1977 இல் மிகவும் கவனமாக சென்னையை தவிர்த்த எம்ஜியார், பின்னர் 1980 இல் சென்னைக் கோட்டைக்கான தனது முதல் தாக்குதலுக்கு அதிமுக வை மிகப் பெரிய அளவில் தயார்படுத்தினார். 1977 தேர்தல் முடிவு தந்த தைரியமும், முழு ஆயுளையும் முடிக்கும் முன்பே தனது ஆட்சிக்கு டெல்லிவாலாக்கள் முடிவுரை எழுதிவிட்ட கோபமும் அவரை கொஞ்சம் உசுப்பேற்றி பார்க்க, இம்முறை கொஞ்சம் வேகமாகவும் அதே சமயம் ஒருவித ஆக்ரோஷத்துடன் களத்தில் இறங்கினார்.
திட்டத்தின் முதல் படியாக திமுகவின் கோட்டை என கருதப்படும் அனைத்து தொகுதிகளும் தனியாக பிரிக்கப்பட்டு கட்டம் கட்டப்பட்டன. அந்த தொகுதிகளில் திமுகவின் பலம் மற்றும் பலவீனங்கள் மிக கவனமாக அலசப்பட்டு அதை எதிர்கொள்ளத் தகுதியான வேட்பாளர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டது. உற்று நோக்கிகொண்டிருந்த திமுகவும் பதிலடி கொடுக்க தயாரானது. அதிமுகவின் மிகப்பெரிய தாக்குதலுக்கு ஈடு கொடுக்க கூடிய வேட்பாளர்களை மிக கவனமாக பார்த்து அலசி ஆராய்ந்து தேர்ந்தெடுக்க ஆரம்பித்தார்கள். எம்ஜியார் மற்றும் அதிமுகவினரால் திட்டம் தீட்டப்பட்டு தகர்க்க நினைத்திருந்த திமுக கோட்டைகளின் பட்டியலில் ஆயிரம் விளக்கு மிக முக்கியமான இடத்தில் இருந்தது.
ஒருவழியாக தேர்தல் அறிவிக்கப்பட்டு, இரு கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவிக்கத்தொடங்கின. திமுக சார்பில் ஏற்கனவே இங்கு அனலை கிளப்பிய திரு. சாதிக் பாட்ஷாவையே மீண்டும் களத்தில் இறக்க, விழித்துக்கொண்ட அதிமுக அதன் அஸ்திரத்தை முதல் முறையாக வெளியில் எடுத்தது. அக்கட்சியின் சார்பாக முதன் முறையாக திரு. கே.ஏ. கிருஷ்ணசாமி வேட்பாளராக களத்தில் இறக்கப்படுகிறார்.
திமுகவை பொறுத்தவரை இது அவர்களின் சொந்த களம், தொகுதியின் ஒவ்வொரு அசைவையும் மிக அருகில் இருந்து பார்த்தவர்கள். அதிமுகவிற்கும் ஏறக்குறைய அதே நிலைதான். காரணம் அன்றைய ரத்தத்தின் ரத்தங்களில் பெரும்பாலனவர்கள் முந்தின நாள் வரை உடன்பிறப்புகளாய் இருந்தவர்களே. இருந்தாலும் இருபிரிவாய் விலகி நின்று முதல் முறையாக ஒருவரை ஒருவர் எதிர் எதிரே சந்திப்பதால் போட்டியில் அனல் பறந்தது. இருபிரிவிற்குமே தங்கள் எதிர் அணியின் பலம் மற்றும் பலவீனங்கள் அத்துபடி, யாருமே அடுத்தவரை அவ்வளவு எளிதில் வீழ்த்திவிட முடியாதபடி மிகவும் விறுவிறுப்பான நிலை.
இன்றைய 20-20 போட்டிக்கு இணையான விறுவிறுப்புடன் நடந்த அந்த தேர்தலின் முடிவில் வெறும் 307 ஒட்டு வித்தியாசத்தில் அதிமுக முதல்முறையாக இந்த தொகுதியை கைப்பற்ற, தங்கள் கோட்டை கைகளை விட்டு நழுவுவதை மவுனமாக பார்த்து நின்றது திமுக. 1977 யை காட்டிலும் கூடுதலாக 50% மேலாக ஒட்டுக்கள் பெற்றும் தங்களால் தொகுதியை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லையே என்ற ஏக்கத்தில் உடன்பிறப்புகள் சோகத்தில் மூழ்கிவிட, முதல் முறையாக இந்த தொகுதியில் களம் கண்டு ஏறக்குறைய திமுகவிற்கு சமமான வாக்குகளை அள்ளிய அதிமுகவின் முகாமில் வெடிகள் விண்ணைப்பிளக்க ஆரம்பித்தன.
திமுக கோட்டையில் ஒட்டை போட்ட திரு. கே.ஏ. கிருஷ்ணசாமி அதற்கு முன்னரே எம்ஜியார் அமைச்சரவையில் தன் இடத்தை பெற்றிருந்த நிலையில், இந்த வெற்றியின் மூலம் மீண்டும் ஒருமுறை தனது டிரேட் மார்க் “அமைச்சர்களின் தொகுதி” என்ற அந்தஸ்த்தை ஆயிரம் விளக்கு மறக்காமல் புதுப்பித்துக் கொண்டது.
கே.ஏ. கிருஷ்ணசாமி : எம்ஜியார் மற்றும் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர். தொடர்ந்து இருமுறையும் மொத்தமாக மூன்று முறையும் ஆயிரம் விளக்கில் அதிமுகவின் கொடியை பறக்கவிட்டு திமுகவுக்கு மிகப் பெரிய சவாலாக விளங்கியவர். இவரை தவிர்த்து அதிமுகவின் சார்பில் இங்கு களம் இறக்கப்பட்டவர்கள் யாருமே இவர் ஏற்படுத்திய அளவிற்கு ஒரு மிகப் பெரிய நெருக்கடியை திமுகவிற்கு இதுவரை ஏற்படுத்தவே இல்லை என்பது நிதர்சனம்.
1984 இல் இந்திராகாந்தி அவர்களின் மறைவினால் ஏற்பட்ட அனுதாப அலை மற்றும் எம்ஜியார் உடல்நிலை ஆகியவற்றின் பிண்ணனியில் தேர்தலை சந்தித்த அதிமுக மீண்டும் கே.ஏ.கிருஷ்ணசாமி அவர்களையே இங்கு களத்தில் இறக்கியது. ஏற்கனவே தொகுதியை இழந்து நின்ற திமுகவிற்கு மேற்சொன்ன காரணங்களால் ஏற்பட்டிருந்த நெருக்கடியும் சேர்ந்துக்கொள்ள மிகப்பெரிய சவாலை எதிர்க்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறது. சவாலை சமாளிக்க கூடிய தகுதியான வேட்பாளர் யார் என தேடினார்கள், அதிமுகவும் அந்த வேட்பாளர் அறிவிப்பிற்காக காத்திருந்தது. காத்திருப்பவர்களுக்கு ஒரு சிறு அதிர்ச்சி வைத்தியம் அளிக்க திமுக சார்பில் முடிவு செய்யப்படுகிறது.
இம்முறை மிகப் பெரிய வேட்பாளரை அல்லது கூட்டணிகட்சி வேட்பாளரை திமுக நிறுத்தலாம் என யூகங்கள் கொடிகட்டி பறக்க, யாருமே எதிர்பார்த்திராத, மிகவும் வித்தியாசமான அதே சமயம் தைரியமான ஒரு முடிவை திமுக எடுத்துவிட்டது. ரத்தத்தின் ரத்தங்கள் மட்டுமின்றி உடன்பிறப்புக்களின் புருவத்தையும் உயர்த்திய அந்த முடிவு திமுகவில் ஒரு தனி அத்தியாத்திற்கான துவக்கம் என்பதை பலரும் மெல்ல உணரத்தொடங்கினார்கள்.
வரலாற்றை உற்று படித்தவர்களை/படிப்பவர்களை அடிக்கடி கடந்து போகும் ஒரு செய்தி, மிகப் பெரிய பேரரசுகள் தங்களுக்கு சோதனைகள் ஏற்பட்டபோதெல்லாம் தங்கள் இளவரசர்களை களத்தில் இறக்கி எதிரணியை கலங்கடிக்க செய்ததாக காணப்படும் செய்தி. மன்னர்களை காட்டிலும் இளவரசர்கள் களத்தில் இறங்கும்போது தெறிக்கும் வேகம் அபரிதமானது. சேர, சோழர்கள் தொடங்கி முகலாயர்கள் வரை வரலாறு இதை பதிந்திருக்கிறது. அந்த வரலாறுகளை அணு அணுவாக படித்து தெளிந்திருந்த திமுகவும் அதன் தலைமையும் தங்கள் அடுத்த தலைமுறையை களத்திற்கு அனுப்பி இப்போது எழுந்துள்ள சவாலை எதிர்நோக்குவது என முடிவுகட்டினார்கள்.
தன்னை சுயபரிசோதனைக்கு ஆட்படுத்தி திமுக முன்னிறுத்திய அந்த வேட்பாளர், மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு அதன் ஆக்ரோஷ அனலில் வெந்து மீண்ட ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்களில் ஒருவரான திரு. மு.க. ஸ்டாலின். திமுகவின் இளைஞரணியை இயக்கிக்கொண்டிரு(ப்பவர்)ந்தவர். அதுவரை நேரடி அரசியலில் இறங்கி தேர்தலை/மக்களை சந்தித்திராதவர்.
வேட்பாளர் அறிவிப்பு சம்பிரதாயங்கள் முடிந்து போட்டி தொடங்கிவிட, தங்கள் இளைய தலைமுறை தலைவரை கொண்டு இழந்த கோட்டையை மீட்டெடுக்க முயன்ற திமுக தொண்டர்களின் ஆக்ரோஷமான உழைப்பு ஒருபக்கம், திமுகவின் அடுத்த தலைமுறைக்கு தடையை ஏற்படுத்த வேண்டிய கட்டயாச் சூழல், சென்ற முறை பெற்ற வெற்றியை தக்க வைத்துக் கொள்ளவேண்டிய நிர்பந்தம் என அதிமுகவின் போராட்டம் மறுபக்கம். இவை எல்லாம் சேர்ந்து 1980 தேர்தலுக்கு கொஞ்சமும் குறையாத விறுவிறுப்பை 1984 தேர்தலிலும் இந்த தொகுதியில் ஏற்படுத்தியிருந்தன. இந்த தேர்தலை பொறுத்தவரை இங்கு அதிமுகவிற்கு இருந்த அழுத்தம் திமுகவிற்கு இருந்திருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.
விறுவிறுப்புடன் நடந்து முடிந்த தேர்தலில் மீண்டும் ஒருமுறை இரட்டை இலையைக் கொண்டு உதயசூரியனை மறைத்துக்காட்டினார் அதிமுகவின் திரு. கே.ஏ. கிருஷ்ணசாமி. திமுகவினரால் முன்னெடுக்கப்பட்ட அக்னிபரீட்சை ஒரு தற்காலிக பின்னடைவை எதிர்கொள்ள, திரு.மு.க. ஸ்டாலினின் முதல் அரசியல் முயற்சிக்கு முட்டுக்கட்டை போடப்படுகிறது. சென்ற தேர்தலைப்போல் நூலிழையில் தப்பிக்காமல் கொஞ்சம் திடமாகவே கரையேறினார் திரு. கே.ஏ, கிருஷ்ணசாமி. இம்முறை இவர் பெற்ற வாக்கு வித்தியாசம் சுமார் இரண்டாயிரத்துக்கும் அதிகமானது. மிக ஆச்சரியமான விஷயம் இருகட்சிகளுமே தாங்கள் முன்பு பெற்ற ஒட்டுக்களை விட அதிகமான ஓட்டுக்களை இந்த தேர்தலில் பெற்றிருந்தன, அந்த ஒட்டு விவரங்கள் சொல்லிய செய்தி இதுதான் “போட்டி இன்னும் இந்த தொகுதியில் ஒய்ந்துவிடவில்லை என்பதே”, பின்னர் வந்த தேர்தல் முடிவுகள் அதை சரியாக பிரதிபலித்தன.
1984 தேர்தலை பொறுத்தவரை அதிமுகவிற்கு தொகுதியை தக்க வைத்துக்கொண்ட சந்தோஷம், திமுகவிற்கு அதன் எதிர்கால தலைவரை தமிழகம் முழுவதிற்கும் அறிமுகப்படுத்திவிட்ட நிலை. Win-Win Situation. இரு கட்சிகளுமே தங்கள் இலக்கை அடைந்துவிட்டன என சொல்லலாம். சிறிய தளர்வுக்கு பின் மீண்டும் புது வேகத்துடன் எழுகிறது திமுக, தோல்வியை பரிசாக ஏற்றுக்கொண்டு தனது அடுத்த அரசியல் பயணத்தை தொடர ஆரம்பிக்கிறார், தமிழகத்தின் எதிர்கால முதல்வராக இன்று பத்திரிக்கைகளால் வர்ணிக்கப்படும் திமுகவின் திரு. மு.க. ஸ்டாலின்.
மு.க. ஸ்டாலின்: இந்தியாவில் மிசா சட்டம் அமல்படுத்தப்பட்டு அப்போதைய (இந்திராவின்) காங்கிரஸ் அரசுக்கு எதிராக வட இந்தியாவில் பலமாக எல்லோரும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துக் கொண்டிருக்க இந்தியாவின் தென்கோடியில் தமிழ்நாட்டில் எழுந்த பலமான மிசா எதிர்ப்பு குரல் வட இந்திய அரசியல்வாதிகளை ஒட்டுமொத்தமாக தமிழகம் நோக்கி திரும்பி பார்க்க வைத்தது. அன்றைய தேதியில் ஆளும் கட்சியாக இருந்து கொண்டு மிசாவை எதிர்த்த திமுக அனைவரும் எதிர்பார்த்தது போலவே தன் ஆட்சியை இழந்தது.
அனைத்து திமுக பெருந்தலைகளுக்கும் இந்திரா & கோ குறி வைத்துவிட ஏறக்குறைய அனைவருமே சிறைக்கு தங்களை தயார் படுத்தி கொள்ள ஆரம்பித்து இருந்தார்கள், கலைஞர் உள்பட. ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் இந்திரா & கோ தனது ஆட்டத்தை கொஞ்சம் மாற்றி ஆட ஆரம்பித்துவிட்டது. கலைஞரை தவிர்த்து, திமுகவின் முண்ணனி தலைவர்கள் அனைவரும் சென்னை, மதுரை, பாளையங்கோட்டை, வேலூர் என தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்குள் ஐக்கியமாகிவிட, கலைஞருக்கு பதிலாக வெறும் இருபத்தி இரண்டு வயதே நிரம்பியிருந்த மு.க. ஸ்டாலினின் பக்கம் தன் பார்வையை திருப்பினார் இந்திரா. அடுத்த நிமிடம் அவரை அள்ளிக்கொண்டு சென்றது காவல் துறை. சென்னை மத்திய சிறையின் செல்கள் திமுகவின் வருங்கால தலைவரை எதிர்கொள்ள தங்களை தயார்படுத்திக்கொண்டன.
கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த மிசா கொடுமைகளின் தனலை சாட்சிக்கு வைத்து மு,க. ஸ்டாலினின் எதிர்கால அரசியல் பிரவேசத்திற்கு சென்னை மத்திய சிறையில் வைத்து அடிக்கல் நாட்டியது அப்போதைய இந்திரா தலைமையிலான காங்கிரஸ் அரசு. எல்லா எதிர்க்கட்சியினரை போலவே மிசா கொடுமைகள் மு.க. ஸ்டாலின் மீதும் பிரயோகிக்கபட அதையே தனது அரசியல் வாழ்க்கைக்கு அஸ்திவாரமாக மாற்றிக்கொண்டார். மிசா சட்டத்தின் பிடியில் இருந்து மீண்டு, சிறையில் இருந்து வெளிவந்த பின் திமுகவில் புதிதாக உருவாக்கப்பட்ட இளைஞரணிக்கு இவர் தலைமை தாங்க, முழு நேர அரசியல் இவரை மெல்ல விழுங்கத்தொடங்கியது. கால ஒட்டத்தில் சென்னை மேயர், உள்ளாட்சித்துறை அமைச்சர் என படிப்படியாக முன்னேறி, தமிழக முதல்வரின் நாற்காலிக்கு மிக அருகில் இன்று பயணித்துக்கொண்டிருக்கிறார்.
1984 இல் இவரை புறந்தள்ளிய அதே ஆயிரம் விளக்கில் 1989 இல் மீண்டும் திமுகவின் சார்பில் களத்தில் இறக்கப்படுகிறார். காற்று இம்முறை திமுகவிற்கு சாதகமாக வீச தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக (ஜெ) வேட்பாளரை சுமார் இருபதாயிரத்துக்கும் கூடுதலான ஒட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மிகப் பெரிய வெற்றியுடன் தன் முதல் தடத்தை தமிழக சட்டசபையில் பதிக்கிறார். சென்ற தேர்தலைக்காட்டிலும் இம்முறை திமுக இங்கு கூடுதலாக அள்ளிய வாக்குகள் சுமார் ஏழாயிரத்திற்கும் அதிகம். வலுவில்லாத எதிரணி, எம்ஜியார் இல்லாத அதிமுக என அனைத்து அம்சங்களுமே திமுக வுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தி இருக்க கிடைத்த சந்தர்பத்தை மிக சரியாக பயன்படுத்திக்கொண்டது திமுக.
இந்த வெற்றி நீண்ட நாட்கள் நீடிக்காமல் வழக்கமான இந்திய அரசியல் நாடகங்களின் ஒரு பகுதியாக சுமார் இரண்டு ஆண்டுகள் மட்டுமே நிரம்பிருந்த திமுக ஆட்சி கலைக்கப்பட்டு மீண்டும் 1991 தேர்தல் அறிவிக்கப்படுகிறது. ஆட்சியை இழந்து நின்ற திமுக மீண்டும் மு.க. ஸ்டாலினையே இந்த தொகுதியில் நிறுத்த, ஜெயலலிதா தலைமையிலான ஒன்றுபட்ட அதிமுக சார்பில் மீண்டும் கே.ஏ.கிருஷ்ணசாமி அவர்கள் மூன்றாவது முறையாக இங்கு போட்டியில் குதிக்கிறார்.
அந்த தேர்தலின்போது ஏற்பட்டிருந்த அனுதாப அலையில் சிக்கி காணாமல் போனவர்களின் பட்டியலில் ஒட்டுமொத்த திமுக வேட்பாளர்களும் (கலைஞர் தவிர) இடம் பிடித்துக்கொள்ள. இரண்டாவது முறையாக கே.ஏ.கிருஷ்ணசாமி அவர்களிடம் தன் வெற்றி வாய்ப்பை இழக்கிறார் மு.க.ஸ்டாலின். மீண்டும் ஒருமுறை அதிமுகவிற்காக ஆயிரம் விளக்கை மீட்டெடுத்த கே.ஏ.கிருஷ்ணசாமி அவர்கள் வழக்கம்போல அமைச்சராக அமர்த்தப்பட்டு இந்த தொகுதியின் அமைச்சர் அடையாளத்தை தொடருகிறார்.
பின்னர் நடைப்பெற்ற 1996, 2001 மற்றும் 2006 தேர்தல்களில் தொடர்ந்து மூன்று முறை மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வெற்றியை பரிசளித்து, சென்னை மேயர், உள்ளாட்சித்துறை அமைச்சர் ஆகிய பதவிகளில் அவரை அமர்த்தி அழகு பார்த்துக்கொண்டிருக்கிறது ஆயிரம்விளக்கு தொகுதி.
தங்கள் எதிர்கால தலைவரின் முதல் அரசியல் முயற்சி தோல்வியில் முடிந்ததை ஒரு சவாலாக ஏற்று முன்னிலும் முனைப்புடன் பணியாற்றுவது என உடன்பிறப்புக்கள் சபதமே எடுத்து இருப்பார்கள் என தோன்றுகிறது, அதைத்தான் 1984க்கு பிறகு இந்த தொகுதியில் நடந்த தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன. அதன்பிறகு நடந்த ஐந்து தேர்தல்களில் நான்குமுறை மு.க. ஸ்டாலின் அவர்கள் இங்கு திமுகவின் கொடியை பறக்கவிட்டுள்ளார்.
