Saturday, January 19, 2013

என்ன தலைப்பிடுவது இதற்கு...



இந்தியா கிரிக்கெட்டில் வெற்றி பெற போராடிக்கொண்டிருக்கிறது, இரண்டு மேட்ச் ஜெயிக்கவில்லை என்றால் உடனடியாக “கேப்டனை மாற்று” போன்ற கோமாளித்தனமான கோஷங்கள் மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது, இந்திய-பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் குவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன, எப்போதெல்லாம் பெட்டி காலியாகிறதோ அப்போதெல்லாம் அப்பாவி மக்களை உசுப்பிவிட்டு தெலுங்கானாவை தாறுமாறுக்கும் கே..சீ.ஆர் போன்றவர்கள் திரும்பவும் கொடிபிடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள், பெட்ரோல் டீசல் போன்றவற்றின் விலையை இனி மாதந்தோறும் உயர்த்தப்போவதாக அறிவித்து மக்களை அச்சத்திலேயே வைத்திருப்பது என அரசாங்கம் முடிவு செய்திருக்கிறது, டெல்லி குளிருக்காக சரத்குமார் கம்பளி வாங்கி கொடுத்த நிகழ்ச்சி முதல் பக்கத்தில் வந்துக்கொண்டிருக்கிறது, தன்னுடைய பணத்தை செலவு செய்து படம் பார்க்கப் போகும் ரசிகனை இப்படித்தான் நீ இந்த படத்தை பார்க்கவேண்டும் என மறைமுகமாக (சட்டத்திற்குட்பட்டு) கமலும் தியேட்டர் முதலாளிகளும் பல நாளாய் படுத்திக் கொண்டிருக்கிறார்கள்…..கடந்த இரண்டு வாரங்களாக மேலே சொன்ன விஷயங்கள்தான் நம்மூர் மீடியாக்களை வாழ வைத்துக்கொண்டிருக்கிறது. அடுத்தவாரம் ஒபாமா பதவி ஏற்கும் நிகழ்ச்சியை வைத்து ஒருசில நாட்கள் தள்ளிவிடுவார்கள் என்பதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் நீங்கள் ஒரு நல்ல மனநல மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நலம். இரண்டு வாரங்களுக்கு மேல் ஓடிவிட்டது, டெல்லியில் நடந்த கொடூர சம்பவம் முடிந்து. மெழுவர்த்தியை ஏந்தியவர்களும், வஜ்ரா வண்டியின் முன் வீரத் தோள்களை காட்டியவர்களும் மெல்ல இயல்பு வாழ்க்கைக்குள் கரைந்து காணாமல் போய்க்கொண்டிருக்கிறார்கள். இறந்து விட்ட பெண்ணை வைத்து முடிந்தவரை தங்கள் பிழைப்பை ஒட்டிவிட்ட மீடியாக்களும், பத்திரிகைகளும், சாமியார்களும், அரசியல்வாதிகளும் இனி அடுத்து வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் மக்களை திசைதிருப்புவது எப்படி என அநேகமாக இந்நேரம் யோசிக்க ஆரம்பித்திருப்பார்கள், இப்படி ஒரு கொடூரம் எதிர்காலத்தில் ஒருவேளைத் தப்பி தவறி நடந்தால் மீண்டும் அந்தப் பெண்ணை நினைவு கூர்ந்து அவர் பற்றிய செய்தியை முதல் பக்கத்தில் கொண்டுவருவார்கள் அல்லது காலந் தாழ்ந்து வழங்கபோகும் நீதியின் போது மீண்டும் அவரை மக்களுக்கு அறிமுகப்படுத்துவார்கள்.

அதுவரை GOOD BYE & RIP MY BRAVE LADY

No comments: