கட்டுப்படுத்தவே முடியாத அளவிற்கு வேகமாக முன்னேறிக்கொண்டிருந்த தெலுங்கு தேசத்தையும் அதன் தலைவரையும் வழிக்கு கொண்டுவர தலைகீழாக நின்று நீலு குடித்து பார்த்துவிட்டார்கள் லோக்கல் கதர் குல்லாக்கள்…பப்பு வேகவில்லை. இறுதியாக தங்கள் கடைசி தாக்குதலுக்கு டெல்லியில் இருந்து பிரம்மாஸ்திரத்தை இறக்குமதி செய்துவிட்டார்கள். நிலைமையை சமாளிக்க டெல்லியில் இருந்து பறந்து வந்து ஹைதையில் லேண்ட் ஆகிவிட்டார் இந்திரா பிரியதர்ஷினி…தேசத்தின் அப்போதைய பிரதமர். 1977 நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் ஜனதா கட்சி காங்கிரஸை பந்தாடிய நிலையிலும் தங்கள் ஆதரவு கரத்தை காங்கிரஸுக்கே நீட்டி இருந்தார்கள் ஆந்திரவாடுக்கள். மீண்டும் அதே போன்றதொரு ஆதரவை வென்றெடுத்துவிடலாம் என மிகவும் நம்பிக்கையுடன் வந்திறங்கினார் இந்திரா. 1978 தொடங்கி 1983 முடிவதற்குள் ஆந்திராவில் நான்கு முதல்வர்களை மாற்றிய “மிகப்பெரிய” சாதனையுடன் மக்கள் முன் போய் மண்டியிட்டு நின்றது காங்கிரஸ். சுந்தரத் தெலுங்கில் மாட்லாடிய லோக்கல் காங்கிரஸ்காரர்களையே திரும்பி பார்க்காத மக்கள் டெல்லியின் இந்திக்கு மயங்கிவிடுவார்கள் என எதிர்பார்த்தது அபத்த கணக்கு.
திருப்பதியில் தனது பொதுக்கூட்ட கணக்கை ஆரம்பித்த என்.டி.ஆர் அதே மண்ணில் வைத்து அந்த தேர்தலுக்கான தனது கடைசி பொதுக்கூட்டத்தை நடத்த விரும்பியதை காங்கிரஸ் மோப்பம் பிடித்துவிட்டது. சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திக்க தயாரானது ஆந்திர காங்கிரஸ் கமிட்டி. இந்திரா தலைமையில் மாபெரும் காங்கிரஸ் பொதுக்கூட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது. பொதுகூட்டத் திடல்….சாட்சாத் ஏழுமலையானின் அதே காலடிதான்..திருப்பதி. கடைசி பந்தில் எப்படியும் விக்கெட்டை வீழ்த்தி ஆட்டத்தின் முடிவை மாற்றிவிடுவார் என எல்லோரும் இந்திராவை பார்த்துக்கொண்டிருக்க, மிக அழகாகவும், நேர்த்தியாகவும் சொதப்பி எடுத்து ஆந்திர காங்கிரஸ் கட்சிக்கு முடிவுரை எழுதிவிட்டார் நேருவின் வாரிசு. அன்றைய பொதுக்கூட்டத்தில் மைக்கை பிடித்த அனைவருமே தங்கள் தவறுகளுக்கு பரிகாரம் தேடாமல், என்.டி.ஆர் என்ற தனிமனிதரை தாக்க தொடங்கியது, மக்களுக்கு காங்கிரஸ் மீதிருந்த கடைசி நம்பிக்கையையும் தகர்த்தெறிந்தது. தூர்தர்ஷன் செய்தி போல இந்திரா மேடம் பேசிக்கொண்டிருக்க, தத்து பித்து என லோக்கல் கதர்கள் அதை மொழி பெயர்த்துக் கொண்டிருக்க, நெல்லூரிலும் குண்டூரிலும் இருந்த வந்திருந்த தியாகிகளின் வாரிசுகள் துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு “கோவிந்தா” “ கோவிந்தா” என கூவியபடி இடத்தை கிளியர் செய்துவிட்டு திருப்பதி பீமாஸுக்குள் போஜனம் தேடி புகுந்துவிட்டார்கள்.
காங்கிரஸ்காரர்கள் இடத்தை காலி செய்த அடுத்த நொடி, மஞ்சள் சிவப்பு வர்ண கொடிகள் திருப்பதியை ஆக்ரமித்துக்கொள்ள, மிகுந்த ஆரவாரத்துடன் உள்ளே நுழைந்தது, சைதன்ய ரதமாக உருமாற்றம் செய்யப்பட்டிருந்த அந்த டெட்ராய்ட் மேக் செவர்லேட் வாகனம். அந்த தேர்தலுக்கான கடைசி பொதுக்கூட்டம் தெலுங்குதேசத்திற்கு, வாழ்வா சாவா என்பது இன்னும் ஒரு வாரத்தில் தெரிந்துவிடும்….அடிபொடிகள் ஆடி அடங்கிய பின், சாந்த சொரூபியாக மேடை ஏறி மைக்பிடித்தார் என்.டி.ஆர். கிலோ அரிசி 2 ரூபாய்….தெலுங்கு மக்களின் சுய கெளரவம்….என மெல்லிய குரலில் சைக்காலஜிக்கலாக மக்களை சுண்டி இழுத்தவர்…..அப்படியே மெல்ல டெஸிபலை கூட்டி ஆளும் கட்சியின் பக்கம் தன் உஷ்ண பார்வையை திருப்பினார். சிதம்பர நடராஜரின் ருத்ர தாண்டவம் திருப்பதியில் அரங்கேற தொடங்கியது. காங்கிரஸ் கட்சியின் ஊழலையும், நான்கு வருடத்திற்குள் நான்கு முதல்வர்களை மாற்றிய டெல்லியின் கபடி ஆட்டத்தையும் போட்டு கிழித்து எடுத்துவிட்டார் மனிதர். அந்த உரையை அவர் முடிக்கும்போது ஏறக்குறைய எல்லா எலிகளும் தயாராகிவிட்டன என்.டி.ஆர் பின்னாலே தெலுங்கு தேசம் என்னும் ஆற்றில் இறங்குவதற்கு. இறுதி உபதேசத்தை தொண்டர்யடியார்களுக்கு ஓதிவிட்டு அப்படியே மலையேறியவர் மொட்டை போட்டுக்கொண்டு பஞ்சரா ஹில்ஸ் நோக்கி புறப்பட்டுவிட்டார்..இரண்டு நாளில் ஒட்டு போட்டுவிட்டு அதற்கடுத்த நான்கு நாளில் முதல்வர் பதவி ஏற்பதற்காக.
1983 ஜனவரி 5, ஒரு மாபெரும் அரசியல் மாற்றத்திற்கான விதையை மிகவும் அமைதியாகவும் அழுத்தமாகவும் தங்கள் ஒட்டுக்களின் மூலமாக பதிய தொடங்கி இருந்தனர் ஆந்திர மக்கள். அமைதியாக நடந்து முடிந்தது வாக்குபதிவு…அந்த அமைதி காங்கிரஸ்காரர்களையும் தெலுங்கு தேச தொண்டர்களையும் அமைதியிழக்க செய்திருந்தது. 1983 ஜனவரி 6, அதிகாலை பொழுது அமைதியாகவே விடிந்தது.…ஆந்திர அரசியலை தலைகீழாக புரட்டி போடப்போகும் நாள் அது என தெரியாமலே. நாள் முழுவதும் யாருக்கும் எந்த வேலையின் மீதும் நாட்டம் செல்லவில்லை…..கை நகங்களின் மீது வன்முறை திணிக்கப்பட்டு கடித்து துப்பியபடியே காத்திருந்தார்கள் அந்த முதல் கணத்திற்காக. மெல்ல இருள் கவிழ ஆரம்பித்திருந்த அந்த நாளின் இறுதி மணித்துளிகளில் சுமார் பத்து மணி அளவில் முதல் தொகுதிக்கான தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது.….தொகுதியை வென்றது காங்கிரஸ்…ஷாஃத் நகர் தொகுதியிலிருந்து முதல் போணியை காங்கிரஸுக்கு சாதகமாக தொடங்கி வைத்தவர் டாக்டர். சங்கர் ராவ். காங்கிரஸ் தொண்டர்களின் முகத்தில் லேசான ஒளி பரவ, எதிர் முகாம் மெல்ல கலகலக்க ஆரம்பித்தது. என்.டி.ஆர் எந்த இறுக்கத்தையும் காட்டிக்கொள்ளாமல் அமைதிகாத்தார்….நாளை பொழுது தனக்கானது என்ற நம்பிக்கையுடன் காத்திருந்தார். அந்த இரவு யாருமே தூங்கவில்லை……யாரையும் தூங்கவிடாமல் எழுப்பிக் கொண்டேயிருந்தது வேகமாக தனது தீர்ப்பை எழுத தொடங்கியிருந்த வரலாறு.
ஏழாம் தேதி அதிகாலை தென்னிந்திய மக்கள் பொங்கலை கொண்டாட ஆயுத்தமாகி கொண்டிருக்கையில் ஆந்திராவில் தீபாவளி கொண்டாட ஆரம்பித்திருந்தனர் தெலுங்கு தேச தொண்டர்கள். ஸ்ரீகாகுளம் தொடங்கி சித்தூர் வரை சிவகாசி தயாரிப்புக்கள் தங்கள் வேலையை காட்டத் தொடங்கியிருந்தன. தெலுங்கு தேசம் கட்சியின் ஒவ்வொரு தொண்டனின் கையையும் ஆந்திராவின் தினத்தந்தி “ஈநாடு” பத்திரிகை ஆக்ரமித்திருந்தது. அந்த பத்திரிகை அன்று வெளியிட்ட தலைப்பு செய்திதான் இந்தியா முழுவதிற்கும் அன்றைய தலைப்பு செய்தி…..“தெலுங்கு தேசம் சூப்பர்ஹிட்” அடித்து நொறுக்கி சர்க்குலேஷனை டாப்கியரில் போட்டு தூக்கிவிட்டார்கள். தெலுங்கு தேசத்தின் ஜனனம் முதல் தேர்தல் முடிவு வெளிவரும் வரை ஈநாடு பத்திரிகை தெலுங்கு தேசத்தின் “முரசொலி” போல் செயல்பட்டது….அதன் பிண்ணனி தனி வரலாறு. அனைத்து முடிவுகளும் வெளியாகி முடியும் தருணத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையை செங்கல் செங்கலாக பிரித்தெடுத்து தரைமட்டமாக்கிவிட்டார் பாதாள பைரவியின் நாயகன் என்.டி.ஆர்...வெறும் ஒன்பது மாதத்தில் நூறாண்டு பாரம்பரியமிக்க ஒரு கட்சியை, அந்த மாநிலத்தின் முதல்வர் பதவியில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சி வந்த கட்சியை, ஒரு சிறு கல்லை எடுத்து எறிவது போல வாரி சுருட்டி ஹுசைன் சாகருக்குள் தூக்கி எறிந்துவிட்டார் மனிதர். கர்நாடகத்தில் ஜனதாவும், தமிழ்நாட்டில் திமுகவும், கேரளத்தில் கம்யூனிஸ்டுகளும் காங்கிரஸை பதம் பார்த்துவிட எஞ்சியிருந்த ஒரே தென் மாநிலமும் இறுதியாக ஆட்டத்தில் இணைந்துவிட்டது. காங்கிரஸ் தவிர்த்து நாட்டில் உருவான கட்சிகளில் பெரும்பான்மையானவை காங்கிரஸை எதிர்க்கவேண்டும் என்ற நோக்கத்துடனே தோற்றுவிக்கபட்டிருக்கின்றன என்பது காங்கிரஸ் உணரவேண்டிய கசப்பான உண்மை. சுதந்திரத்திற்கு முன்புவரை ஒட்டுமொத்த தேசத்தையும் தன் பின்னால் அணிதிரள செய்த கட்சியால் அதன்பிறகு குறைந்தபட்சம் பத்துவருடம் அதே நிலையை தக்க வைத்துக்கொள்ள முடியாமல் போனது காலக்கொடுமை.
1983 ஜனவரி 9, ஆந்திர அரசியல் வரலாற்றில் முதல் காங்கிரஸ் அல்லாத முதல்வர் என்ற பெருமையுடன் மிகுந்த ஆர்ப்பரிப்புக்களுக்கிடையே மகுடம் சூட்டிக்கொண்டார் என்.டி.ஆர். “மாயா பஜார்” கிருஷ்ணனை முதல்வராக்கி அழகு பார்த்துவிட்ட தெலுங்கு தேச தொண்டர்கள் தங்கள் பூர்வ ஜென்ம பலனை காசிக்கு செல்லாமல் ஹுசைன் சாகர் ஏரியின் கரையிலும், கோதாவரி-கிருஷ்ணாவின் ஆற்றுபடுகையிலுமே அடைந்துவிட்டார்கள். திருவிழா முடிந்து மக்கள் ஒருவழியாக தெளிய ஆரம்பிக்க, முதல்வர் அலுவலகத்தில் பைலை புரட்ட ஆரம்பித்திருந்தார் அதுவரை வெள்ளித்திரையில் வில்லன்களை புரட்டிக்கொண்டிருந்த இந்த முன்னாள் சூப்பர் ஸ்டார். வாக்குறுதிகளை நிறைவேற்ற கோப்புகளில் அதிரடியாக கையெழுத்திட ஆரம்பித்தார்….….முக்கியமாக அரிசி மேட்டரில் கொஞ்சம் ஓவர் ஸ்பீட்…வேற வழி…செஞ்சிதான் ஆகனும்… இல்லையென்றால் அடுத்த தேர்தலில் பிட்ஸ்பர்க் பெருமாளே வந்து இவருக்காக ஓட்டு கேட்டாலும் மக்கள் முதுகை திருப்பிக்கொள்வார்கள்.
சமத்துகுட்டியாக ஆட்சியை நடத்திக்கொண்டிருந்தவருக்கு, 1984 ஆகஸ்டில் ஃபர்ஸ்ட் செக்பாயிண்ட் வைக்கப்பட்டது. செக்பாயிண்ட் வைத்தவர் இவர் கூடாரத்திலேயே இவர் பக்கத்திலேயே இருந்தவர். எதிரியை எதிரில் வைக்ககூடாது பக்கத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற சாணக்கியதனத்தை சரியாகதான் செய்திருந்தார் இந்த ராஜரிஷி, ஆனால் கணக்கு கொஞ்சம் பிசகி நிலைமை ஏடாகூடமாகிவிட்டது. பை-பாஸ் சர்ஜரிக்காக அமெரிக்காவுக்கு செல்ல ஜதராபாத்தை விட்டு கிளம்பும்போது ஏர்போர்ட்டில் கையசைத்து வழியனுப்பி வைத்த தனது நிதி அமைச்சர் பாஸ்கர் ராவ் தனக்கு எதிராக திரும்புவார் என்பதை நினைத்துகூட பார்த்திருக்கமாட்டர். துரோகம் தன் பாக்கெட்டுக்குள்ளே ஒளிந்திருப்பதை எப்படியோ கவனிக்க தவறிவிட்டார் தேவுடு. அமெரிக்காவில் இவருக்கு சிகிச்சை நடைபெற்றுக்கொண்டிருக்கும் அதே நேரத்தில், ஐதராபாத்தில் தெலுங்கு தேசத்திற்கு வேறு மாதிரியான ஆப்ரேஷன் அண்டர் கிரவுண்டில் வைத்து ஆரம்பமாகி இருந்தது…..ஒவ்வொரு தெலுங்கு தேச எம்.எல்.ஏ-விற்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வியாபாரம் ஜெகஜோதியாக தொடங்கி இருந்தது…..வேலையை ஆரம்பித்து வைத்துவிட்டு ஒரமாக நின்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டது காங்கிரஸ். சனிபகவான் காங்கிரஸை உக்கிரத்தோடும், தெலுங்கு தேசத்தை பரிவோடும் பார்த்திருப்பார் போல தெரிகிறது…..சந்திரபாபு நாயுடுவை உருவில் வந்து காங்கிரஸுக்கு தண்ணிகாட்ட ஆரம்பித்துவிட்டார். அன்றைய தேதிக்கு தெலுங்கு தேசத்தின் எம்.எல்.ஏ.க்கள் சிதறிவிடாமல் கட்டி காத்து என்.டி.ஆரின் இதயத்தில் பாலை வார்த்தவர், பின்னாளில் என்.டி.ஆருக்கு லட்டு கொடுத்த அவருடைய மருமகன் சந்திரபாபு நாயுடுவே தான். இதில் மிகப்பெரிய காமெடி இந்த உள் அடி புரட்சியில் மூளையாக செயல்பட்ட பாஸ்கர் ராவும், அந்த புரட்சியை லாவகமாக கையாண்டு என்.டி.ஆரை காப்பாற்றிய சந்திரபாபு நாயுடுவும் முன்னாள் காங்கிரஸ் அமைச்சர்கள் என்பது. பாம்பின் கால் பாம்பறியும்.
ஆகஸ்ட் 14 இல் சிகிச்சை முடிந்து வீல் சேரில் இந்தியா திரும்பியவருக்கு ரத்தின கம்பளத்திற்கு அடியில் தோண்டப்பட்டிருந்த குழி தெரிந்தே இருந்தது……எல்லா முன்னேற்பாடுகளையும் கச்சிதமாக செய்து முடித்துவிட்டு காத்திருந்த எதிரணி ஆகஸ்ட் 16 அன்று கொடியை உயர்த்தி விட்டார்கள்…..ஜெட்-லாகில் இருந்த என்.டி.ஆர் விழித்து பார்ப்பதற்குள் அப்போதைய ஆந்திர ஆளுநர் இராம்லால் தனது ஜனநாயக கடமையை வேகமாக முடித்துவிட்டார்….என்.டி.ஆர் தலைமையிலான அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டு பாஸ்கர் ராவ் தலைமையில் புது அமைச்சரவைக்கு பதவி பிரமாணம் செய்து வைத்துவிட்டார் ஆளுநர்….எப்படி கூட்டினாலும் பாஸ்கர் ராவிற்கு அந்த மேஜிக் நம்பர் கிடைக்கவே கிடைக்காது என தெரிந்தும் இந்திரா அவரை வைத்து ஆடிய அந்த ஆட்டத்தை இந்தியாவில் யாருமே ரசிக்கவில்லை என்பது உண்மையோ உண்மை……எந்த அளவிற்கு ஜனநாயகத்தை கேவலபடுத்த முடியுமோ அந்த அளவிற்கு அதை கேவலபடுத்தினார் அப்போதைய ஆளுநர், தனது ஆதரவு எம்.எல்.ஏ-க்களுடன் வந்து ஆளுநரை சந்திப்பதற்கு என்.டி.ஆருக்கு அனுமதி மறுக்கபட்டது. சட்டசபையை முடக்கி ஆகிவிட்டது..ஆளுநர் மாளிகையில் மெஜாரிட்டியை நிரூபிக்க அனுமதி இல்லை….வேறு வழியே இல்லாத நிலையில் ”டெல்லி சலோ” என அறிவித்துவிட்டு தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 161 பேரை விமானத்தில் ஏற்றி டெல்லிக்கு அழைத்து சென்று ஜனாதிபதி முன்பு நிறுத்திவிட்டார் என்.டி.ஆர். ஒட்டுமொத்த இந்தியாவும் நடப்பதை பார்த்துக்கொண்டிருந்தது…..எமர்ஜென்ஸி விவகாரத்தால் சரிந்திருந்த தன் செல்வாக்கை கொஞ்சம் கொஞ்சமாக மீட்டுக்கொண்டிருந்த இந்திரா இந்த நாடகத்தின் மூலம் மீண்டும் ஒருமுறை சறுக்கினார் என்பதை பாடிகாட் முனீஸ்வரனின் மீது சத்தியமிட்டு சொல்லலாம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதல்வரை, இருதய சிகிச்சை செய்து திரும்பியிருந்த அந்த நிலையில் தூக்கி எறிந்துவிட்டு வேறு ஒருவரை அங்கு அமர்த்தி அவருக்கு மெஜாரிட்டியை நிரூபிக்க ஒரு மாத காலம் அவகாசத்தையும் கொடுத்து ஓட்டு போட்ட அத்தனை மக்களையும் ஒட்டு மொத்தமாக கோமாளியாக்கினார்கள் அப்போதைய ஆளுநர் இராம்லால், பாஸ்கர் ராவ் மற்றும் இந்திரா காங்கிரஸ் கட்சியினர். அதே கால அவகாசம் முதல்வராக இருந்த என்.டி.ஆருக்கு ஏன் கொடுக்கப்படவில்லை என்பது மில்லியன் டாலர் கேள்வி.
வெறும் அறுபது எம்.எல்.ஏ.க்களை கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியை நம்பி புரட்சியில் இறங்கிய பாஸ்கர் ராவ், ஒரு மாத கால அவகாசத்தை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெறுவதில் செலவிட்டு கொண்டிருக்க, காவி உடையிலிருந்து கறுப்பு உடைக்கு மாறியிருந்த என்.டி.ஆர். “தர்ம யுத்தத்திற்கு” செல்ல தயாராகி தனது பழைய செவர்லேட்டை கேரேஜ்லிருந்து தூசி தட்டி வெளியே எடுத்துவிட்டார். சைதன்ய ரதம் மீண்டும் ஒரு முறை மக்களை சந்திப்பதற்காக பஞ்சரா ஹில்ஸ்லிருந்து புறப்பட்டுவிட்டது……..இம்முறை ஒட்டு கேட்டு அல்ல….நியாயம் கேட்டு..தனக்கிழைக்கப்பட்டுள்ள துரோகத்திற்கு நீதி கேட்டு மக்களிடம் சென்றார் என்.டி.ஆர்….சிகிச்சையாலும் இழைக்கப்பட்ட அநீதியாலும் நொடிந்து போயிருந்த தங்கள் தலைவனின் அந்த கோலத்தை பார்த்த தெலுங்கு தேச தொண்டர்களின் கையில் யார் சிக்கி இருந்தாலும் கிழித்து எடுத்திருப்பார்கள் அவ்வளவு ஆக்ரோஷம் ஒவ்வொருவரின் முகத்திலும்…..மக்களின் உணர்ச்சிகளை மீண்டும் ஒருமுறை தனக்கு சாதகமாக கன்சாலிடேட் செய்துகொண்டார் இந்த ராஜரிஷி. ஆந்திர மக்களின் கோபத்தை உன்னிப்பாக பார்த்துக்கொண்டிருந்த டெல்லி, தங்கள் சாகச லீலைகள் எடுபடாமல் போவதை கண்டதும் சுதாரித்துக்கொண்டது. தங்களின் தலையை தற்காத்துக்கொள்ள ஆந்திர ஆளுநரை பலியிடவும், பாஸ்கர் ராவை கைகழுவி விடவும் தயாராகிவிட்டது நார்த் பிளாக்.,…இராம்லாலுக்கு கல்தா லெட்டரை அனுப்பிவிட்டு, சங்கர் தயாள் சர்மாவை பெட்டி படுக்கையோடு இந்தியன் ஏர்லைன்ஸில் ஏற்றி ஐதராபாத் ராஜ்பவனுக்கு அனுப்பி வைத்துவிட்டார்கள். கூடவே ஒரு செய்தியையும் அவர் காதில் ஒதிவிட்டிருந்தார்கள்….சத்தம் போடாமல் என்.டி.ஆரையே மீண்டும் முதல்வர் பதவியில் அமர்த்திவிடவேண்டும் என்று.
(தொடரும்)
Tuesday, October 13, 2009
Subscribe to:
Post Comments (Atom)

1 comment:
Rex.. Your style overtakes the original Vaigai express. Very intersting matter to know. Waiting for the next part !
-Toto
www.pixmonk.com
Post a Comment