இருமுறை பெற்ற தோல்விகளை துடைத்தெறிந்துவிட்டு புத்துணர்ச்சியுடன் எழுந்து நின்ற திமுக ஒருபுறம் இருக்க, இன்னொருபுறம் தெளிவான தாக்குதல் யுக்தி எதுவும் இல்லாமல் தொடர்ந்து தொகுதியை இழந்து நிற்கிறது அதிமுக. கே.ஏ.கிருஷ்ணசாமிக்கு பிறகு ஒரு பலமான வேட்பாளரை இங்கு தயார்படுத்த தவறியது, எம்ஜியாரின் இழப்பு, தலைமையின் தவறான முடிவுகள் என இன்று வரை இழந்த தொகுதியை மீட்டெடுக்க இயலாமல் அதிமுக தள்ளாடிக்கொண்டிருக்க, சரியான நேரத்திற்காக காத்திருந்த திமுக கிடைத்த இடைவெளியில் இழந்த தங்கள் கோட்டையை மீண்டும் மிக பலமாக கட்டி எழுப்பிவிட்டார்கள்.
2001 இல் எந்த கட்சிக்கும் சாதகமான சூழல் இல்லாத நிலையில் இந்த தொகுதியில் நடைப்பெற்ற தேர்தலின் விவரங்கள் கீழே. (Thanks to PIB, Chennai)
மொத்த வேட்பாளர்கள் : 2,10,474
வாக்களித்தவர்கள் : 95,428
வேட்பாளர்: மு.க.ஸ்டாலின் (வெற்றி)
கட்சி : திமுக
பெற்ற ஓட்டுக்கள் : 49,056
வேட்பாளர்: எஸ். சேகர்
கட்சி : த மா கா (மூ)
பெற்ற ஓட்டுக்கள் : 41,782
எந்த நேரமும் தமிழக முதல்வராக பதவி உயர்வு அடையலாம் என்ற நிலையில் இருக்கும் மு.க. ஸ்டாலின் அவர்கள் இனிவரும் தேர்தல்களிலும் இங்கு போட்டியிடும்பட்சத்தில், திமுகவை வெல்வது என்பது அவ்வளவு எளிதாக இருக்காது என்பதுதான் இன்றைய தேதிக்கு இந்த தொகுதியின் நிலை.
-------------------------------------------------------------------------------------------------
உப்பு சப்பில்லாத ஒருநாள் பந்தயத்தில் கூட சச்சின் ஆடுகிறார் அதுவும் சதம் அடிக்கும் நிலையில் இருக்கிறார் என்றால் அவர் ஆடி முடிக்கும் வரையிலாவது தொலைக்காட்சி முன் அமர்ந்திருப்போம். ஏறக்குறைய அதே நிலையில் தான் இருந்தது இந்த தொகுதியும் ஒரு குறிப்பிட்ட தேர்தலின்போது. இந்த தொகுதியில் இவர் ஆட்டத்தை ரசிப்பதற்கு அன்றைய தமிழகம் முழுவதும் மக்கள் காத்திருந்தார்கள், காத்திருந்தவர்களை ஏமாற்றாமல் இவர் ஆடிய ஆட்டம்தான் அந்த தேர்தலின் சரவெடி, அந்த வெடியை கொளுத்தி மகிழ்ந்த அந்த தொகுதி.....
(தொடரும்)
Sunday, November 30, 2008
Subscribe to:
Post Comments (Atom)

2 comments:
ஆயிரம் விளக்கில் தி.மு.க.வின் வாக்கு வங்கியாக விளங்கி வரும் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு பகுதிகளில் தற்போது விடுதலைச் சிறுத்தைகள் ஊடுருவுகின்றனர். அதை சரியாக கவனிக்காத பட்டச்சத்தில் தி.மு.க பின்னடையலாம். (சென்னையின் பல தொகுதிகளில் இதுதான் நிலை என்பது என் கணிப்பு)
நன்றி அப்துல்லா.
திமுக உங்கள் கருத்தை உணர்ந்திருக்கலாம்.
Post a Comment