வேகமாக சென்றுகொண்டிருந்த அந்த புகைவண்டியின் சத்தத்தை ஒரம்கட்டிக்கொண்டிருந்தது வண்டியின் மத்தியில் இருந்த பெட்டியில் இருந்து கிளம்பிய குழந்தைகளின் விளையாட்டு சத்தம். வண்டியை குலுக்கி எடுத்துக்கொண்டிருந்த அந்த பெட்டியில் நான்கு பேர் அமரக் கூடிய கீழ் இருக்கையின் ஜன்னல் ஒரத்தில் இரண்டு குழந்தைகளும் ஒருவர் பக்கத்தில் ஒருவர் அமர்ந்திருந்தார்கள். ஆரம்பபள்ளியில் படிப்பவர்களை போலிருந்தனர் இருவரும். அவர்களின் அடுத்தடுத்த இரண்டு இருக்கைகளில் பணி முடிந்து வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்த இளம் அலுவலரும் அவரது நண்பரும் அலுவலக விஷயங்களை விவாதித்தபடி பயணம் செய்துகொண்டிருந்தார்கள்.
இவர்களின் எதிர் இருக்கையில் இரண்டு குழந்தைகளுக்கும் நேர் எதிராக ஜன்னல் ஒரத்தில் அவன் அமர்ந்திருந்தான். நடுத்தர வயது. சமீபத்தில் சவரம் செய்யப்படாத முகத்தில் முடிகள் கதிர்விடத் தொடங்கியிருந்தன. கலைந்த கேசமும் அழுக்கேறத் தொடங்கியிருந்த உடைகளும் சக பயணிகளிடமிருந்து அவனை வேறுபடுத்திகாட்டியது. அவனுக்கு பக்கத்து இருக்கையில் ஒரு சிறிய பெட்டியும் அதன் மீது ஒரு துணிமூட்டையும், கைப்பையும் வைக்கப்பட்டிருந்தது. அவனுக்கு சொந்தமானவை அவை.
தன் மார்பில் புதைந்து உறங்கிக்கொண்டிருந்த சிறிய குழந்தையை அணைத்தபடி ஜன்னலில் தலைசாய்த்து கண்களை மூடியவாறு அமைதியாக அமர்ந்திருந்தான். அவ்வப்போது சரிந்து கொண்டிருந்த குழந்தையை கண்களை திறக்காமலே லேசான உறக்கத்துடன் ஒவ்வொரு முறையும் சரியாக அணைத்துக்கொள்ள முயற்சி செய்தபடியே தொடர்ந்து கொண்டிருந்து அவன் பயணம். இடையில் ஒரு முறை திடீரென விழித்தெழுந்து எதிர் இருக்கைகளில் அமர்ந்திருந்த இரு குழந்தைகளுக்கும் கைப்பையில் இருந்து பிஸ்கெட் பாக்கெட் எடுத்து கொடுத்தான். தண்ணீர் குடிக்க வைத்தான். வாஞ்சையுடன் அவர்களின் தலையை சிறிதுநேரம் தடவி கொடுத்துவிட்டு யாரிடமும் எதுவும் பேசாமல் மீண்டும் கண்களை மூடித் தூங்கத் தொடங்கினான். அயர்ச்சியும் களைப்பும் அவன் முகத்தை மொத்தமாக குத்தகைக்கு எடுத்திருந்தன.
அவன் வைத்திருந்த பொருட்களுக்கு பக்கத்தில் அடுத்தடுத்திருந்த இரு இருக்கைகளிலும் அமர்திருந்த வயதான தம்பதியினர் செய்தித்தாள்களை வாசித்தவாறு அவ்வப்போது தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டே பயணித்துக்கொண்டிருந்தார்கள். இந்த இரு இருக்கைகளின் மேற்புறத்தில் உள்ள இடங்களை யார் யாரோ தங்கள் பொருட்களை கொண்டு நிரப்பியிருந்தார்கள். பிரிக்கப்படாத USHA FAN பெட்டியின் பக்கத்தில் நெருக்கியபடி அமர்ந்திருந்த இளைஞன் ஒருவன் தன் கால்களை எதிர்புறத்தில் உள்ள இருக்கையின் சிறிய இடைவெளியில் கிடத்தியாவாறு L போன்ற கோணத்தில் அமர்ந்திருந்தான்.
சமயங்களில் அவன் செய்த அல்லது செய்ய முற்பட்ட பாவனைகள் அநேகமாக அவன் பொட்டி தட்டும் கூட்டத்தை சேர்ந்தவனாக இருக்ககூடும் என்ற சந்தேகத்தை விதைத்துக்கொண்டேயிருந்தது. அவனோ அல்லது வெளிநாடு சென்று திரும்பிய அவனது நண்பனோ / நண்பியோ அளித்திருந்த I LUV NY பொறிக்கப்பட்ட மேற்சட்டை அணிந்திருந்தான். எங்கேயும் கிழிந்திராத டெனிம் முழுக்கால் சட்டை அணிந்து 21-ம் நூற்றாண்டு இளைஞர்களை அவமதித்துக்கொண்டிருந்தான். காதுகளில் வழிந்துகொண்டிருந்த ஐபாட்-டின் இசைக்கு அவன் தலையாட்டிய விதம் தெளிவாக சொல்லியது, அங்கே கச்சேரி செய்து கொண்டிருப்பது M.S.S அல்லது K.J.Y அல்ல என்று. சர்வ நிச்சயமாக எல்விஸ் ப்ரஸ்லியோ அல்லது பாப் மார்லோவாக இருக்கக்கூடும், குறைந்த பட்சம் பப்பி லஹரி.
கீழே அமர்திருந்தவர்களின் இருக்கைகளுக்கு பக்கவாட்டில் ஒருவர் மட்டுமே அமரக்கூடிய எதிர் எதிர் இருக்கைகளை இளம் தம்பதியினர் ஆக்ரமித்திருந்தனர். தன் கைகளில் இருந்த பாலகுமாரனின் மெர்க்குரிப்பூக்களில் தன்னை தொலைத்துவிட்டிருந்தாள் அந்த இளம் மனைவி. எதிரே கன்னத்தில் கைகளை குவித்தவாறு அமர்ந்திருந்த அவளின் கணவன், தன் மனைவியின் அழகை முதல் முறையாக பார்ப்பவன் போல அவளை ரசித்தபடி பயணித்துக்கொண்டிருந்தான்.
பெட்டியின் பிற இருக்கைகளில் அமர்ந்திருந்த மக்கள் அவரவர் சக்திக்கு ஏற்றபடி டெஸிபலை கூட்டியோ குறைத்தோ பேசியபடியோ பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்தார்கள். முறுக்கு விற்பவர்களும் டீ விற்பவர்களும் பெட்டியில் உறங்கிக்கொண்டிருந்தவர்களின் தூக்கத்தை கலைத்து தங்கள் பூர்வ ஜென்ம பாவத்தை கழுவிக்கொண்டார்கள். இயல்பாய் சென்றுகொண்டிருந்த பயணத்தில் திடீரென “பர்தேசி பர்தேசி ஜானா நஹின்” என உச்சஸ்தாதியில் பாடியபடி யாசகம் கேட்கும் ஒருத்தி அந்த பெட்டிக்குள் நுழைய அதுவரை இரைச்சலாக இருந்த பெட்டி முழுவதையும் அமைதி கைப்பற்ற தொடங்கியது. அவளின் பாடலுக்கு நடுவே சில்லரைகள் தட்டில் விழும் சத்தம் சந்தத்தை கூட்டிக்கொண்டே போனது. டிக்கெட் பரிசோதகரை பார்த்த ஒரு கணம் தன் குரலை தாழ்த்தியவள் பின்பு ஏதோ நினைத்தவளாய் உச்சஸ்தாதியில் பாட ஆரம்பித்துவிட்டாள். சில்லரை இல்லாதவர்கள், இருந்தும் கொடுக்காதவர்கள் அவள் பாடிக்கொண்டிருந்ததை உள்ளுக்குள் ரசித்தபடி அமர்ந்திருந்தார்கள்.
யாசகம் கேட்பவள் நெருங்குவதற்குள் அவளுக்கு கொடுப்பதற்கு தயாராக எல்லோரும் மறந்துபோன நாலாணாவை தங்கள் பாக்கெட்டுக்களில் தேடத்தொடங்கினார்கள் அந்த இளம் கணவனும் பொட்டி தட்டும் இளைஞனும். வயதான தம்பதியினர் அவளுக்கு கொடுப்பதற்காக ஒரு பிஸ்கெட் பாக்கெட்டை எடுத்து கையில் வைத்துக்கொண்டார்கள். மார்போடு குழந்தையை அணைத்திருந்த அவன் இப்போது வாயை லேசாக திறந்தபடி ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிருந்தான்.
.ஜன்னல் ஓரத்தில் அதுவரை அமைதியாக அமர்ந்திருந்த இரு குழந்தைகளின் முகத்திலும் மெலிதான சந்தோஷம் பரவ தொடங்கியது. திடீரென சூழப்பட்ட இள அமைதியும் புரியாத மொழியில் பாடிக்கொண்டிருந்த யாசகம் கேட்பவளின் குரலும் அந்த இரு குழந்தைகளையும் வெட்கத்திலும் சந்தோஷத்திலும் ஆழ்த்தியது. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து புன்னகைத்துக்கொண்டார்கள். மறக்காமல் பிறர் தங்களை பார்க்கிறார்களா என்பதையும் ஒருவித வெட்கத்தோடு நோட்டம் விட்டுகொண்டார்கள். குறிப்பாக தங்கள் எதிரில் உள்ளவனை மெலிதான அச்சத்தோடும் குறைவான புன்னகையோடும் பார்த்துக்கொண்டார்கள்.
அவன் உறக்கம் கலையவில்லை என்பதை உறுதி செய்துகொண்டபின் அந்த சிறுவன் மட்டும் மெல்ல தன் இருக்கையை விட்டு இறங்கி நேர்வாட்டில் நடப்பதற்காக இருக்கும் வழியின் தூரத்தில் பாடியபடியே வந்து கொண்டிருந்த அவளை பார்த்தபடி நின்று கொண்டான். பாடிக்கொண்டிருந்தவள் மெல்ல நடந்து முன்னேறி இவர்களின் இருக்கைக்கு அருகில் வர வர, சிறுவன் அவளைப்பார்ப்பது பின்பு ஒடிச் சென்று தன் இருக்கையில் அமர்ந்து கொள்வது என விளையாட ஆரம்பித்தான். பாடிக்கொண்டிருந்தவளின் தோற்றம் சிறுவனுக்கு பயத்தையும் வியப்பையும் ஒரு சேர கொடுத்தது.
ஒருகட்டத்தில் மெல்ல தன் தலையை மட்டும் வெளியே நீட்டி தங்கள் இருக்கைக்கு மிக அருகில் வந்துவிட்ட பாடுபவளை பார்த்தவுடன் சட்டென முகத்தை உள்ளிழுத்துக்கொண்டான். சிறுமியும் அவனை பாடுபவளை நோக்கி தள்ளிவிடுவதைபோல பாவனை செய்து அவனுடன் சேர்ந்து விளையாடத்தொடங்கினாள். பாடிக்கொண்டிருந்தவள் இவர்களின் இருப்பிடத்தை கடந்து சென்றவுடன் மீண்டும் சிறுவன் ஒடிச்சென்று அவளை ஒருமுறை பின்னால் இருந்து பார்த்துவிட்டு மறுபடியும் ஒடிவந்து தன் இருக்கையில் அமர்ந்துகொண்டான் இந்த விளையாட்டினூடே அந்த இரு குழந்தைகளின் குதூகல குரலும் மெல்ல உயரத்தொடங்கியிருந்தது…எதிர் இருக்கையில் குழந்தையை அணைத்தபடியே தூங்கிக்கொண்டிருந்தவனின் உடலில் எந்த ஒரு சலனமும் இல்லை. மிக ஆழ்ந்த உறக்கத்திற்குள் சென்றுவிட்டிருந்தான். திறந்திருந்த வாயின் ஒரங்களில் லேசாக எச்சில் ஒழுக ஆரம்பித்திருந்தது.
சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்த குழந்தைகள் இருவரும் மீண்டும் ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டும் தங்கள் முகபாவனைகளால் ஒருவரை ஒருவர் பயமுறுத்திக்கொண்டும் விளையாட்டை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த தொடங்கியிருந்தார்கள். அவ்வப்போது கிறீச்சிட்டு எழுந்த அந்த மழலைகளின் குரல் சுற்றியிருந்தவர்களுக்கு எந்த ஒரு இடைஞ்சலையும் ஏற்படுத்தியிருக்கவில்லை. மெர்க்குரிப்பூக்களும், பத்திரிகையின் பக்கங்களும், ஐபாட்-டும் வழக்கம்போலவே இயங்கிக்கொண்டிருந்தன.
மெல்ல ஆரம்பித்த குழந்தைகளின் விளையாட்டு அவனுக்கு பக்கத்தில் இருந்த துணிமூட்டைக்கு பரவியது. தூங்கிக்கொண்டிருந்த அவனுக்கு தெரியாமல் லாவகமாக துணி மூட்டையை உருவிவிட்ட சிறுவன் அதை அந்த சிறுமியை நோக்கி வீசத்தொடங்கினான். அவளும் பதிலுக்கு அவன் மீது துணி மூட்டையை வீசி எறிந்தாள். ஒவ்வொரு முறை மூட்டையை அடுத்தவர் மீது எறியும்போது அவர்கள் எழுப்பிய ஆரவார கூச்சல் அந்த பெட்டியை லேசாக உலுக்கியது. அருகில் அமர்ந்திருந்த வயதான தம்பதியும், மெர்க்குரிப்பூவை வாசித்துக்கொண்டிருந்த பெண்மணியும் குழந்தைகளை பயமுறுத்துவதை போல பார்த்துவிட்டு மறுபடியும் தங்கள் வேலைகளில் மூழ்கத்தொடங்கினார்கள். அலுவலக நண்பர்கள் குழந்தைகளை நோக்கி ஒரு புன்முறுவலை வீசிவிட்டு தங்கள் விவாதத்தை தொடர்ந்தார்கள். மேலே அமர்ந்திருந்தவன் கொடுத்த சாக்லெட்டை வெட்கத்துடன் வாங்கிக்கொண்ட இரு குழந்தைகளும் தங்களை மறந்து அங்கும் இங்கும் ஒடி விளையாட ஆரம்பித்துவிட்டார்கள். ஒருத்தரை ஒருத்தர் கத்திக்கொண்டே துரத்துவது, மேலே விழுந்து புரள்வது, கீழே வைத்திருக்கும் பெட்டிகளின் மீது ஏறுவது என அந்த ரயில் பெட்டி முழுவதையும் தங்கள் வசப்படுத்திவிட்டார்கள்.
நேரம் செல்ல செல்ல படித்துக்கொண்டும், இசையை ரசித்துக்கொண்டும், நின்றுகொண்டும் வந்த மற்றவர்களுக்கு குழந்தைகளின் கூச்சலும், அங்குமிங்குமாக ஒடிக்கொண்டிருந்த அவர்களின் ஒட்டமும் லேசான தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. அங்குமிங்கும் ஒடிக்கொண்டிருந்த சிறுவனை மூன்றாவது இருக்கையில் அமர்ந்திருந்த வயதான பெண்மணி மடக்கி பிடித்து ஒரு பொய்யான பயமுறுத்தலுடன் சத்தம் போடாமல் விளையாடுமாறு சொல்லிவிட்டு அவனை விடுவித்துவிட்டாள். அதன்பின் சிறிது நேரம் அமைதியாக விளையாடிய குழந்தைகள் மீண்டும் தங்களை அறியாமலேயே பெரும் சத்தத்துடன் விளையாடத் தொடங்கிவிட்டனர். ஒரு கட்டத்தில் வேகமாக சென்றுகொண்டிருந்த அந்த புகைவண்டியின் சத்தத்தை ஒரம்கட்டிக்கொண்டிருந்தது வண்டியின் மத்தியில் இருந்த பெட்டியில் இருந்து கிளம்பிய குழந்தைகளின் விளையாட்டு சத்தம். ஜன்னலோரம் தூங்கிக்கொண்டிருந்த அவன் லேசாக குறட்டைவிட ஆரம்பித்திருந்தான்.
பெட்டியில் இருந்தவர்கள் லேசாக பொறுமை இழந்து முணுமுணுக்க தொடங்கினார்கள். தங்கள் படிப்பிற்கும், இசைக்கும், தனிமைக்கும் குழந்தைகளின் விளையாட்டு இடைஞ்சலை ஏற்படுத்துவதாக எல்லோரும் ஒரே மாதிரியாக சிந்திக்க தொடங்கியிருந்தார்கள். சிலர் குழந்தைகளிடம் நேரடியாகவே கடிந்து கொண்டார்கள், சிலர் லேசாக அதட்டல் போட்டார்கள்..அதட்டும்போது அடங்குவதும் சிறிது நேரத்தில் பழையபடி ஒடி விளையாடுவது என மாறி மாறி ரணகளபடுத்திக்கொண்டிருந்தார்கள் குழந்தைகள். ஜன்னல் ஒரத்தில் அமர்ந்திருந்தவன் லேசாக அசைவது போல் அசைந்து மீண்டும் உறக்கத்தை தொடர்ந்தான். கூட்டம் வேகமாக பொறுமை இழக்கத்தொடங்கியது.
தூங்கிக்கொண்டிருப்பவனை எழுப்பி குழந்தைகளை கண்டித்து அடக்க சொல்லலாமா அல்லது அவன் விழிக்கும் வரை காத்திருக்கலாமா என எல்லோரும் மனசுக்குள் பட்டிமன்றமே நடத்த ஆரம்பித்துவிட, எதைப்பற்றிய கவலையும் இல்லாமல் குழந்தைகள் தங்களின் பின்புறத்தில் இருந்த இருக்கைகளின் பக்கமாக சென்று இன்னும் ஆரவாரத்துடன் விளையாட ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்துவிட்ட பயணிகள் சிலர் கூட்டமாக சென்று ஜன்னல் ஒரத்தில் தூங்கிக்கொண்டிருந்தவனின் தோள்பட்டையை தட்டி அவனை எழுப்பிவிட்டனர். லேசாக தலையை திருப்பி கண்களை திறந்தவன் எதிரில் குழந்தைகள் இல்லாததை கண்டு திடுக்கிட்டு எழ பெட்டியில் இருந்தவர்கள் இதற்காகவே காத்திருந்தவர்கள் போல அவன் மீது பாயத்தொடங்கிவிட்டார்கள். குழந்தைகளை இப்படி விளையாடவிட்டு விட்டு அப்படி என்ன தூக்கம், அவர்கள் போடும் சத்தமும் ஆட்டமும் தங்களை இடைஞ்சல் படுத்துவதாகவும் சொல்லிவிட்டு, அவர்களை கூப்பிட்டு கண்டித்து ஒரே இடத்தில் உட்கார வை என குதறி எடுத்துவிட்டார்கள். இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே பக்கத்து இருக்கை பக்கமாக ஓடி விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் தங்கள் இடத்தை நோக்கி ஓடி வர, விழித்த நிலையில் நின்று கொண்டிருந்த அவனை கண்டதும் மிரட்சியுடன் மெல்ல நடந்து அவன் அருகில் செல்ல, சடாரென ஒரு கையால் அவர்களை பிடித்து இழுத்தவன் முதுகில் ஒங்கி அறைந்துவிட்டு பின் ஒரு நொடி நிதானித்து அப்படியே குனிந்து குழந்தைகளை தன்னோடு அணைத்துக்கொண்டான். வலியாலும் பிறர் முன்னால் தங்களை அடித்துவிட்ட தாழ்வு மனநிலையாலும் அதுவரை சந்தோஷத்தில் பறந்துகொண்டிருந்த குழந்தைகளின் முகத்தில் வழிந்த கண்ணீர் அவன் சட்டையை ஈரமாக்கியது தன் தோளில் சாய்ந்து அழுத குழந்தைகளை அப்படியே அள்ளி தூக்கியவன் அவர்களை மார்போடு அணைத்தபடி தன் இருக்கையில் சரிந்தான். சில நொடிகளில் தலைகீழாக மாறிவிட்ட நிகழ்வுகளால் வாயடைந்து நின்றுகொண்டிருந்த ஒட்டு மொத்த கூட்டமும் அங்கிருந்து விலக மனமில்லாமல் நின்றிருக்க முதல் முறையாக மெல்ல பேசத்தொடங்கினான் அவன்….
என் குழந்தைகளால் உங்களுக்கு ஏற்பட்டுவிட்ட இடைஞ்சலுக்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இவர்களின் தாய் இரண்டு நாட்களுக்கு முன் இறந்துவிட்டாள். அவள் இறந்த சோகத்தில் இரண்டு நாட்களாக அழுதுகொண்டிருந்த குழந்தைகளுக்கு ரயில் பயணம் மிகவும் பிடிக்கும் என்பதால் ஒரு மாறுதலுக்காக அடுத்த நகரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு அவர்களை அழைத்துகொண்டு போய்கொண்டிருக்கிறேன். சரியான தூக்கம் இல்லாததாலும் கடுமையான சோர்வினாலும் நான் சிறிது கண்ணயர்ந்து விட்டதால் குழந்தைகளால் உங்களுக்கு ஏற்பட்டுவிட்ட சிரமத்தை கவனிக்க இயலாமல் போய்விட்டது. என்னையும் என் குழந்தைகளையும் மன்னித்துவிடுங்கள். இனிமேல் இவர்களால் உங்களுக்கு எந்த தொந்தரவும் இருக்காது. தயவு செய்து அவரவர் இருக்கைகளுக்கு செல்லுங்கள் என கூறிவிட்டு மூன்று குழந்தைகளையும் அணைத்தபடி ஜன்னலை அண்ணாந்து பார்க்க ஆரம்பித்தான்.
அவனை கடிந்து கொள்வதற்காக கூடிய அத்தனை கூட்டமும் மெல்ல கலைந்து அவர் அவர் இருக்கைக்கு செல்ல தொடங்கினர். சில நிமிடத்திற்கு முன்பு வரை ஆரவாரமாக காணப்பட்ட அந்த பெட்டி சுடுகாட்டைப்போல அமைதியாக சென்றுகொண்டிருந்தது. பெட்டியில் இருந்த ஒவ்வொருவரையும் குற்ற உணர்ச்சி மெல்ல சூழத்தொடங்கியது. குழந்தைகளின் சந்தோஷ கூச்சலைவிட அப்போது நிலவிய மயான அமைதி ஒவ்வொருவரின் மனசாட்சியையும் பிடித்து உலுக்கத்தொடங்கியது. தங்கள் கவலைகளை மறந்து விளையாடிய குழந்தைகளின் மகிழ்ச்சி தங்களால் முடங்கிவிட்டதை நினைத்து மருகத்தொடங்கினார்கள். சில நிமிடத்திற்கு முன்பு வரை குழந்தைகளின் அட்டகாசத்திற்காக முகத்தை சுளுக்கியவர்கள் மீண்டும் அந்த குழந்தைகள் பழையபடி விளையாடமாட்டர்களா என ஏக்கத்துடன் காத்திருக்க……தன் மடியோடு சாய்ந்திருந்த குழந்தைகளை இறுக்கி அணைத்தபடி இருந்த அவன் தூக்கத்தை வலுக்கட்டயாமாக தவிர்த்து ஜன்னலை வெறித்தபடி பயணித்துக்கொண்டிருந்தான்.
