Friday, December 23, 2011

ஆயிரத்தில் ஒருத்தி – Irom Sharmila

Flash Mob….இதுதான் இப்ப இந்தியாவில் ஹாட் டாபிக். அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் பார்த்து காப்பி அடிச்ச சரக்குதான் என்றாலும் மீடியாக்களின் ஆசி இருப்பதாலும், நம்மூர் மக்களுக்கு இது கொஞ்சம் புதுசு என்பதாலும் படம் கொஞ்சம் ஓடுது. சீசனுக்கு சீசன் மாறும் சீதோஷ்ணத்தைப் போல ஏதாவது ஒரு விஷயம் மூன்று மாதத்திற்கு ஒரு முறை நம்மூர் மீடியாக்களுக்கு கிடைத்துவிடுகிறது. எதுவுமே கிடைக்காத போது அன்னா ஹசாரே, ஐஸ்வர்யா ராய், கிரிக்கெட் போன்ற சமாச்சாரங்கள் அந்த இடத்தை நிரப்பி கணக்கை tally செய்து விடுகின்றன.

சராசரி இந்தியனின் மூளை ஒரு மாதிரி Hypnotize செய்யப்பட்டு நையா பைசாவிற்கு உபயோகமில்லாத செய்தியை மட்டுமே அவனோ அல்லது அவளோ உள்வாங்கும் அளவிற்கு சுருக்கப்பட்டுவிட்டது. ஏதாவது ஒரு நல்ல விஷயம் உண்மையாகவே நடந்துவிட்டதை/நடந்து கொண்டிருப்பதை நண்பர்களிடம் பகிரும்போது அவர்கள் நம்மை ஏதோ புத்தி பேதலித்தவனைப் பார்ப்பது போல சந்தேகத்துடன் பார்ப்பது சில சமயங்களில் கொஞ்சம் திகைப்பைக் கொடுக்கிறது.

இந்த மனநிலையின் உச்சகட்டம்தான், இப்போதெல்லாம் யாரவது இரண்டு நாளுக்கு மேல் உண்ணாவிரதம் இருந்தால் கூட அதை நம்புவதற்கு மனம் மறுக்கிறது. அன்னா ஹசாரே போன்றவர்களின் இரண்டு நாள் உண்ணாவிரதத்தை மிகப்பெரிய நிகழ்வாக சித்தரிக்கும் மீடியாக்களுக்கு பத்து வருடங்களுக்கு மேலாக எந்த ஒரு திட ஆகாரத்தையும் எடுத்துக்கொள்ளாமல், குடிநீரை முற்றிலுமாக தவிர்த்துவிட்டு தனது மக்களுக்காக போராடிக் கொண்டிருக்கும் ஐரோம் ஷர்மிளா போன்றவர்கள் முக்கியமற்றவர்களாக போனதில் எந்த ஆச்சரியமும் இல்லை.


ஒருவேளை மீடியாக்கள் ஐரோம் ஷர்மிளாவைப் பற்றி தினமும் ஏதாவது ஒரு செய்தியை மக்களிடம் கொண்டு சென்றால், என்னைப் போலவே மீடியாக்காரர்களையும் நம்மூர் மக்கள் ஒருவித சந்தேகத்துடன் பார்த்து விடுவார்களோ என பயமாய் இருக்கிறது. சசிகலாவை ஜெ. ஏன் நீக்கினார், சில்க் ஸ்மிதாவின் சுண்டி இழுக்கும் கண்கள் வித்யா பாலனிடம் இல்லாதது மிகப் பெரிய மைனஸ் பாயிண்ட் போன்ற அதிமுக்கிய செய்திகளை அலசி ஆராயும் நம்மூர் நிரூபர்கள் மணிப்பூர் பக்கம் ஒரு நடை போய் வந்தால் மக்களுக்கு கொஞ்சம் உருப்படியான செய்தியை கொடுக்கலாம். சர்க்குலேஷனுக்கு அந்த சர்வேசனே கியாரண்டி கொடுப்பார்.

தீயாக உள்ளே தெளிவுற நோக்கினால் மாயாது பின்னை உடம்பு…வழக்கத்திற்கு மாறான செய்திகளை காணும் போதெல்லாம் மூளையின் செல்களில் எங்கேயோ ஒரு மூலையில் உறைந்துக்கிடக்கும் இம்மாதிரியான விவகாரமான வரிகள் மேலெழும்பி விடுகின்றன. ஐரோம் ஷர்மிளாவைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக படிக்க ஆரம்பித்ததில் பல விஷயங்கள் ஆச்சரியத்தையும், ஆதங்கத்தையும், அயர்ச்சியையும் கொடுத்துக் கொண்டேயிருந்தன. பத்து வருடங்களுக்கு மேலாக போராடிய பின்னரும் இன்னமும் உடல் உறுதியுடனும் மன உறுதியுடனும் இருக்கிறார். இவரைப் போன்றவர்களை மக்களிடம் கொண்டு செல்லாமல் இருக்கும் நம்மூர் மீடியாக்களை இனி முடிந்த வரை தவிர்த்துவிடுவது என தீர்க்கமாக முடிவெடுத்துவிட்டேன்.

ஒரு சராசரி இந்தியப் பெண் தன் இருபத்தெட்டு வயதில் எதையெல்லாம் நினைத்துகூட பார்த்திருக்க மாட்டாளோ அதையெல்லாம் இவர் செய்திருப்பது, தொடர்ந்து செய்து கொண்டிருப்பது மனதை தொடுகிறது. Why dis kolaveri-க்காக You Tube-ஐ துழாவிக் கொண்டிருப்பவர்கள், அப்படியே கொஞ்சம் விக்கிபீடியா பக்கமாக சென்று ஐரோம் ஷர்மிளாவைப் பற்றியும் படித்துவிடுவது நலம். இணணயத்தில் நிறைய பேர் நிறைவாகவே எழுதி இருக்கிறார்கள் இவரைப்பற்றி.

நம்மூர் தினத்தந்தியில் சிந்துபாத் கதையைப்போல இவரைப் பற்றியும் கொஞ்சம் கொஞ்சமாக தினமும் ஏதாவது ஒரு செய்தியைப் போட்டால் சி.பா. ஆதித்தனாரின் ஆவி அந்த நிறுவனத்தை நடத்துபவர்களை ஆசிர்வதிக்கும். புஃல் ப்ளேட் சிக்கன் பிரியாணியை அடித்துவிட்டு உண்ணாவிரதம் இருக்கும் நபர்களை கட்டம் கட்டமாக கட்டி செய்தியை போடும் நல்ல உள்ளங்கள் இம்மாதிரியான நபர்களைப் பற்றிய செய்திகளை எங்கேயாவது இருந்து உருவி போட்டாலும் பாராட்டலாம்.

லோக்கல் குமுதம், குங்குமம் போன்றவர்கள் நடுப்பக்கத்தில் எந்த நடிகையை போடுவது என்ற மனக்குழப்பத்தை கொஞ்ச நாளைக்கு தவிர்த்துவிட்டு இம்மாதிரியான உருப்படியான ஆட்களின் செய்தியை வெளியிட்டால் சமீபத்தில் இடம் பெயர்ந்த சனி பகவானின் ஆசி இவர்களுக்கு என்றைக்குமே கிடைத்துக் கொண்டிருக்கும்.

No comments: