Saturday, October 16, 2010

பொதுப்பணித்துறை & சாலை போக்குவரத்துத்துறை பிதாமகன்கள்

கட்டியணைத்து, உச்சி முகர்ந்து, அப்படியே தோள் மீது அமரவைத்து ஊர்வலமாக அழைத்து செல்ல வேண்டும் போலத் தோன்றுகிறது சில பொதுப்பணித்துறை/சாலை போக்குவரத்துத்துறை தலைமை பொறியாளர்களையும் அவர்களது குழுவினரையும். ரோடு (சாலை-ன்னும் சொல்லலாம்-னு கமல் ஒரு பேட்டியில சொன்னது ஞாபகத்துல வருது) போடுவதில் தொடங்கி, பாலங்கள் கட்டுவது வரை எல்லாவற்றிலும் தொடர்ந்து தங்கள் முத்திரையை பதித்துவரும் இந்த துறையின் சில அதிபுத்திசாலி பொறியாளர்களை பாராட்டாமல் இருப்பதுதான் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய அறியாமையாக இருக்கும்.

1985-க்கு முந்தைய காலகட்டம் வரை தமிழ்நாட்டில் இயங்கிக்கொண்டிருந்த சொற்பமான சில (நல்ல) என்ஜினியரிங் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக்குகளில் மெக்கானிக்கல் டிபார்ட்மெண்ட்டுடன் மோதுமளவிற்கு சக்தி கொண்ட ஒரே துறையாக விளங்கியது சாட்சாத் சிவில் டிபார்ட்மெண்ட் மட்டுமே. இந்த இரு துறைகளுக்கும் அப்போதிருந்த மவுசு அப்படி. அசின் – த்ரிஷா ரேஞ்சிற்கு ஒவ்வொரு கேம்பஸுக்குள்ளும் பனிப்போரை நடத்திக்கொண்டிருந்த இந்த இரு துறைகளையும் சமாளிக்க முடியாமல் அல்லது தெரியாமல் பம்மிக்கொண்டிருந்த துறைகளில் ஒன்றுதான் இன்றைக்கு கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் எலக்ட்ரிகல்/எலக்ட்ரானிக்ஸ் துறைகள். சரி மேட்டருக்கு வருவோம். இன்றைய தேதிக்கு என்ஜினியரிங் மார்வலாக வர்ணிக்கப்படும் பெரும்பாலான கட்டிடங்கள்/பாலங்கள் வரை எல்லாவற்றின் பிண்ணனியிலும் இருப்பது இந்த சிவில் என்ஜினியரிங் மூலைதான். டெல்லி மெட்ரோவில் தொடங்கி, நேற்று குடைந்து முடிக்கபட்ட சுவிஸ் கோத்தார்ட் பேஸ் ரெயில்வே டனல் வரை எல்லாமே இவர்களின் ஆசியால் புண்ணியம் தேடிக்கொண்ட ப்ராஜெக்ட்கள் தான்.

உலகின்/நாட்டின் பிற பகுதிகளில் இந்த துறையினர் அசத்திக்கொண்டிருக்க நம்மூரில் மட்டும் எப்படியெல்லாம் சொதப்பலாம் என ரூம் போட்டு யோசித்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்களோ என்ற சந்தேகம் நாளுக்கு நாள் வலுத்துக்கொண்டே போகிறது. அரசியல் இடையூறுகள்/குறுக்கீடுகள், பட்ஜெட்டில் துண்டு, பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமை போன்ற நியாயமான விஷயங்களை கணக்கில் எடுத்துக்கொண்டாலும் இந்த துறையினர் சில சமயங்களில் குறைந்தபட்ச அக்கெளவ்ண்டப்பிலிட்டிகூட இல்லாமல் செயல்படுவது சில்லியாக இருக்கிறது. குறிப்பாக துறைகளின் தலைமை பொறுப்புகளில் உள்ள பொறியாளர்கள் ஏன் இப்படி அநியாயத்திற்கு போட்டு சொதப்புகிறார்கள் என்றே தெரியவில்லை. குறைந்தபட்ச சமூக அக்கறையுடன் செயல்பட்டால் கூட மிகப்பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்திவிடலாம் என தெரிந்தும் இவர்கள் சில நேரங்களில் ஏன் இப்படி கவிழ்த்துவிடுகிறார்கள் என்றே தெரியவில்லை.

சில பல வருடங்களுக்கு முன்புவரை எடை குறைவான ஹீரோ சைக்கிளை வீட்டிற்குள் ஏற்றி ஸ்டேண்ட் போடுவதற்குள் தாவு தீர்ந்துவிடும். இபோதெல்ல்லாம் பஜாஜ் பல்சரை நேராக நடு வீடுவரை ஒட்டிக்கொண்டே சென்றுவிடலாம். அந்த அளவிற்கு வேலையை சுலபமாக மாற்றிவிட்டார்கள் நம்மூர் பொதுப்பணித்துறையினர். ஐந்து அல்லது பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ரோடு போடுகிறோம் என கிளம்பி வந்து ஒவ்வொரு முறையும் ரோட்டை அரை அடிக்கு உயர்த்தி உயர்த்தி, பெரும்பாலான வீடுகளின் அனைத்து படிகட்டுகளையும் மொகஞ்சதாரோ ஹரப்பா ரேஞ்சிற்கு பூமியின் அடி ஆழத்தில் புதைத்துவிட்டார்கள். ரோடுகள் வேகமாக மேலே வந்துவிட்டன. வீடுகள் அதைவிட வேகமாக கீழே போய்விட்டன. மிகவும் தாழ்வாக கட்டப்பட்டிருந்த பல வீடுகளின் கீழ்தளங்கள் இப்போது பங்கர்களாக மாறிவிட்டது தனிக்கதை. ரோடு போடுவது ஒப்பந்தக்காரர்கள் வேலை போன்ற சப்பைகட்டுகளை மக்கள் காதில் சுற்றிவிட்டு இவர்கள் ஒதுங்கிக் கொள்ளவும் முடியாது ஏனென்றால் அந்த பணி எப்படி இருக்கவேண்டும் என நிர்ணயித்து, வேலை முடிந்தவுடன் அதை இறுதியாக ஆராய்ந்து ஒகே சொல்லவேண்டியது இவர்களின் காம்.

புதிதாக ஒரு சாலையை சீரமைக்கும்போது அதை கொஞ்சம் ஆழப்படுத்தி மீண்டும் அதே உயரத்தில் புதிய சாலையை அமைக்கவேண்டும் என்ற அடிப்படை நியதியை முதலாமாண்டு சிவில் என்ஜினிரியங் மாணவனோ/மாணவியோ கூட படம்போட்டு விளக்கிவிடுவார்கள். ஆனால் பொ.ப.துறை ஆட்கள் தான் அடம்பிடிக்கிறார்கள். ஏற்கனவே உள்ள ரோட்டின் மீது கொஞ்சம் கல்லையும் மண்ணையும் போட்டு நிரப்பிவிட்டு அதற்கு மேல் சும்மா ஒரு லேயர் தார் போட்டு அந்த கிஸ்மோ இயந்திரத்தை ஒடவிட்டு ரோட்டை கொஞ்சமாக சமப்படுத்திவிட்டு பில்லை கிளியர் செய்து கொண்டு இடத்தை காலி செய்துவிடுவது பொலிட்டிக்கலி கரெக்ட்..ஆனால் மக்கள் பாவம்பா. இப்படியே ரோடு மேல் ரோடு போட்டுக்கொண்டே போனால் இன்னும் கொஞ்சநாட்களில் பல வீடுகளை அகழ்வாராய்ச்சி செய்து தான் கண்டு பிடிக்கவேண்டும். எதிர்காலத்தில் அண்டர்கிரவுண்ட் மெட்ரோ ரயில் பணிக்காக பள்ளம் தோண்டும்போது ஏதாவது வீடோ அல்லது அலுவலகமோ ஆழத்தில் தென்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இனிமேல் வீடு கட்ட போகிறவர்கள் முன்னெச்சரிக்கையாக இப்பொழுதே 50 படிகட்டுகள் வைத்து வீட்டை உயரத்தில் கட்டிவிடுவது நலம். இப்படி கட்டும் பட்சத்தில் அட்லீஸ்ட் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு தாக்கு பிடிக்க முடியும். இல்லைன்னா கொஞ்சம் கஷ்டம்தான். இதில் இன்னொரு சவுகரியமும் உண்டு, வீடு பார்ப்பதற்கு முகேஷ் அம்பானியின் அல்டா மவுண்ட் ரோடு வீட்டை போலவே மிகவும் பிரம்மாண்டமாக காட்சி அளிக்கும். ஒரே கல்லில் பல மாங்காய்களை அடித்துவிடலாம். இப்படி உயர்த்திக் கட்டுவதற்கு கூடுதலாக வரி வசூலித்தாலும் பரவாயில்லை, மக்கள் கந்துவட்டிக்கு வாங்கியாவது கட்டிவிடுவார்கள். மாநகராட்சிகளும், நகராட்சிகளும் கிடைக்கும் கேப்பில் கொஞ்சம் காசு பார்க்கலாம்.

தஞ்சை பெரிய கோவிலையும், பேளூர்-ஹலபேடு சிற்பங்களையும், மாமல்லபுரம் கல்குகைகளையும், தாஜ் மஹாலையும் பார்க்கும்போதெல்லாம் இதை செயலில் கொண்டுவந்த அந்த மாபெரும் சிவில் என்ஜினியரிங் மூளையை நினைத்து பிரமிக்காமல் இருக்க முடியவில்லை. மினி ட்ராப்டரும், ட்ராயிங் போர்டும் இல்லாத காலத்திலேயே மிகவும் துல்லியமாக தொலைநோக்குடன் சிந்தித்து ஒவ்வொன்றையும் கட்டி எழுப்பி இருக்கிறார்கள்....அவர்களின் வழித்தோன்றல்களால் இருபத்தைந்து அடி அகலம் உள்ள சாலையை கூட சரிவர போட முடியாமல் போவது வியப்பாக இருக்கிறது. அடுத்த முறை புதிதாக சாலையை புணரமைக்கும்போது கொஞ்சம் யோசித்து செயல்பட்டால் யார் சந்தோஷப்படுகிறார்களோ இல்லையோ பூமிதேவி கொஞ்சம் சந்தோஷப்படுவாள்.

1 comment:

ராம்ஜி_யாஹூ said...

அந்த காலங்களில் தேர்தல் இல்லை, எனவே ஒன்றிய செயலாளர்களை மகிழ்வாக இருக்க வைக்க வேண்டும் என்ற பொறுப்பு அமைச்சர்களுக்கு இருந்தஹு இல்லை.

இன்று ஒன்றிய செயலாளர்களை பகைத்து கொண்டால் அடுத்த தேர்தலில் இடம், வாக்கு கிடைக்காது