தத்துவம், நிஜம் எப்படி வேனும்னாலும் எடுத்துக்குங்க அவங்க அவங்க வசதிக்கும் விருப்பத்துக்கும் ஏத்த மாதிரி….மேலோட்டமாக பார்க்கும் போது இயல்பாய் நிகழ்வது மாதிரி தோன்றினாலும் அம்மா மண்டபத்திற்கு அருகில் முறுக்கு சுடும் ஆயாவில் தொடங்கி அமெரிக்க அதிபர் வரைக்கும் எல்லோருக்குமே இதுதான் இன்றைய நிலை.. ஒருவாரம் முன்பாகதான் இருந்த வேலையெல்லாம் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு ஷாட் ட்ரிப் கோப்பன்ஹேகன் வரைக்கும் போய் பிரமாதமான உரையெல்லாம் கொடுத்து ஒலிம்பிக் போட்டியை தன்னோட ஊருக்கு கொண்டுவர பகீரத முயற்சி செய்து பார்த்துவிட்டு கடைசியில் வெறும் கையுடன் திரும்பினார் ஒபாமா. அமெரிக்கர்கள் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் உள்ள மக்களை தனது வசீகர பேச்சால் கவர்ந்திழுத்தவர் ஒலிம்பிக் கமிட்டியை கன்வின்ஸ் செய்ய முடியாமல் திரும்பியது சிகாகோவாசிகளுக்கு கொஞ்சம் ஏமாற்றமான நிகழ்வாகவே அமைந்து போனது.
ஒலிம்பிக் போட்டியை கொண்டு வருவதற்காக அதிபரே களத்தில் இறங்கியதெல்லாம் கொஞ்சம் ஒவர்பா என மீடியாக்கள் விவகாரத்தை கையில் எடுக்க…..வழக்கம்போல நேரிடையாக விளக்கம் அளித்து சூட்டை தணித்தார் ஒபாமா. கேட்டது கிடைக்காமல் போனதில் இருந்த வருத்தம் தொனித்தது அந்த உரையில்….இருந்தாலும் மூவ்-ஆன் என சொல்லிவிட்டு அடுத்த வேலையை பார்க்க போய்விட்டார் மனிதர். இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால் அதிபர் ஏன் நேரிடையாக களத்தில் இறங்கினார் என கூச்சலிடும் அதே மீடியாக்கள் அவர் போகமல் இருந்திருந்தால் அவர் ஏன் செல்லவில்லை என கேட்டிருப்பார்கள்…..எப்போதுமே இரண்டு வகையான கேள்விகளை தயார் செய்து வைத்திருப்பார்கள் போல தெரிகிறது..
சரி மேட்டருக்கு போவோம்…(இரண்டாம் தேதி) தான் கேட்டும் கிடைக்காமல் போனதில் எழுந்த ஏமாற்றத்தில் இருந்தவருக்கு சரியாக ஏழு நாட்களுக்குள் அதைவிட மிகப்பெரிய பரிசு அவர் கேட்காமலேயே கொடுக்கப்பட்டுவிட்டது. ஒபாமாவே எதிர்பார்த்திராத இன்ப அதிர்ச்சி அந்த அமைதிக்கான நோபெல் பரிசு பற்றிய அறிவிப்பு. கோப்பன்ஹேகன் ஏற்படுத்திய வலிக்கு ஒஸ்லோ மருந்திட்டுவிட்டது.
ஒலிம்பிக் போட்டி விவாதங்கள் போன்ற சிறிய மீன்களை வைத்தே அமோகமாக கல்லா கட்டிய மீடியாக்களுக்கு அமைதிக்கான நோபெல் பரிசு பற்றிய அறிவிப்பு பெரிய சுறா மீன். விடுவார்களா காலரை தூக்கிவிட்டுக்கொண்டு கேமரா அறையை அமளிதுமளிபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். அறிவிப்பு வெளியான அடுத்த நொடியிலிருந்து தாறுமாறாக ஆள் ஆளாக்கு ஒரு கருத்தை சொல்லி அரங்கங்களை சூடேற்றிக் கொண்டிருக்கிறார்கள். விவாதத்தின் மையப்பொருள் வேறு யாருமல்ல..சாட்சாத் கமாண்டர்-இன்-சீஃப் ஒபாமாவேதான். இரண்டு வாரங்களாக மீடியாக்களுக்கு ஆக்ஸிஜன் இவர்தான்.
பரிசு கொடுக்கப்பட்டதிற்கான காரணத்தை நோபெல் கமிட்டி ஸ்பீக்கர் வைக்காமலேயே சத்தமாக சொல்லிவிட்ட பின்னும் மீடியாக்கள் விடுவதாக இல்லை. இண்டர்நேஷனல் மீடியாக்கள் தங்கள் சொந்த காரணங்களை / அனுமானங்களை தொடர்ந்து வெளியிட்டு தெளிய வைத்து தெளிய வைத்து அடித்துக் கொண்டிருக்கிறார்கள். நம்மூரில் புவனேஸ்வரி புண்ணியத்தில் இந்த செய்தி கொஞ்சம் பின்னுக்கு தள்ளப்பட்டுவிட்டது. நோபெல் செய்தியை விட அந்த மேட்டர் முக்கியம் இல்லையென்றால் சர்க்குலேஷன் படுத்துவிடும்….அவரவர் கவலை அவர் அவர்களுக்கு. இந்த களேபரங்களுக்கிடையில் விருதை ஏற்றுக்கொண்ட ஒபாமா “அமைதியாக” இது தனது சாதனைகளுக்கானது அல்ல ஆனால் இனிமேல் செய்ய வேண்டிய பணிகளுக்கானது, இதை மக்களோடு பகிர்ந்து கொள்வதாக சொல்லிவிட்டு அடுத்த கட்டத்திற்கு சென்றுவிட்டார்.
இந்த பரிசு அறிவித்த நாளிலிருந்து இன்று வரை நிகழ்ந்த விவாதங்களில் ஆள் ஆளுக்கு ஒரு பெயரை குறிப்பிட்டு ஏன் அவருக்கு கொடுக்கவில்லை ஏன் இவருக்கு கொடுக்கவில்லை என குடைந்துகொண்டு இருக்கிறார்கள். இன்னும் சிலர் ஒருபடி மேலே போய் இந்த விருதிற்கான தகுதி யாருக்கு இருக்கிறது யாருக்கு இல்லை என ஆராய்ச்சி எல்லாம் செய்ய தொடங்கிவிட்டார்கள். இதற்கு முன்னரும் இதே பரிசு பலருக்கு வழங்கப்பட்டிருக்கிறது ஆனால் எனக்கு நினைவு தெரிந்து அப்போதெல்லாம் யாரும் இவ்வளவு விவாதங்களில் இறங்கியதாக தெரியவில்லை. ஒருவேளை இந்த வருடமும் இந்த விருது ஒபாமாவிற்கு வழங்கப்படாமல் வேறு யாருக்காவது வழங்கப்பட்டிருந்தால் இத்தனை விவாதங்கள் நடந்திருக்குமா என்பது சந்தேகமே. நம்மூரின் “நமக்கு நாமே” விருதுகளில் தொடங்கி நோபெல் விருது வரை ஒன்றையும் விடாமல் துரத்தி பிடித்து தர்க்கம் செய்ய மக்கள் கூட்டம் எப்போதுமே தயார் நிலையில் இருப்பது தெளிவாக தெரிகிறது. குறைந்த வயதில் மிகப்பெரிய சிகரங்களை தொட்டுவிடுபவர்கள் நிறைய விலையை கொடுத்தே ஆகவேண்டும் போல தெரிகிறது. சச்சின், ஏ.ஆர். ரகுமான் தொடங்கி ஒபாமா வரை நடக்கும் நிகழ்வுகள் அத்தனையும் அதை உறுதி செய்தபடியே நகர்ந்து கொண்டிருக்கின்றன.
Sunday, October 11, 2009
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment