Thursday, February 24, 2011

கட்டுமரங்களும் கலஷ்நிஃக்வோகளும்

கார்கில் போர் உச்சமடைந்திருந்த நேரம், மத்தியிலிருந்த வாஜ்பாய் தலைமையிலான அரசாங்கம் பொதுமக்களிடம் போர் நிவாரண நிதியை நன்கொடையாக வழங்குமாறு கோரிக்கைவிட, இந்தியாவின் மிகவும் முன்னேறிய மாநிலங்கள் (வர்த்தக தலைநகர் மும்பை அமைந்திருக்கும் மகாராஷ்டிரா உள்பட) கொஞ்சமாக கிள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்க, இந்தியாவின் தென்கோடியில் இருந்து கை நிறைய அள்ளிக் கொடுத்த மாநிலம்…தமிழ்நாடு. இன்றைய தேதிக்கு மற்ற எந்த மாநிலமும் தமிழகம் திரட்டிக் கொடுத்த நிதிக்கு அருகில் கூட வரவில்லை என்பது நிதர்சனம்.

எல்லையில் தீரத்துடன் போராடிக் கொண்டே தோட்டாக்களை தங்கள் மார்பில் வாங்கியபடி சரிந்துக் கொண்டிருந்த ஒவ்வொரு ஜவானுக்காகவும், பள்ளிக்குழந்தைகள் முதல் சிறையில் உள்ள தண்டனைக் கைதிகள் வரை அனைவரும் தங்களால் இயன்ற நிதியை திரட்டி அனுப்பி வைத்தார்கள். போரில் வீரமரணமடைந்துக் கொண்டிருந்த ஜவான்களில் பீகாரியையும், பெங்காலியையும், தமிழனையும், பஞ்சாபியையும் பிரித்துப் பார்த்து பேதமை காட்டும் அளவிற்கு தமிழகத்தில் உள்ள நடுத்தர வர்க்கத்தினர் (இதில் எல்லா சாதியினரும் அடக்கம்) யாருக்கும் அன்று புத்தி பேதலித்திருக்கவில்லை. இன்றும் இல்லை. என்றும் இருக்கப் போவதும் இல்லை. மண்ணின் மைந்தன் மேஜர் சரவணன் வீழ்ந்த போது கலங்கியதில் கொஞ்சமும் குறைவில்லாத துயரம் ரைஃபிள் மேன் சஞ்சய் குமார் வீழ்ந்த போதும் வெளிப்பட்டது. இதுதான் தமிழக நடுத்தர குடும்பங்களின் பலம், பலவீனம் எல்லாமே. பதவியையும், மொழியையும், மாநிலத்தையும் வைத்து பிரித்து பார்க்கும் அளவிற்கு தமிழகத்தின் சராசரி குடும்பங்கள் இன்னமும் தங்கள் இதயத்தை இழந்துவிடவில்லை.

மீனவர்களின் விஷயத்தில் நடந்த/நடந்துக்கொண்டிருக்கும் நிகழ்வுகள் அந்த நிலையை சிதைத்துவிடுமோ என்கிற நியாயமான அச்சம் சமீப காலங்களில் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது என்பது கசப்பான உண்மை. தஸ்லிமாவின் சம உரிமைக்காகவும், தலாய் லாமாவின் போரட்டத்திற்காகவும், ஆங்-சான்-சூ-யின் விடுதலைக்காகவும் தன்னுடைய குரலை உயர்த்தும், ஆதங்கத்தை வெளிப்படுத்தும் என் தேசம் தன் சொந்த குடிமகன்களின் விஷயத்தில் பாரபட்சம் காட்டுவதை எந்த நிலையிலும் நியாயப்படுத்த முடியவில்லை. மீனவர்கள் தவறுதலாக எல்லைத் தாண்டிச் சென்றிருந்தாலும் கொல்லுமளவிற்கு கொடிய குற்றம் இல்லை அது. இதை நன்றாக உணர்ந்திருந்தும் உடனடியான தெளிவான நடவடிக்கையை மேற்கொள்ளாமல் பூசி மொழுகுவது ஜனநாயக அரசியலாகத் தெரியவில்லை. தெரிந்தே எல்லை தாண்டி வந்து விக்டோரியா டெர்மினஸிலும், தாஜ் ஹோட்டலிலும் புகுந்து விளையாடியவர்களுக்கு உணவு/உடை கொடுத்து அவர்களுக்காக வாதாட அரசு சார்பில் வக்கீலையும் ஏற்பாடு செய்து ஜனநாயகத்தை நிலைநாட்டும் அரசாங்கம், நிராயுதபாணியாக தவறிச் சென்றுவிடும் தன் சொந்த குடிமகன்கள் கொல்லப்படுவதை கண்டிக்காமல் இருப்பது ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள ஒவ்வொருவரையும் செருப்பால் அடிப்பதற்கு சமமானது. Sometimes It’s better to live under strong Dictatorship than weak Democracy.

இன்னொருபுறம் பாதிக்கப்பட்ட மீனவர்கள் வசிக்கும் தொகுதிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்கள் இதுவரை இந்தப் பிரச்சனைக்காக என்ன செய்திருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. அறிக்கைவிடுவதனாலோ, தலைவரையோ (அ) அம்மாவையோ கூட்டி வந்து பாதிக்கப்பட்டவர்களின் கைகளில் சில லகரங்களை திணித்துவிட்டு சென்று விடுவதாலோ பிரச்சனை தீரப்போவதில்லை. ஓட்டு போடுவதற்கு மட்டும்தான் மக்கள் தேவை பிறகு அவர்கள் தேவை இல்லை என்ற போக்கு இருக்கும்வரை இவர்களிடம் இருந்து ஆக்கப்பூர்வமாக எதையாவது எதிர்பார்த்து நின்றால் உலகின் மிக மோசமான முட்டாள் கூட நம்மைப் பார்த்து சிரிப்பான்.

ஒவ்வொரு முறை பிரச்சனை ஏற்படும்போதும் வெளியுறவுத்துறை ஆட்களை ஏதோ டூர் அனுப்புவதுபோல அனுப்பி Reactive ஆக செயல்படுவதை விட Proactive ஆக செயல்படுவது எப்படி என டெல்லியில் இருப்பவர்கள் யோசித்துவிடுவது நலம். Twitter-ம் Facebook-ம் உலகையே புரட்டி போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இன்னமும் புறாவின் காலில் துண்டு சீட்டை கட்டி அனுப்புவது போல நிருபமா ராவிடம் கடிதம் கொடுத்து அனுப்பி எத்தனை நாளுக்கு பாவ்லா காட்டிக்கொண்டிருக்கப் போகிறார்கள் எனத் தெரியவில்லை.
Prevention is better than Cure…வேறு எதுவும் சொல்வதற்கில்லை.

No comments: