இது கூடங்குளத்துக்கும் பொருந்தும்.

நிலைமை இப்படி இருக்கும்போது ஏதோ கூடங்குளத்துல இருந்து 11KV லைனை நேரா வூட்டு சந்துல இருக்குற 440/230V ட்ரான்ஸ்பார்மருக்கு (“மின் மாற்றி” ன்னு அழகான தமிழ்ல சொல்லலாம்) அனுப்பிடுவாங்க அங்க இருந்து நம்ம வூட்டுக்கு 3-பேஸ் லைன் போட்டு 24X7 கரண்ட் எடுத்துக்கலாம்னுற ரேஞ்சுல பேசிக்கிட்டு இருக்காதீங்க. வர வர ஊர்ல எல்லாருமே EB office JE மாதிரி பேச ஆரம்பிச்சுடாங்கப்பா கூடங்குளத்துல இருக்குற இரண்டு ரியாக்டரும் முழுசா உற்பத்தி தொடங்கி, அதை அப்படியே முழுசா தமிழ்நாட்டுக்கே திருப்பிவிட்டாலும் அந்த அவுட்புட் தமிழ்நாட்டோட தேவையில எத்தனை சதவீதத்தை ஈடுகட்டும்னு யாரும் ஒழுங்கா எந்த டேட்டாவையும் இதுவரைக்கும் சொல்லல. ஒவ்வொரு வருஷமும் அதிகரிச்சிக்கிட்டே போகும் டிமாண்ட்டுக்கு இன்னும் பத்து உலைகளை கட்டுனா கூட சமாளிக்கமுடியுமான்னு தெரியல.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, அணு மின் உலை வேணுமா வேண்டாமா அப்படிங்கற விஷயத்தை இப்ப பேசுறதுக்கு பதிலா இந்த ப்ராஜெக்ட் ஆரம்பிக்கும்போது பேசியிருந்தா நியாயமா இருந்திருக்கும். பத்து வருஷத்துக்கு மேலா வேலை நடந்து ப்ரடெக்ஷன் ஸ்டார்ட் பண்ணும்போது பிரச்சனையை கிளப்புறது நியாயமா படலை. ஆயிரம் ஆயிரம் கோடிகளை கொட்டித் தொடங்கும் ஒவ்வொரு ப்ராஜெக்டையும் ஏதாவது காரணத்திற்காக நிறுத்துவதால் இழப்பு நம்முடைய மக்களுக்குத்தான். அதே சமயம் இந்த உலையால் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அதை சமாளிக்ககூடிய அளவிற்கு நம்மிடம் Infrastructure வசதி இருக்கான்னு கண்டிப்பா தெரியலை. அப்படி இல்லைன்னா அதை எப்படி சரி பண்ணலாம் என யோசிப்பதுதான் இப்போதைக்கு நல்ல வழியாக இருக்கும்.
அமைச்சர்கள்/அரசியல்வாதிகள் சொல்வதை எல்லாம் கேட்டா இங்க பாதி பேருக்கு இந்த விஷயத்தோட அடிப்படை அறிவுகூட இல்லைங்கறது தெளிவாயிடும்.

இந்தியாவைவிட பலமடங்கு தகுதியும் திறமையும் உள்ள ஜப்பான் ஆளுங்களே (இதை சொன்னா மக்களுக்கு கோபம் வரும்) இந்த விஷயத்துல சமீபத்துல ஆடிப்போயிட்டாங்க ஸோ கண்டிப்பா நம்ம ஆளுங்க எந்த அளவுக்கு Prepared-ஆ இருப்பாங்கன்னு தெரிஞ்சுக்கலாம். போபால் விஷ வாயுவை Contain பண்ணவே திணறிட்ட நாம இந்த விஷயத்துல கொஞ்சம் Proactive ஆக இருந்துவிடுவது நல்லது. நாளைக்கு ஏதாவது பிரச்சனை வந்தா (எதுவும் வராது என நம்புவோம்) எல்லாரும் யாரையாவது கை காட்டிட்டு ஒதுங்கி போய்விடுவார்கள். பல கோடிகளை கொட்டித் தொடங்கிய சேது சமுத்திர திட்டத்தை தூக்கி குப்பையில் போட்டுவிட்டார்கள் அதற்கு சொல்லப்பட்ட சில்லியான காரணத்தை விட இந்த திட்டத்திற்கு எதிரான காரணங்கள் atleast technically valid, but it’s too late now. இனிமே இந்த திட்டத்தை எப்படி பாதுகாப்பா நிறைவேற்றலாம்னு யோசிக்குறதுதான் புத்திசாலித்தனமா இருக்கும். ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அசால்ட்டாக நின்று கொண்டிருக்கும் கோயில்களையும், நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு சிறு கசிவும் இல்லாத அணைகளையும், நினைவுச்சின்னங்களையும் கட்டியெழுப்பிய ஒரு நாடு இன்றைக்கு ஒரு சாதாரண மேம்பாலத்தைக்கூட ஐந்து வருடம் நிலைத்து நிற்கும்படி கட்டமுடியாமல் ஊழலில் திணறிக்கொண்டிருப்பது மன்னிக்கமுடியாத குற்றம். இந்த அளவுகோலை மனதில் வைத்து மக்கள் பயம் கொண்டால் இதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை.

இந்த பிரச்சனையெல்லாம் தீரணும்னா மக்களும் அரசாங்கமும் கொஞ்சம் அமைதியா யோசிச்சாதான் உண்டு, மத்த விஷயத்தை (அரசியல்/மதம்) கொஞ்சம் ஓரமா வச்சிட்டு இந்த அளவுக்கு மின்சார தட்டுப்பாட்டுக்கு என்ன காரணம், Alternate Source என்ன, Future requirement/growth expectation, எப்படி இருக்கும் போன்ற சமாச்சராங்களை ஒழுங்கா மனசாட்சியோட ஆராய்ந்து ஒரு நல்ல திட்டத்தை பாதுகாப்பா மக்கள் ஆதரவோடு நிறைவேற்றலாம். அட்லீஸ்ட் அடுத்த ஜெனரேஷன் பவர்கட் இல்லாத சொஸைட்டில வாழ வசதி பண்ணிட்டு போகலாம். நம்ம ஊர்ல Supply-Demand ratio gap அதிகமாயிடுச்சு, இனிமே நிலக்கரிய எரிச்சு, டேம் கட்டி, காற்றாலைய வச்சு எல்லாம் மின்சாரத்த தயாரிச்சுகிட்டு இருக்க முடியாது…அப்படியே தயாரிச்சாலும் அத வச்சி மக்களோட தேவையெல்லாம் முழுசா நிறைவேற்ற முடியாது. இதுதான் இன்றைய நிலவரம்.

ஊர்ல அவனவன் நாலு டி.வி, ரெண்டு ப்ரிட்ஜ், வீடு முழுக்க ஏ.சி-ன்னு ஏகத்துக்கும் முன்னேறிட்டாங்க. இதுக்கெல்லாம் மின்சாரம் வேணும்னா கொஞ்சம் Advanced Technology பயன்படுத்துனா தான் முடியும். போதாத குறைக்கு ஏகப்பட்ட தொழிற்சாலைகள் வேற முளைச்சிகிட்டே இருக்கு..மின்சாரம் இல்லாம அங்க வேலையே நடக்காது…நம்மூர் ஆளுங்களுக்கு தொழிற்சாலை வேணும், அங்க வேலையும் சம்பளமும் வேணும், ஏ.சி.வேணும், ஏ.சி.வச்ச கார் வேணும் ஆனா அனுமின்நிலையம் மட்டும் வேண்டாம்னு பொத்தாம் பொதுவா சொல்றது சரியா படலை. எந்த தொழில்நுட்பத்த வச்சி மின்சாரம் தாயரிச்சாலும் அதுல ரிஸ்க் இருக்கத்தான் செய்யும்…..Risk Mitigate பண்ற வழிய யோசிச்சா தான் முன்னேற முடியும்…இல்லைன்னா கஷ்டம்தான். அரசியல்வாதிகளையும் மக்கள் பிரதிநிதியாக தங்களை முன்நிறுத்திக் கொள்பவர்களையும் கொஞ்சம் ஓரமாக அமரச் சொல்லிவிட்டு இம்மாதிரியான திட்டங்களை சரியான தொழில்நுட்ப ஆட்களிடம் முழுமையாக ஒப்படைத்து அவர்களுக்கு தேவையான சப்போர்ட் மட்டும் கொடுத்தால் போதும். மற்ற விஷயங்கள் தானாகவே சரி செய்யப்பட்டுவிடும்.

இன்னொரு பக்கம் மின்சாரத்த சிக்கனமா பயன்படுத்துறதுக்கு மக்கள் பழகிக்கனும். (குடிக்கிற தண்ணியையே சிக்கனமா பயன்படுத்தாத பொதுமக்கள் மின்சாரத்தை எப்படி சிக்கனமா பயன்படுத்துவாங்க) இந்த விஷயத்துல அரசாங்கம் கொஞ்சம் கண்டிப்பாவே நடந்துக்கனும்..சும்மா ஓட்டுக்கு பயந்துகிட்டு எந்த ஆக்ஷனும் எடுக்காம இருந்தா அப்புறம் எல்லாரும் லாந்தர் விளக்குல தான் ராப்பொழுத கழிக்கவேண்டி வரும். இப்போதைக்கு Workaround கீழே உள்ள விஷயத்தை ட்ரை பண்ணலாம்.

--இலவச மின்சாரத்த நிறுத்திட்டு, விவசாயிகளுக்கு சலுகை விலையில கூடுதலா மின்சாரம் வழங்கலாம். இலவசமா கொடுத்து மின்சாரத்தோட அவசியத்தையே கேவலப்படுத்திட்டாங்க நம்மூர் அரசியல்வாதிங்க. சும்மா கிடைக்குது என்பதற்காக மின்சாரத்த வச்சி மக்களும் அளவுக்கு மீறி விளையாடிட்டாங்க. இப்ப வந்து குத்துது குடையுதுன்னு ஒப்பாரி வைக்கறதுல ஒரு லாபமும் இல்ல.

--வருசத்துல பத்து மாசம் சூரியன் சுட்டெரிக்குற நம்மூர்ல இன்னமும் சோலர் சிஸ்டத்த நிறைய பேர் பயன்படுத்தாம இருக்குறது மன்னிக்க முடியாத குற்றம். இனிஷியல் காஸ்ட் கொஞ்சம் அதிகம். ஆனால் நிறைய பேர் பயன்படுத்த ஆரம்பிச்சா விலை கண்டிப்பா குறையும். நிலத்தடி நீர் சேகரிப்பை கட்டாயம் ஆக்குன மாதிரி இதையும் கொஞ்சம் aggressive ஆக செயல்படுத்தினால் நல்லது. நாலு செல்போன் வச்சிக்கிட்டு பந்தா காட்டுற நம்ம ஆளுகளுக்கு அந்த பணத்த இந்த மாதிரி விஷயத்துல இன்வெஸ்ட் பண்றதுக்கு ஒன்னும் பிரச்சனை இருக்காது.

--Traditional lights க்கு பதிலா CFL மாதிரி engery saver பொருள அதிகமா பயன்படுத்தலாம். பாத்ரூமுக்கு 100W பல்ப எரிய விடுற மக்கள் இன்னமும் நம்ம ஊர்ல இருக்காங்க. கேட்டா அதுதான் பளிச்சுன்னு எரியுதுன்னு விளக்கம் வேற குடுக்குறாங்க. பாத்ரூம்ல எதுக்கு பளிச்சின்னு வெளிச்சம் வேணும்னு சரியா புரியல. இதுக்கு வசதி மட்டும் காரணம் இல்ல போதிய அளவு விழிப்புணர்வு இல்லாததும் ஒரு காரணம்.

--அப்புறம் இந்த Street Light சமாச்சாரம். இந்த விஷயத்துல நாம ரொம்ப மோசம். ஒன்னு அந்த பல்பு சுத்தமா எரியாது, இல்லைன்னா சும்மா கண்ணடிச்சிக்கிட்டே இருக்கும், அதுவும் இல்லைன்னா 24*7 எரிஞ்சுகிட்டே இருக்கும். இருட்டுனத்துக்கு அப்புறம் எரிய ஆரம்பிச்சு, பொழுதுவிடிஞ்ச உடனே அணைச்சாலே போதும் நிறைய எனர்ஜி சேமிக்கலாம். இந்த Street Light எல்லாத்துக்கும் சின்னதா ஒரு சோலார் சிஸ்டத்தை வச்சி அதுல இருந்தே மேனேஜ் பண்ண முடியும்.

--High-Engery Cosumption தேவைப்படுற தொழில்களை கொஞ்சம் Innovative-ஆ natural light use பண்ணுறதுக்கு ஐடியா பண்ணலாம்.

இந்த மாதிரி எதையாவது கொஞ்சம் பண்ணாத்தான் நாடு உருப்படும். இல்லைன்னா கொஞ்ச நாள்ல எல்லோரும் ஆல் இன் ஆல் அழகுராஜாவோட பெட்ரோமாக்ஸ் லைட் கடை முன்னாடி க்யூல நின்னு லைட் வாங்க வேண்டிய நிலைக்கு போயிடுவோம்.